Saturday, December 31, 2011

நேசம் - புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பு

வணக்கம் நண்பர்களே

பொன்வேண்டேன்,
பொருள் வேண்டேன்
மண் வேண்டேன்
மனை வேண்டேன்
நோயற்ற வாழ்வே நான் வாழ வேண்டும்
என்பதே அனைவரின் பிராத்தனையாக இருக்கும்



அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது, அதனிலும் கூன் குருடும் உடல் குறைபாடுகளும் இல்லாமல் பிறத்தல், அதையும் விட இன்று வாழ்நாள் முழுதும் எந்த வித உடல் பிணிகளும் இன்றி நல்நெடும்வாழ்வு வாழ்வதைவிட பெரிய செல்வம் ஏதும் இல்லை. எண்ணற்ற நோய்கள் வாழ்க்கை முறைகளினால் வந்தாலும் பெரும்பாலும் அவைகள் லைஃப்ஸ்டைல் எனப்படும் வாழ்வுமுறை நோய்களே.

இவ்வகை நோய்களின் ஏன் எதற்கு எப்படி என்றே அறியும் முன் உடலை அரித்து விடும் நோய்களில் ஒன்று கேன்சர் எனப்படும் புற்றுநோய். இன்று உலகம் எங்கும் இதனால் உயிர் விடுவோர் எண்ணிக்கை மற்ற அனைத்தையும் விட அதிகம். புற்றுநோய் வரக்காரணம் எவ்வளவோ இருக்கலாம், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், ஆனால் வந்த பின் அதனுடைய பாதிப்பின் அளவையும் நோயின் தீவிரத்தைப்பொறுத்தும் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளது.

எல்லா நோயைப்போலவும் இதனையும் நாம் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் நூறு சதவீத குணப்படுத்தலாம். எப்படி கண்டறிவது என்பதே விழிப்புணர்வு.

இந்த புது வருடத்தில் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு நேசம், முழுக்க முழுக்க புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் அதுகுறித்த நிகழ்வுகளுமாக இணையத்தில் உங்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கிறோம்.


நேசம் - அமைப்பில் இருந்து முதல் விழிப்புணர்வு அறிவிப்பு ஜனவரி முதல் அன்று வெளிவரும். புற்றுநோயை கண்டறிந்து களைவோம், போராடி வெல்வோம்

Friday, December 30, 2011

ஐ லவ் யு செல்லம்

வலைப்பதிவு என்பதே ஒரு கொசுவர்த்திதானே. இந்த வருச கொசுவர்த்தியை சுத்திப்பார்க்கிறேன். ஒவ்வொரு வருசமும் முடியும் போது ஏகப்பட்ட அனுபவங்களும் படிப்பினைகளும் வாழ்க்கையை செப்பனிடுகிறது.

இந்தவருடம் ஆரம்பமே அமர்க்களம். இடது கை உடைந்து 4 கிலோ அளவுக்கு பெரிய கட்டுடன் தான் வரவேற்றேன். ஊரே புத்தாண்டு கொண்டாடும் போதும் கங்கா மருத்துவமனையில் வலியில் புலம்பிட்டு இருந்தேன்.  போனவருடம் முழுதும் இழப்புகளின் வருடம், அப்பா இறந்தது, சில பல பர்சனல் இழப்புகள்னு ஒரே ஆர்ட் ப்லிம் ரேஞ்சுக்கு இருந்தது. இந்தவருடம் மட்டும் சளைச்சதா என்ன?

ஜனவரி கைகட்டுடன் வரவேற்று அனுப்பி பிப்ரவரி  வரும்போதே வாழ்வில் மறக்க முடியாத மாதமாக வந்தது. பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று என் அம்மாவின் மரணம், அதை அடுத்து 4 நாட்களில் மாமாவின் மரணம். மரண அடின்னு சொல்லுவாங்களே அதுதான் இது.


மார்ச் இத்தனை இழப்பிற்கு ஈடு செய்வது போல் எங்க வீட்டின் புது வரவு, என் தங்கை பையன் நந்தன். அவன் சிரிப்பு மட்டுமே எங்கள் இழப்பை கொஞ்சம் தள்ளி வைக்கிறது. ஏப்ரல் மாதம் கட்டு பிரித்து கை ஒரளவிற்கு வந்ததும் அப்பாடான்னு இருந்தது. இதற்கிடையில் இழந்த இன்னொரு பொருளும் மறுபடியும் கிடைத்தது. இனிமேல் பத்திரமா வைச்சுக்கனும்.

ஜூன் முதல் செப்டம்பர் வரையான மாதங்கள் மருத்துவமனையிலேயே பெரும்பாலான நாட்கள் கழிக்க வேண்டியிருந்தது. மாமியாரின் மரணம் வரை இந்த கதை தொடர்ந்தது. மரணங்களை மிக அருகில் பார்த்து பார்த்து மனது அடப்போ இவ்வளவு தானா என்று சலிக்கும் அளவுக்கு இந்த வருடம் எல்லாவிதத்திலும் பாடம் கற்றுக்கொடுத்தது.

போலியான மனிதர்களை வழக்கம் போல கடைசியில் கண்டு ஓடிப்போயிடுன்னு துரத்தி விட்டு, மறுபடியும் வண்டிசக்கரத்தில் எண்ணெய் விட்டு வாழ்க்கை சுற்ற ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு நாளும் கற்றுக்கொடுக்கும் வாழ்க்கையே ஐ லவ் யு. இப்பத்தான் தினம் தினம் வருவதை எதிர்கொண்டு வாழ பிடிக்கிறது. எவ்வளவு சுவாரஸியமா இருக்கிறது. மனிதர்கள் அதுவும் சாதாரணமான மனிதர்களா? எவ்வளவு வகை, ஒவ்வொரு மனிதனும் நிழலில் ஒன்று வெளிச்சத்தில் ஒன்று, இருட்டில் ஒன்றுன்னு ஏகப்பட்ட முகமூடிகளுடன், அவர்கள் நிகழ்த்தும் அல்லது அவர்களை சுற்றி நிகழும் நிகழ்வுகள், கவலைகள், காதல்கள், மரணங்கள், சிரிப்புகள், வேதனை, வலி, சந்தோசம், எல்லாம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.

இத்தனை விசயங்களுக்கு நடுவில் சில பல ஊர் சுற்றல்கள், சிங்கப்பூர், மலேசியான்னு பெரிய கும்பலை கூட்டிட்டு போயி கொண்டு வந்து பத்திரமா விட்டது பெரிய அனுபவம். வழக்கம் போல் என் நட்புகளும் உறவுகளும் சீண்டியும் சிரித்தும் தொடர்கிறது.

இணையத்தில் வந்த இந்த 5வதுவருட ஆரம்பம் மகிழ்ச்சியாகவே தொடங்குகிறது. கூகுள் பஸ் சோர்ந்து போன, தனிமையான  பல தருணங்களில் தோள் கொடுத்திருக்கிறது. அதன் மூலம் கிடைத்த நட்புகளுக்கு ஒரு தனி நன்றி. எதையும் உடனே பகிரவேண்டும் வாழ்த்தோ திட்டோ சிரிப்போ அவர்களுடன் சேர்ந்து இருக்கவேண்டும்னு தோனியது. தேங்க்ஸ் மக்கா :)

இந்த வருடம் புதுசா எதுவும் உறுதிமொழி இல்லை, பிடிக்காததை சட்டுன்னு தூக்கி எறியும் இந்த குணம் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா பண்ணனும். இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா மனிதர்களை படிக்கனும். அம்புட்டுதான். வழக்கம் போல கலாய்ச்சு, கலாய்க்கப்பட்டு, கவலைகளை பிரித்து தீர்வு கண்டு சந்தோசமா இருக்கனும். நீங்களும் உங்க எண்ணங்கள் எல்லாம் ஈடேறி சந்தோசமா இருங்க.

சில நண்பர்களுடன் சேர்ந்து உருப்படியா ஒரு வேலை செய்யலாம்னு இருக்கேன். உங்க ஆதரவு எப்பவும் அதற்கு தேவை. ஜனவரி ஒன்று அன்று அறிவிக்கலாம்னு இருக்கோம். அதற்கான உங்க ஆதரவுக்கு இப்பவே ஒரு பெரிய நன்றி சொல்லிக்கறேன்.



இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :)

Saturday, December 24, 2011

பொற்சித்திரமே பொக்கிஷமே



செல்லக்குட்டி, என் தங்கம், என் வெள்ளி .. இதெல்லாம் நான் பப்புவை கொஞ்சுவது இல்லை. அவ என்னை சொல்றது. இப்படி சொன்னா எதோ ஒரு காரியம் ஆகவேண்டி இருக்குன்னு அர்த்தம். தேவதைகளில் வால் முளைத்த தேவதையை பார்க்கனுமா? எங்க வீட்டில் இருக்கா.

சில நேரம் ரொம்ப பேசறாளேன்னு நினைக்கும் போது கூட இப்ப பெரும்பாலும் குழந்தைகள் அப்படித்தான் பேசுகிறார்கள், நாம தடுத்து ஒண்ணும் ஆகப்போவதில்லைன்னு விட்டுடுவேன். இருந்தாலும் எங்க அம்மினி கொஞ்சம் ஓவர் தான்.

பப்பு, ஒரு நடமாடும் இல்ல எப்பவும் ஆடிட்டே நடக்கும் ஒரு பட்டாம்பூச்சிதான். காலையில் எழுந்ததில் இருந்து ஆரம்பிக்கும் அவள் அட்டகாசங்கள் இரவு தூங்கும் போதும் சில நேரம் தூக்கத்திலும் தொடரும். எழுந்து வரும் போதே கட்டிலில் இருந்து கூப்பிடுவா, அவளை உப்பு மூட்டை தூக்கி வரனும், இனிமேல் முடியாது பெரிய பொண்ணு ஆயிட்டேன்னு சொன்னா, நீங்க தானே சொன்னீங்க எத்தனை வயசானாலும் நான் உங்க குழந்தைன்னு திருப்பி கேட்பாள். ப்ரஷ் பண்ண நாந்தான் தொடங்கி விடனும். அவ ரெடியாகி வந்ததும் எப்படி இருக்கேன்னு இடுப்பில் கை வைத்து ஸ்டைலா கேக்கும் போது பதில் ரெடியா வச்சிருக்கனும்.

பப்பு, அவளை சுற்றி இருக்கும் அனைவருக்கும் ஒரு உடனடி புன்னகை உற்பத்தி செய்யும் மந்திரக்காரிதான். நாம் யோசித்து சொல்வதை உடனே சொல்லி அசத்துவாள், சுத்தம், அவளோட பொருட்களை எடுத்து வைத்துக்கொள்வது. முக்கியமா சேமிப்பு, தெரியாமல் வெளியில் 5 ரூபாய் வைத்தால் கூட அது அவள் கணக்கில் போயிடும். அவகிட்ட கடன் வாங்கறதை நான் தான் நிறுத்தனும். நேத்து காய்க்காரம்மாவுக்கு தர 40 ரூபாய் எடுத்ததை நைட்டே கேட்டு வாங்கிட்டாள். எதுவும் கேக்கவே மாட்டாள். பிறந்த நாளுக்கு கூட அதிகபட்ச அவளோட ஆசை கலர்பென்சிலாகத்தான் இருக்கும். அவளோட ஷாப்பிங் போன கதை தனி பதிவா வரும்.

காய்ச்சல், சளி எதுவுமே அவளை சோர்ந்து போகச்செய்யாது. எதுவந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இப்பவே இருக்கு. போன மாதத்தில் கிட்டத்தட்ட 15 நாள் காய்ச்சலில் இருந்தாள், ஒரு நாள் கூட அழவோ, வேறு எந்த வித சோர்வையுமோ முகத்தில் காட்டவே இல்லை. டாக்டர் என்ன சொன்னாரோ அதை நாம் மறந்தாலும் அவ மறக்கவே மாட்டாள், டயட் என்னன்னு கேட்டுட்டு வந்தாள், அதைத்தவிர வேறு எதையும் தொடக்கூட இல்லை.

பப்பு ரொம்ப ப்ராக்டிகல், யாருடா உனக்கு பெஸ்ட் ப்ரெண்டுன்னு கேட்டேன் அவ பதிலில் ஆடிப்போயிட்டேன். எதுக்கும்மா ஸ்கூலில் ப்ரெண்டு? க்ளாஸ் முழுதும் ப்ரெண்ட் தான், ஆனா யாரும் க்ளோஸ் ப்ரெண்ட் இல்லம்மா, அப்பறம் அவங்க பேசலை இவங்க பேசலைன்னு புலம்பனும், எனக்கு அக்காவும் நீங்களூம் தான் பெஸ்ட் ப்ரெண்ட்.  க்ளோஸ் ப்ரெண்டுனா பிரச்சனைம்மா. எல்லார்கிட்டயும் பேசுவேன்.,பை சொல்லிட்டு வந்துடுவேன்னு.. வர்ஷாவும் இப்படித்தான். இந்த தெளிவு கடைசி வரை இருக்கட்டும்.


என் மாமியார் இறந்த போது சிலர் அழுதபோது பப்பு அவளோட கஸின் அவ வயதுதான் அவன்கிட்ட சொல்றா, ”எதுக்கு அழறாங்க? வலியோட இருந்தாங்க, இப்ப காட் கிட்ட போயிட்டாங்க, அங்க வலிக்காதாம், காட் கிட்ட போனா ஹேப்பியா இருப்பாங்க, அப்பறம் எதுக்கு நாம அழனும்னு”



பப்பு, நீயும் வர்ஷாவும் என் குழந்தைகளாக வந்ததால் நான் தான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கேன். தேங்க்ஸ்டா செல்லம். நீ என் பொக்கிஷம் தான். எப்பவாவது வாழ்க்கையில் சோர்வுறும் தருணங்களில் தெய்வம் போல் ஒலிக்கும் உன் குரல் தான் என் அடுத்த அடிக்கு ஆதாரம். இப்ப மாதிரியே எப்பவும் சந்தோசமா விரும்பிய அனைத்தும் கிடைத்து ஆனந்தமா இருடா செல்லம்.



இன்னைக்கு அவளுக்கு ஸ்பெஷலா அவ ட்ரெஸ் கலரில் ஒரு ரோஸ் வேற எங்க வீட்டில் பூத்தது, அவளுக்கான சிறப்பு ஆசிர்வாதம்.

அம்மா உங்களுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்னு கேட்கும் போது இந்த உலகம் அளவுக்குன்னு சொன்னேன், அவ சொன்னது அவளோட இதயம் அளவுக்காம்.


தேங்க்ஸ்டா குட்டி


உனக்கு பிடிச்ச இந்த பாடலுடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என் ரவுடி பப்பு

இன்னைக்கு தான் ராம் க்கும் பிறந்த நாள் ஹேப்பி பர்த்டே ராம்



Friday, December 16, 2011

பல்ப் ஃப்ரம் பப்பு

இது கூகுள் பஸ்ஸில் எழுதியது. ஒரு தொகுப்பா எடுத்து வைத்து பப்பு பெரியவளானதும் கொடுக்கனும்

========

பப்பு சீக்கிரம் சாப்பிடு கண்ணு

அரை மணி நேரம் கழிச்சு அதே பருப்பு சாதம் நோண்டிட்டு இருந்தா

ஏநான் :என்னடி பண்றே. சீக்கிரம் சாப்பிடுன்னு சொன்னனே, நீ சாப்பிடற 4 பருக்கை பருப்பு சாதத்துக்கு அரை மணி நேரமா?

பப்பு : நான் டயட்டும்மா...

நான் : ங்ஙே!!!! என்னது டயட்டா?

பப்பு: ஆமாம்மா டயட்டுன்னா உங்களை மாதிரி இல்ல, நிஜ டயட்டு.. மீதி ஆனதை சாப்பிட மாட்டேம்மா.

-------
1.பப்புவும் வர்ஷாவும் சாப்பிட்டு இருந்தாங்க, ஒரு மாசமா டிவிக்கு தடா, வாரம் 3 மணி நேரம் டிவியில் ப்ரோக்ராமும், ஒரு படம் டவுன்லோடியும் பார்க்கலாம், சாய்ஸ் இருக்கு டிவி வேண்டாதவங்க கம்ப்யுட்டர் கேம்ஸ் ஆடலாம், யாரு குறைவா டிவி, கம்புட்டர் முன்னாடி இருக்காங்களோ அவங்களுக்கு வாரம் 50 பாயிண்ட், 500 பாயிண்ட் யாரு முதலில் ரீச் பண்றாங்களோ அவங்க இஷ்டப்படி 150 ரூபாய்க்கு ட்ரீட், ஒன்லி சாப்பாடு, ட்ரீட் வேண்டாதவங்க அந்த காசை உண்டியில் சேர்த்துடலாம். வர்ஷா 800, பப்பு 600 ரூபாய் வச்சிருக்காங்க, அதுல நான் 300ரூபாய் கடன் வாங்கினேன், மேட்டர் அது இல்ல வர்ஷாக்கு மேத்ஸ்ல இண்ட்ரஸ்ட்னு ஒன்னு சொல்லிதந்திருக்காங்க, அவ அதை பப்பு கிட்ட சொல்ல, பப்பு 12% வட்டி கணக்கு போட்டு அதை அவங்க பாட்டிகிட்ட செக் பண்ணி வந்து என்கிட்ட கேக்குது...அந்த 300 ரூபாய்க்கு இது இண்ட்ரஸ்ட்ம்மா, அதையும் சேர்த்துடுன்னு :((

2. எதோ சினிமா பாட்டு பாடிட்டு இருந்தா நான் முறைச்சேன், அதுக்கு ரொம்ப கூலா சொல்லுது எதை கேக்கறதா இருந்தாலும் என்கிட்ட கேக்காதீங்க, என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேளுங்க, அவங்கதான் சொல்லித்தந்தாங்க, நான் சும்மா பாடிப்பார்த்தேன்னு.

--------
பப்பு :அம்மாஆஆ, நீங்க என்ன சொன்னாலும் கலைஞருக்கு ஓட்டு போட மாட்டேன்

நான் : சுட்டி டிவி அவங்களுதுதான், ஓட்டு போடலைன்னா எப்படி தெரியும்?

பப்பு : ஓ அப்படியா? சரி போடறேன் :))

வருங்கால அரசியல்வாதி ரெடி


------
நான் : பப்பு போயி குளிடி..

பப்பு : ஒரு லுக்கோடு - ம்ம் எனக்கு ஆர்டர் போட அந்த ஆண்டவனே யோசிப்பான்

நான் : என்னடி சொல்றே?

பப்பு : பஞ்ச் டயலாக்கும்மா :))))

------
ஒவ்வொரு வருசமும் சித்ராபவுர்னமி மிக சிறப்பா சத்யநாராயண பூஜை ராமின் சித்தி வீட்டில் செய்வது வழக்கம், நேத்து நைட் பப்புவிடமும் வர்ஷாவிடமும் நாளைக்கு சாயங்காலம் இந்த பூஜைக்கு போறோம்னு சொன்னேன்..

இதற்கு முன் ஒரு சின்ன ப்ளாஷ்பேக் : பப்பு,வர்ஷா ரெண்டு பேருக்கும் பிடிச்ச கதை அவங்க பிறந்த கதைதான். வயிற்றில் இருக்கும் போது என்ன நடந்தது, எப்படி பிறந்தார்கள்ன்னு கேள்வியில் துளைச்சுடுவாங்க, டைரி எழுதும் பழக்கம் இருந்தது , (இப்ப இல்லை) அதை கொடுத்து படிச்சுக்க சொல்லிடுவேன். அப்படி ஒரு சித்ரா பவுர்னமி விரதத்திற்கு பிறகு பிறந்தவள் பப்பு, இதை சொல்லியிருந்தேன்.

மறுபடியும் நேத்து நைட் ஸ்டோரி..

நான்: பப்பு சீகிரம் கிளம்பனும், பாட்டிகூடவே போயிட்டு வந்திடலாம்

பப்பு : நான் வரலம்மா

நான் : ஏண்டா

பப்பு: இந்த பூஜைக்கு போயித்தானே நான் பிறந்தேன் , நாளைக்கு போயிட்டு வந்தா இன்னொரு பாப்பா வரும், எனக்கு பிடிக்கலை, நான் வரலை, எப்பவும் நாந்தான் பாப்பா........(பாரேன் இந்த புள்ளக்குள்ள இம்புட்டு இருக்கு)

நான் ----- பல்ப்பா எறியுது என்னை சுத்தி :(((((((

#புள்ளயா பெத்து வெச்சிருக்கேன்

Monday, December 12, 2011

அக்கம் பக்கம்

பக்க்த்து மாநிலமான கேரளாக்கும் நமக்கும் பங்காளி தகராறு முட்டிகொண்டு நிற்கும் இந்த நேரத்தில் தண்ணி தராத கேரளாவை கடுமையா கண்டிச்சுட்டு, முடிஞ்சா ப்ரித்வியை நாடுகடத்தி கோவைக்கு அனுப்புமாறு பணிவுடன் உம்மன்சாண்டி அங்கிளை கேட்டுக்கிறேன். வாளையாறு டேம்க்கு யாராவது போயிருக்கீங்களா? அதுவும் இருப்பது தமிழ்நாட்டில் தான் ஆனால் பயன் கேரளாவிற்கு..இதுக்கு ஒரு நாளைக்கு தனியா பொங்கலாம். கோவையில் பாதிக்கும் மேல் கேரள மக்கள் தான் இருக்கிறார்கள், தனியே கோவில், க்ளப், சங்கம், பள்ளிக்கூடம் என்று மினி கேரளாவே இருக்கிறது. ம்ம்ம் பெருந்தன்மையின் பரிசுதான் இது.

-------
கிட்டத்தட்ட ஆண்டு முடிவை நெருங்கும் நேரம் இந்த வருடம் முழுதும் அசைபோட்டுப்பார்த்தால் கற்றதும் பெற்றதும் ரொம்ப அதிகம். தனி செண்டி பதிவா தேத்திடலாம் விஜி ..டோண்ட்வொர்ரி

------
தங்கம்னு பேப்பரில் எழுதி லாக்கரில் வைக்கும் நிலைமைக்கு வந்துடுவோம் போல. எங்களை மாதிரி குடும்ப இஸ்திரிகளுக்கு விலையை கேட்டாலே திக்குன்னு இருக்கு. சேமிப்பின் பழக்கத்தை வலியுறுத்தும் தங்க விலையேற்றத்திற்கு ஒரு ஜே !!

------
 எங்கள் தெருவில் ஒரு பெண், கார்ப்பரேசனில் பணி புரிகிறார். 42 வயதானவர். அசாதாரணமான உடல் பருமன். அதைக்குறைக்க அவர் விஎல்சிசி சென்று ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டாராம். அதில் அவரின் இரு தொடைகளும் உணர்ச்சி இழந்து போனது. உடல் முழுதும் கொழுப்பு கட்டிகளும் படர்ந்துவிட்டது. ஏஞ்ஜெல் என்று இன்னொரு உடல்பருமன் குறைக்கும் நிலையம் சென்று சிகிச்சை எடுத்ததில் அவருடைய தோல் தொடையிலிருந்து கால் பாதம் வரை கருகினது போல ஆனது.

யாருக்கு உடல் எடை குறைக்கனுமோ தயவுசெய்து சாதாரண உடற்பயிற்சி, சரியான உணவு முறைமூலம் மட்டுமே குறைக்க முயற்சி செய்யுங்கள்,. நான் அந்த பெண்னை பற்றி சொன்னது 10 சதவீதம் தான். உக்கார்ந்தால் எழ முடியவில்லை. திரும்பி படுக்க முடியவில்லை. :(


இந்த மாதிரி நிலையங்களை போகும் முன் தெரிந்தவர்களிடம் கேட்டு போங்கள், யாரோ ஒரு சிலருக்குதான் சரிப்படும். எனக்கு தெரிந்து இந்த சிகிச்சை முறை ஒத்துக்கொள்ளாதவர்கள் தான் அதிகம்
--------
நேத்து பாரதியார் பிறந்த நாள், இன்னைக்கு சூப்பர் ஸ்டார் பிறந்தநாள். சமூகவலைத்தளங்களில் திடீர் பாரதி பாசத்தை தாங்க முடியலை. பாவம் பாரதி. இருந்திருந்தா ரொம்ப ஃபீல் பண்ணிருப்பார்,. இம்புட்டு பாசக்காரங்களா இருக்காங்களேன்னு.. சூப்பர் ஸ்டார் வீட்டு சமையல் காரருக்கும் ஒரு வாழ்த்து சொல்லிடுங்க. வரலாறு முக்கியம்.-------
கூகுள் பஸ்ஸில் இருந்த வரைக்கும் பொழுது போனதே தெரியாது. ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் விருந்தினர் வீடு மாதிரி இருக்கு, போகலாம்னும் தோனுது போனதும் எப்ப கெளம்புவோம்னும் இருக்கு :)) செட் ஆக இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் போல.
---

தினம் பேப்பர் பார்க்கவே பயமா இருக்கு. இந்த வாரத்தில் 3 பெண் குழந்தைகளுடன் அம்மா தற்கொலை திருப்பூரில், கணவன் மனைவி குடும்பத்துடன் தற்கொலை, பெங்களூரில் 4 டாக்டர்கள் தற்கொலை.. என்ன நடக்குது.. சாவு அம்புட்டு ஈசியா போயிடுச்சா?

------

ஈரோடு பதிவர் சங்கமம் வரும் ஞாயிறு நடக்கிறது. மேலதிக தகவலுக்கு http://www.erodekathir.com/2011/12/2011.html. வாங்க அங்க மீட் பண்ணுவோம் :)

Wednesday, December 7, 2011

கானல் வாழ்க்கை


வீடு வரை உறவு 
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசிவரை யாரோ?
எவ்வளவு உண்மை...


நேற்றிருந்தவர் இன்றில்லை, இன்றிருப்பவர் நாளையில்லை. நிதர்சனம்தான். இன்று இறந்த பிணத்தைப்பார்த்து நாளை இறக்கப்போகும் பிணம் அழுகிறதுன்னு பட்டினத்தாரோ யாரோ சொல்லிருக்காங்க.. ஒரு இழப்பு வாழ்க்கையை அவர்களை சார்ந்தவர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிபோடும்  என்று இதுவரைக்கும் யோசிக்கலை.

சின்னவயதில் சாவு அறிமுகமானது பக்கத்து வீட்டு பாட்டியினால், திடீர்னு இறந்துட்டாங்கன்னுசொன்னாங்க. போயி பார்த்தேன், படுக்க வைத்திருந்தார்கள் அவ்ளோதான் சாவுக்கான அறிமுகம். 7வது படிக்கும் போது என் அப்பிச்சியின் அம்மா (அம்மத்தா) இறந்துவிட்டார்கள்னு பள்ளியில் இருந்து அழைத்து வந்து ஊருக்கு போனோம். அது இழப்பாக தெரிந்ததைவிட உறவு எல்லாம் கூடிய விழாவாகவே இருந்தது. இதற்குப்பிறகு வேறு ஏதும் பெரிதாக பாதிக்கவில்லை.

15வருடங்களுக்கு ஒரு நாள் அலுவலகத்திற்கு வந்த போன் சொல்லிய சேதி, எங்க பக்கத்துவீட்டில் இருந்த நகைக்கடை அதிபர் குடும்பத்துடன் தற்கொலை. திருப்பூரில் 13 பேர் இறந்தது மிகப்பெரிய அதிர்வு. அதும் பிறந்ததிலிருந்து பார்த்தவர்கள் இன்னைக்கு நாயைக்கூட விட்டுவைக்காமல் போய்விட்டார்கள் என்றதும் அதிர்ச்சிக்கு அளவில்லை.

பால்ய சிநேகிதம் என்பது மனதுக்கு மிக நெருக்கமானது, வலியோ சுகமோ பகிரும் உறவு அதுதான். சித்ரா. என் மிக நெருங்கிய தோழியாக இருந்தவள், கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள், படிப்பு சரியாக வராததால் திருமணத்திற்கு அவசரப்படுத்தப்பட்டவள், 13 வருடத்திற்கு முன் ஒரு ஜூலை 8-ல் தீக்குளித்தாள், உயிர் போகாமல் ஒரு நாள் முழுதும் இருந்தாள், என்னைப்பார்க்கனும்னு என் அப்பாவிடம் சொல்லி அனுப்பினார்கள் எனக்கு அவளைப்பார்க்கும் தைரியம் அப்போது இல்லை. இப்போதும் வரவில்லை.. மன்னிச்சுடு சித்ரா. பெரிய கண்களூடன் உன் சாயலில் பாதி கொண்டிருக்கும், நீ தற்கொலை செய்து கொள்ளும் போது 7 மாதக்குழந்தையாக இருந்த உன்  மகனை இப்போது பார்த்தாலும் மனசுக்குள் ஒரு கலவரம் வருகிறது.

ரொம்ப வருடம் கழித்து 4 வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பாவும் அவரைத்தொடர்ந்து 45 நாளில் என் அப்பாவின் அம்மாவும் (தாத்தா- பாட்டி) போய்ச்சேர்ந்தார்கள். இதைவிட என் அப்பா இறந்தது கூட ஒரு அதிர்ச்சிதான். ஆனால் என் கண் முன் நடந்த மரணம், இப்பவும் ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் நினைவில் வருவது. நாலே நாட்கள் கோமாவில் இருந்து வீட்டுக்கு போனதும் ஒரு வினாடி கண்ணைத்திறந்து பார்த்துவுடன் ஒரு சின்ன விக்கலில் உயிரை விட்ட அம்மா.

அம்மா இறந்துட்டாங்கன்னு சுதாரிக்கவே சில நிமிடம் ஆனது,. சரியாயிடுச்சு போலன்னு நினைச்சு அம்மா பாரும்மான்னு உலுக்கி எடுத்தேன். நானும் என் சித்தியும் மட்டுமே அருகில். ஆனால் திறந்து கண்கள் மூடவே இல்லை. முதலும் கடைசியுமாக நினைவு தெரிந்து அம்மாவை கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்தேன். கொடுத்துட்டே இருந்தேன். அழவே தோனலை. கூட இருந்தவர்களின் அழுகுரல் தான் மறுபடியும் இந்த உலகில் கொண்டுவந்தது. அவங்க கண்ணை தானம் தரும்போது என் மாமா உட்பட யாரும் ஒத்துக்கலை. டாக்டர் கடைசியாக மறுபடியும் அந்தக்கண்களை திறக்கும் போது எனக்கு பார்க்கும் அளவு தைரியம் வரவில்லை.

அம்மா இறந்ததுமே உண்மையிலேயே இவ்வளவு நாள் நினைத்தது வாழ்க்கை இல்லை. அர்த்தமில்லாத கோபம், வருத்தம், எல்லாம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. அடுத்த நான்கு நாட்களில் அப்பாவின் ஒரே தங்கையின் கணவர் - என் மாமா ஹார்ட் அட்டாக்கில் இறந்ததும் அடச்சேன்னு ஆயிடுச்சு.

அதெல்லாம் விட இன்னும் வாழ்க்கையின் மேல் பயமும், காதலும், விருப்பமும் வரக்காரணம், என் மாமியாரின் மரணம். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக புற்றுநோயில் போராடி, இவ்வளவுதான் என்று அளவிட முடியாத கஷ்டப்பட்டு, உடலின் ஒவ்வொரு பகுதியும் வலியில் துடித்து, தோல் கருகி, சுருங்கி, உடல் முழுதும் ரணமாகி, கடைசி இருபது நாட்கள் நரகத்தில் இருந்து ஒவ்வொரு அணுவும் வலியை அனுபவித்து ஒரு வழியாக மரணித்தார். அது என்னைப்பொறுத்தவரை அவருக்கு விடுதலைதான்.கடைசிநாட்களில் அவர் கண்ணாடியே பார்க்கவில்லை, ஒரு நாள் விளையாட்டாக போனில் போட்டா எடுத்த வர்ஷாவிடம் அவர் இன்னும் கொஞ்சம் சிரிக்கறேன் இப்ப எடுன்னு. அந்த சிரிப்பு என்பது உதடுகளின் விரிசல் தான்.

ஒரு மரணம் ஒரு தனிமனித மரணம் அல்ல, அது ஒரு தலைமுறையின் முடிவு. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே முடிந்துவிடுகிறது. அவருக்கு பிடித்தது, பிடிக்காததது, விருப்பு, வெறுப்பு, வலி,கோபதாபங்கள். மரணமில்லா பெருவாழ்வு சாத்தியமில்லாதது போல் மறதியும் உடனே வந்தால் பரவாயில்லை. எந்தப்பொருளை பார்த்தாலும் அதோடு சம்பந்தப்பட்ட அவர்களின் நினைவு வந்து இருக்கிறவர்களை கொல்கிறது. மனதை அதிலிருந்து வெளியெடுப்பது அவ்வளவு சிரமம்.

ம்ம் போகிறவர்கள் போகட்டும் மிச்சமிருப்பவர்களுடன் தொடரும் பயணம்..



Saturday, December 3, 2011

கல்யாண நதி

கமலா நேரு பார்க்கில் இங்கேயும் அங்கேயுமாய் சிலர் நின்று உக்கார்ந்து போட்டாவுக்கு சிரித்துக்கொண்டிருந்தனர். கார்த்திக்கும் மாயாவும் குழந்தைகளோடு நிற்க சித்ரா அவர்களை சுற்றி வளைத்து சுட்டுக்கொண்டிருந்தாள்.

"கார்த்திக் போதும் போலாமா' என்று மாயா நகர்ந்தாள்.  காலையில் இருந்து மும்பையை சுத்தி வெறுத்துபோயிருந்தாள் மாயா, எப்போது வீட்டுக்கு போவோம் என்று இருந்தது. கடைசியா மெரைன் ட்ரைவ் போகலாம் ப்ளிஸ் , சொன்ன கார்த்திக்கையும் சித்ரா, குழந்தைகளின் ஆர்வத்தையும்  பார்த்து தலையசைத்தில் தயக்கமும் இருந்தது.

7 மணி ஆகிவிட்டது, இதற்கு மேல் இந்த மும்பை ட்ராபிக்கில் எப்படி வீடு போவது என்று மலைப்பாக இருந்தது மாயாவிற்கு.

"கார்த்திக் ப்ளிஸ் கிளம்பலாம். எனக்கு ஒரு டாக்ஸி வைத்துக்கொடு நானும் குழந்தைகளும் போயிடுவோம்" என்றாள்.

கார்த்திக் "இல்ல நான் ட்ராப் பண்றேன். சித்ராவும் ஆதியும் வீட்டுக்குப்போயிடுவாங்க. உனக்குதான் ஊரு புதுசு நானே ட்ராப் பண்றேன்" என்றான்.

"வேண்டாம் கார்த்திக் நீ டாக்ஸி மட்டும் அரேஞ்ச் பண்ணு" என்று பிடிவாதமாக மறுத்தாள்.

ஒரு நிமிடம் உற்றுப்பார்த்துவிட்டு ம்ம்ம் சரி என்று டாக்ஸியை அமர்த்தினான். 'போனை ஆஃப் பண்ணிடாதே, நான் வழி சொல்றேன். வீட்டுக்கு போனதும் கண்டிப்பா போன் பண்ணு என்று மறுபடியும் மறுபடியும்  சொல்லிக்கொண்டே போனோன்"

. சரி கார்த்திக் வரேன். வரேன் சித்ரா. ஆதி பை. சின்னு, மது டாட்டா சொல்லுங்க போகலாம்,. என்றவாறு டாக்ஸியில் ஏறினாள்.

போட்டிருந்த உடை பாதி ஈரத்திலும் மனது முழு ஈரத்திலும் இருந்தது. ஒரு திருமணத்திற்கு மும்பை வந்தவள், கார்த்திக்கின் அண்ணன் ராஜேஷிடம் மும்பைக்கு வருவேன் என்று சொல்லி இருந்ததை நினைவு வைத்து ராஜேஷை  முதல் நாள் காலையே அனுப்பி மாயாவையும் குழந்தைகளையும் வீட்டுக்கு வரவழைத்தான் கார்த்திக்.மாயா எவ்வளவு சொல்லியும் கேக்காமல் ராஜேஷ் பிடிவாதமாக இருந்தான். போன இடத்தில் அடுத்தவர்கள் முன் எதும் விவாதம் செய்ய விரும்பாமல் மாயா உடனே திரும்பிவிடும் கண்டிசனோடு கார்த்திக் வீட்டுக்கு வந்தாள்.

மாலை வரைக்கும் சித்ரா, ஆதியோடு பொழுது போனது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து கார்த்திக்கை சந்திக்கும் நொடியை தவிர்க்க முடியாமல் எப்படி எதிர்கொள்வது என்று யோசித்து மனது சலித்தது. ஏழுமணிக்கு கார்த்திக் வந்ததும் அப்போது பார்த்த அதே உருவம் சிறிது எடை கூடி  இருப்பது போல் தெரிந்தது. அவனும் அதையே நினைத்திருப்பான் போல,

”அடையாளமே தெரியலை மாயா, ரொம்ப மாறிட்டே..” என்றான்.

”சரி கிளம்பறேன் கார்த்திக் உன்னை பார்க்கத்தான் இவ்ளோ நேரம் இருந்தேன்” ராஜேஷை வீட்டில் ட்ராப் பண்ண சொல்லிகேட்டாள்.

கார்த்திக் கொஞ்சம் கோபத்துடன் ”இதற்கு நீ அப்பவே போயிருக்கலாமே எதுக்கு இருந்தே” என்ற படி சித்ராவை அழைத்து ”மாயாக்கு டின்னர் ரெடி பண்ணு” என்றான்.

மாயா ”வேண்டாம் நான் கிளம்பறேன், கார்த்திக் ”,

”மாயா இப்ப போறதுன்னா போ இனி ஒரு 15 வருசம் கழிச்சு பார்த்துக்கலாம்” என்றான்.

மாயா பேசவில்லை. அதற்குள் ஆதி, சின்னு, மது எல்லோரும் அவர்கள் பள்ளிக்கதைகளுடன் வேறு உலகத்தில் இருந்தனர். மாயா நான் சமைக்கிறேன் என்று எழுந்தாள்,

கார்த்திக் ”நீ அது வேற செய்வியா? மாறிட்டேன்னு சொன்னனே அதுல இதும் வரும்” என்ற படி அவளை தொடர்ந்தான். ”மாயா சித்ரா சமைக்கட்டும் நீ கொஞ்சம் என்னோடு வா,”

எங்க?

வா சொல்றேன் என்ற படி கிளம்பினான், மாயா சித்ராவை பார்க்க அவள் போ என்பது போல் கையசைத்தாள்.

”நீ இங்க தங்கும் ஐடியாவில் வந்திருக்க மாட்டே, நாளைக்கு நான் லீவு,  நாம வெளியில் போகலாம். அதனால்” என்று ஒரு ஷாப்பிங் ஏரியாவில் காரை நிறுத்தினான்.

மாயா முள் மேலிருந்தாள். ”சீக்கிரம் போகனும் கார்த்திக் அதெல்லாம் வேண்டாம். காலையில் நான் கிளம்பிடுவேன்” என்றாள்.

“மாயா ப்ளிஸ் இப்பவாவது நான் சொல்றதை கேளு” என்று கடைக்குள் நுழைந்தான். அவளுக்கும் சின்னு மதுவுக்கும் அவனுக்கு பிடித்த உடைகளாக வாங்கினான்.  மாயா வேறு ஒரு ஏரியாவில் சித்ராவிற்கும் ஆதிக்கும் சின்ன கிஃப்ட் வாங்கினாள்.  திரும்பி வரும் வரை பேச ஒன்றுமில்லை. தூக்கம் வராமல் கலைந்து போன கனவுகளின் மிச்சத்தோடு விடிந்தது.

முழு நாளும் கோவில், சானிடோரியம், ஹோட்டல், பார்க் என்று ஓடியது. வெளியில் போட்டா எடுக்கும் போதும் சித்ராவை விட்டு மாயாவோடு நடந்த படி பழைய ஊர்க்கதை பேசும் போதும் மாயா தயக்கத்துடன் சித்ராவை அடிக்கடி பார்த்துக்கொண்டாள். உனக்கு பைனாப்பிள் ஜூஸ் பிடிக்குமே மாயா என்று அவள் க்ளாஸில் அவனுடைய ஜூஸை பாதி ஊற்றும்போது சித்ராவின் கண்களில் எதையோ தேடினாள்..

டாக்ஸி சித்திவிநாயகர் கோவில் தாண்டி பிரபாதேவியில் நுழைந்தது. வீட்டில் இறங்கியதும் கார்த்திக்கை அழைந்து வந்து சேர்ந்து விட்டதாக தகவல் சொன்னாள். கார்த்திக் இரவு அழைக்கிறேன் என்றதும் மறுபடியும் கவலை வந்தது. சொன்னபடி இரவு பத்துமணிக்கு மேல் அழைத்தான்,

”மாயா நீ வருவேன்னு நினைக்கவே இல்லை. குழந்தைகளோடு உன்னைப்பார்த்ததும் எனக்கு ஒரு நிமிடம் என்ன பேசறதுன்னே தெரியலை. இன்னும் கோபமில்லைன்னு மட்டும் தெரிஞ்சுது. தேங்க்ஸ் மாயா. நம்ம கல்யாணம் நிச்சயத்தோட நின்னு போனதும் என் அம்மா அப்பாவை மீறி நான் எதும் செய்யலைன்னும் உனக்கு கோபமிருக்கும்னு நினைச்சேன் மாயா. நல்லா இருக்கியா ?”

“கார்த்திக் கல்யாணம் நின்னு போனாலும் நீயும் நானும் உறவினர் இல்லைன்னு ஆயிடாது. அதை நான் மறந்துட்டேன், நீயும் மறந்துடு, சித்ராவிற்கு நம்ம விசயம் தெரியுமா” என்றாள்.

கார்த்திக் ”தெரியும் அவ உன்க்குஒரு கிஃப்ட் கொடுத்திருக்கா, நான் ஏர்போர்ட் வரேன், கொண்டுவந்து தரேன்” என்றான்.

”வேண்டாம் நீ யாரிடாவது கொடுத்து அனுப்பு” என்றாள் மாயா.

ஏர்போர்டில் கார்த்திக்கின் அண்ணன் ராஜேஷ்  வந்து இனிப்புகளோடு ஒரு சிறு பெட்டியும் கொடுத்து சென்றார். ப்ளைட் கிளம்பியதும் மெதுவாக பிரித்து பார்த்தால், ஒரு வெள்ளைக்கல் மோதிரம். மாயா கார்த்திக் திருமண நிச்சயத்தின் போது கார்த்திக் போட்ட மோதிரம், மாயா ஆத்திரத்தில் திருப்பி அனுப்பிய மோதிரம். இதை விரலில் போடுவதா? என்ன செய்வது என்று குழம்பியபடி இருக்கையில் சின்னு கேட்டாள் ”அம்மா ஆதி அண்ணாவோட அப்பா நமக்கு என்ன ரிலேசன்? நான் என்னான்னு கூப்பிடனும்?” மாயா திகைத்தாள் 

ப்ளைட் சேரும் இடம் நெருங்கியது.