Monday, August 6, 2012

உலக தாய்ப்பால் வாரம்

ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரம், தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தி நிறைய நிகழ்வுகள் நடக்கும். 



உலகில் கலப்படம் இல்லாத ஒரே உணவு தாய்ப்பால், குழந்தை உருவானவுடன் பால் சுரக்கும் சுரப்பிகள் வேலை செய்யும் குழந்தை பிறந்த மறுநிமிடம் பால் வெளிவரும். முதலில் வரும் பால் அனைத்து சத்துக்களையும் கொண்டு இருக்கும் சீம்பால் ஆகும், அதை கண்டிப்பாக குழந்தைக்கு தர வேண்டும். பாலில் சரியான விகிதத்தில் நீர் கலந்து இருப்பதால் ஆறுமாதம் வரை குடிக்க தண்ணீர் தர கூடாது, தேவையும் இல்லை.

அம்மாக்கு உணவு முறை: 

குழந்தை பிறந்ததும் அது சாப்பிடகூடாது, இது சாபிடாதே என்று கட்டுப்பாடுகள் இருக்கும் , ஆனால் உண்மையில் அதெல்லாம் அந்த காலத்தில் மட்டுமே சாத்தியம். இப்போது  சாதாரணமாக உண்ணும் உணவுகள் சாப்பிடலாம். உங்களுக்கு எது  ஆகாதோ அதை விட்டு விடுங்கள்.

பால், ரொட்டி, பிஞ்சு கத்திரி, அவரை, புடலங்கை போன்றவற்றை பாசி பருப்புடன் சேர்த்து கூட்டு செய்யலாம். முருங்கை கீரை மிக மிக நல்லது. பால் சுறா என்னும் கருவாடு, மீன் போன்றவைகளும் பூண்டு அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

பால்  சுரக்கவில்லை, குழந்தைக்கு பத்தலை என்பதுஎல்லாம்   கற்பனை. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஆறு முறை பாப்பா சிறுநீர் கழித்தால், அது தேவையான பால் எடுத்து கொள்கிறது என்று அர்த்தம். குழந்தையை சும்மாவாவது மார்புகளை சப்ப அனுமதிக்க வேண்டும், ஒரு நாளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அம்மாவின் வெறும் உடம்பின் மேல் குழந்தையை படுக்க வைத்து அதன் உடல் முழுதும் வருடி கொடுக்கவும், நீங்கள் சொல்வதை உங்கள் குழந்தை புரிந்து கொள்ளும்.

குழந்தைக்கு பால் கொடுக்க சோம்பேறித்தனம் படகூடாது,   மீறி போனால் அதிகபட்சம் குழந்தை இரண்டு வருடம் தாய்ப்பால் குடிக்கும் அதற்குள் இரவு தூக்கம் கெடும் போன்ற  காரணம் எதுவும் வேண்டாம்,அம்மா தருவது தாய்ப்பால் மட்டும் அல்ல அதன் எதிர்கால வாழ்க்கை என்று நினைவில் கொள்ளுங்கள். வேலைக்கு போகும் அம்மாக்கள் தாய்ப்பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்து குளிர்சாதனபெட்டியில் வைத்து தேவைப்படும் போது அறையின் தட்பவெப்பத்திற்கு வந்தவுடன் சங்கில் புகட்டலாம், குறைந்த பட்சம் இரண்டு வருடம் பால் கொடுங்கள்.. தவறில்லை. நீங்களும் சரியான உள்ளாடை போட்டால் மார்பு சரிவதை தடுக்கலாம்.

சங்கில் புகட்டும் போது மடியில் போட்டு ஊற்றக்கூடாது,   பால் கொடுக்கும் நிலையில் வைத்து அதன் தலை நம் முழங்கைமேல் இருக்க வேண்டும் அப்போதுதான் புரை ஏறாது. ஒவ்வொரு முறை பால் குடித்ததும் தட்டி கொடுத்து ஏப்பம் வரவைக்கவும். அதேபோல் ஒவ்வொருமுறையும் ஒரு சிறிய கப்பில் தண்ணீர், கொஞ்சம் பஞ்சு வைத்து கொண்டு பால் கொடுக்கும் முன்பும் பிறகும் பஞ்சால் மார்பு காம்புகளை துடைக்கவும். குழந்தையின் உதட்டையும் துடைக்கவும், இல்லாவிட்டால் அதன் உதடு கறுத்து விடும். பால் கொடுக்கும் போது குழந்தை நுனி காம்பில் குடிக்க கூடாது, குழந்தையின்  வாய் கொள்ளும் வரை   மார்புகாம்புகள் இருக்க வேண்டும்.

இது ஒரு மிக பெரிய அனுபவம், பால் கொடுத்த அனைத்து அம்மாக்களும் உணர்ந்த அனுபவம், அம்மாவுக்கும் குழந்தைக்கும் மட்டுமே உண்டான பந்தம், அதை அனுபவித்து ரசித்து செய்யுங்கள்.


இது ஒரு மீள்பதிவு..ஆகஸ்ட் 2009-ல் அம்மாக்களின் வலைப்பூவில் எழுதியது..ம்ம்ம்ம் அது ஒரு பொற்காலம்.

Monday, June 4, 2012

என் சிறகும் வானமும்


ஒன்றரை மாதம் கழித்து இன்னைக்குதான் ரெண்டு பேரும் சூரிய உதயம் பார்க்கிறார்கள். என்ன ஒரு ஆட்டம். ஏப்ரல் 18இல் இருந்து நேற்றுவரை வாசலில் பெய்த வெயில் முழுதும் இவங்க தலையில் தான் இருந்திருக்கும்.

தாத்தா வீட்டுக்கு ஒரு வாரம் அனுப்பி வைத்திருந்தேன். அடுத்த நாளிலிருந்து போன், அம்மா போரடிக்குது வாங்கம்மா, எப்பம்மா வருவீங்க, சாப்பிடவே பிடிக்கலம்மா, ஒரு இரவு ரெண்டு பேரும் குட்நைட்டுக்கு பதில் ஒரே அழுகை, வந்து கூட்டிட்டு போங்கன்னு..பின்ன இங்க ரோஹித், ரிஷித், மஹாலஷ்மி, காவியா, சனந்தா, பிருந்தா, நிதின், ஹரிஷ், அச்சு, சக்தி, ஸ்ரீவத்ஸன், இத்தனை பேரோட செம ஆட்டம். இதில் 10 நாள் முன்பு ரோஹித், ரிஷித் (ரெண்டு பேரும் இவங்க கஸின்) ஊருக்கு போயிட்டாங்க. சக்தி, அச்சு வீடு காலி செய்து போயிட்டார்கள். இருந்தாலும் கொஞ்சமும் குறையாத விடுமுறைகூத்துதான். வழக்கமாக போகும் டேபிள்டென்னிஸ், டான்ஸ், பாட்டு எல்லாம் நிறுத்திட்டேன். இருக்கவே இருக்கு இன்னைக்கு இருந்து அந்த கொடுமை எல்லாம். ஒரு மாசம் ஜாலியா இருக்கட்டும்னுதான்.

ம்ம்ம் ஒரு சின்ன கொசுவர்த்தி சுத்தி பார்த்தால், பால்யமும் பள்ளிவிடுமுறையும் எவ்வளவு அழகானது. இப்ப நாலு சுவருக்குள் விளையாடினாலும் அதுவும் அழகுதான். சின்ன சண்டை,கோபம், சமாதானம், மறுபடியும் சண்டை.

வர்ஷா பள்ளி சென்ற முதல் நாள் தான் பப்பு வயிற்றில் இருப்பதை உறுதி செய்த நாள். அதனால் அது எனக்கு கொஞ்சம் ஸ்பெஷலான நாள். தினம் அவளை நானே கொண்டு விட்டு கூட்டிட்டு வரனும்னு நினைத்தேன். பப்பு பள்ளிக்கு போனா நாளில் ஊரெங்கும் செம மழை. எப்படித்தான் மிஸ் இவளை சமாளிப்பாங்கன்னு கவலையா இருந்தது. அதே போல் இவங்க ரெண்டு பேரில் பப்பு மிஸ்கிட்ட தான் ஏகப்பட்ட பிரச்சனை.

ஒரு வாரமாக துவங்கிய தடபுடல் ஏற்பாடுகள் புது சாக்ஸ், பென்சில் பாக்ஸ், பேனா, இன்னபிற வஸ்துகள். ஆனால் ரெண்டு பேரிடமும் நல்லவிசயம் தேவையற்றதுன்னு எடுத்து சொன்னா வேண்டாம்னு ஒதுக்கிடுவாங்க. அதிக விலையுயர்ந்த எந்த பொருளையும் வாங்கித்தரமாட்டேன். கடையில் பென்சில் பாக்ஸ் 400க்கும் மேல விக்கறாங்க. அதை வாங்கித்தரவும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்!!!  2 ரூவா பென்சிலுக்கு 400ரூபாய் பாக்ஸ்..!!!


என்னதான் விளையாட்டாக நாட்கள் சென்றாலும் அவங்க பள்ளி திறக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். எல்லாவருடம் போலவும் இந்த வருடமும் உற்சாகமாக கிளம்பி போயாச்சு. எனக்குதான் எல்லா அறைகளும் காலியாக வெறுமையாக இருக்கும். ஒரு வருடம் எப்படி ஓடிற்று? கண்முன் குழந்தைகள் வளர்ந்து வருவதை சின்னதான சீருடைகள் எடுத்துரைக்கிறது. எனக்கிருக்கும் பொறுப்புகளை அடுத்த அளவுக்கு போன அவர்களின் காலணிகள் கவனிக்க செய்கின்றது. தலைவாரும் போது அவர்களின் உயரக்கூடல் ஒரு வருடம் கூடியதை உணர்த்துகிறது. ஊட்டிவிடும்மா என்று சொல்லாமல் வர்ஷா தானே வேகவேகமாக சாப்பிடுவதை பார்க்கும் போது பால்யம் முடிந்து பதின்ம வயது வருகிறதோ என்று மனசுக்குள் ஒரு சின்ன பதற்றம்.


போட்டி நிறைந்த இந்த உலகில் மனசு விட்டு சிரிப்பது கூட குழந்தைகளுக்கு கடினமாக விசயமாக ஆகிவிட்டது. ஒரு சாக்கு மூட்டை அளவு புத்தகங்கள், இதெல்லாமா அவங்களுக்கு வாழ்க்கையை சொல்லிதரும்? இவ்வளவு விடியக்காலையில் பள்ளிக்கூடத்தில் என்ன செய்வார்கள்? காலையில் 8.40 முதல் மாலை 4 மணிவரை. என்ன கொடுமை இது? 10 மணிக்குப் பள்ளி ஆரம்பித்தால் என்ன? கிட்டத்தட்ட 8 மணிநேரம் ஒரே இடத்தில் ஒரே வேலையை விதவிதமான குணாதியம் உள்ள ஆசிரியர்களுடன் கழிப்பது கொஞ்சம் கடினம் தான். அதும் அறிவியல் ஆசிரியர்களும் கணித மேதைகளூம் எப்போதுமே கடினமாகவே இருக்கிறார்களாம்.


ஸ்கூல்க்கு போங்க, சந்தோசமா இருங்க, சொல்லித்தரதை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க, சும்மா நெஞ்சில் அடிச்சு மனப்பாடம் பண்ண வேண்டாம். ட்யுசன் வைக்க மாட்டேன், நானும் சொல்லித்தர மாட்டேன், நீயா படி நீயா புரிஞ்சுக்க, என்ன புரியுதோ அதை எழுது அதுக்கு மார்க் வந்தா போதும். அதனால் ரொம்ப டென்சன் ஆகாமல் போ. எந்த டீச்சரையும் பார்த்து பயந்துக்க வேண்டாம், தெரியலைன்னா தைரியமா கேளுன்னு சொல்லி அனுப்பிருக்கேன்.


வர்ஷா,பப்பு பள்ளியில் ஆயிரம் பேரில் நீங்களும் ஒருத்தர், ஆனா எனக்கு என் உலகமே நீங்க தான்.  நான் வெறும் தாய்ப்பறவை, என் சிறகும் வானமும் நீங்க தான். படிச்சு பெரிய வேலைக்கு போயி சம்பாதிக்கனும்னு இம்சை பண்ணமாட்டேண்டா. உங்களுக்கு சவுகரியா இருக்கும் அளவுக்கு நான் சம்பாதிச்சு தரேன். நீங்க சந்தோசமா இருங்க. வாழ்க்கையை அதன் போக்கில் வாழகற்றுக்கொள்ளுங்கள். எவ்வளவு போராட்டமான தருணமாக இருந்தாலும் எதிர்கொள்ளுங்கள், பணம் காசை விட பெரியது மன தைரியம், தன்னம்பிக்கை. அனாவசிய பயமில்லாமல், சுதந்திரமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். அதுவே பெரிய பாடமும் படிப்பும்.


வாழ்த்துகள் கண்ணுகளா.. ஆல் தெ பெஸ்ட்


.உங்க ரெண்டுபேருக்கும் பிடிச்ச உங்க ஃபேவரைட் பாட்டு :)

YOU FOLLOW WHAT YOU FEEL INSIDE, YOU DON'T HAVE TO TRY, IT COMES NATURALLY :))



Monday, May 7, 2012

பாண்டிச்சேரி - கண் குறைதீர்ப்பு மையம்

உலகில் பத்தில் 6 பேருக்கு கண்ணில் குறைபாடுகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. கிட்டப்பார்வை, தூரப்பார்வை, நிறம் பிரித்தறிய இயலாத குறை, ஒரு கண் பெரிதாகவும் இன்னொரு கண் சிறிதாகவும் இருத்தல், என்று அனேகமான குறைபாடுகள் மரபுவழியாக வருகின்றது. ஆனால் தற்சமயம் வாழ்வியல் குறைபாடுகளினால் வரும் கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் அதைவிட அதிகம். ஒரு வகுப்பில் பாதிக்கும் மேல் குழந்தைகள் கண்ணாடி அணிந்திருக்கின்றன. அதிகநேர டிவியும் கம்ப்யுட்டரும் பார்த்த சோர்ந்த கண்கள் வேறு என்ன செய்யும். என் குழந்தைகளும் இதற்கு விதிவிலக்குன்னு சொல்ல முடியாது. இரண்டு பேரும் கண்ணாடி.

போன வருட இறுதியில் பதிவர் ஆரூரன் அவர்களின் பதிவில் பாண்டிசேரி அரவிந்த் ஆஷ்ரம கண் பயிற்சி நிலையம் பற்றி கூறியிருந்தார். அப்போதே தொடர்பு கொண்டபோது 7 வயது முடிந்த குழந்தைகளே பயிற்சிக்கு ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்பதால் போகமுடியவில்லை. இந்தவருடம் முன்கூட்டியே பதிவு செய்து ஒரு வாரம் சென்று பயிற்சியும் முடித்துவந்தாகிவிட்டது.

முதல் நாள் பரிசோதனையின் போது கடைசி இரண்டு வரிகள் படிக்கவே முடியவில்லை. ஆனால் இறுதி நாள் பயிற்சியின் போது நன்றாக படிக்கமுடிந்ததுடன் இன்று அவர்களின் படிக்கும் தூரம் இன்னும் ஒரு அடி முன்னேறி இருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் கண்ணாடி அணிவதில்லை.

7 வயதுமுதல் 40 வயது வரை யார் வேண்டுமானாலும் போகலாம். முன்கூட்டியே பதிவு செய்வது நல்லது. கண்களின் குறைபாடுகளின் தன்மை பொறுத்து கண்களை முறைப்படி கழுவுதல், சன் ட்ரீட்மெண்ட், மசாஜ், பாமிங். குறைந்த வெளிச்சத்தில் மிகப்பொடி எழுத்துகள் படித்தல், சாதாரண வெளிச்சத்தில் படித்தல், பந்து போட்டு கண்களுக்கு பயிற்சி, ஸ்விங் எனப்படும் தொலைதூர பார்வை பயிற்சி, தூரத்தை பொறுத்து சார்ட் ரீடிங் எனப்படும் பயிற்சி, விரலின் அசைவுக்கு தக்கன விழிகள் அசைக்கும் பயிற்சி, இன்னும் சில பயிற்சிகள் தரப்படுகின்றன. இறுதியாக கண்களுக்கு ஆவிபிடித்தல், சிறிது குளிர்ந்த நீரில் கண்களுக்கு ஓய்வு கொடுத்தல் என்று முறையான பயிற்சிகளில் ஒரு நாளைக்கு சுமார் இரண்டு மணிநேரம் வீதம் காலையும் மாலையும் தரப்படுகிறது.

வீட்டிலும் இதனை தொடர்ந்து செய்யவேண்டும். இதற்கு அரவிந்த் ஆஷ்ரமத்தில் கட்டணம் ஏதும் வாங்குவதில்லை. வரும்போது நமக்கு விருப்பப்பட்ட எதேனும் ஒரு தொகையை நன்கொடையாக தரலாம். முன்கூட்டியே தங்கும் இடமும் பதிவுசெய்து கொள்ளலாம். ஒரு மூன்று படுக்கைகள் கொண்ட பெரிய அறை ரூபாய் 300 மட்டுமே. அங்கேயே சைவ உணவுகளும் கிடைக்கும்.

ஒரு வாரம் கண்டிப்பாக தங்கவேண்டி இருக்கும். முதன்முறை என்பதால் 7 நாட்களாவது பயிற்சி எடுத்தால் மட்டுமே நமக்கும் அந்த பயிற்சி நினைவில் இருக்கும். குழந்தைகளுடன் அவர்களின் பெற்றோர்களும் இருத்தல் அவசியம்.ஈமெயிலில் தொடர்பு கொண்டு பதிவு செய்வது நலம். போகும் போது இந்த கடிதங்களையும் கொண்டுசெல்லுங்கள், 7வயது தாண்டிய குழந்தைகளுக்கு பிறப்புசான்றிதழ் அவசியம். மெயிலில் தொடர்பு கொள்ளூம் போது யாருக்கு, என்ன வயசு, எந்த தேதி உங்களுக்கு வசதிப்படும் போன்ற விபரங்களை தெரிவிக்கவும். பாண்டிச்சேரியில் அரவிந்த் ஆஷ்ரமம் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் திங்கள் விடுமுறை. ஆகவே அவர்கள் வாரம் என்பது செவ்வாய் அன்று தான் ஆரம்பம். ஞாயிறு வேலை நாள். இதனை கருத்தில் கொண்டு தேதி முடிவுசெய்யவும்.

தொடர்புக்கு :

School of perfect Eye sight - auroeyesight@yahoo.com 

தங்கும் இடம் : ஏகப்பட்ட ஆசிரம கெஸ்ட் ஹவுஸ் இருக்கின்றது. எனினும் நாங்கள் தங்கிய இந்த கெஸ்ட் ஹவுஸ் விபரம்.

ஈமெயில் - newguesthouse@gamail.com
போன் -  0413 2233 634 

மெயிலில் அவர்கள் புக்கிங் எண் கொடுத்ததும் ஒரு நாளைக்கான பணத்தை மணியார்டர் செய்து உறுதிசெய்து கொள்ளுங்கள். முன்கூட்டியே எத்தனை நாள் தேவைப்படும் என்பதும் சொல்லிவைக்கவும். இரண்டு படுக்கை கொண்ட அறை 200 ரூபாய். இந்த தங்கும் விடுதிக்கும் அந்த மையத்திற்கும் நடந்து செல்லும் தூரமே. போகும் வழியில் மணக்குள வினாயகர் கோவில், அன்னை ஆஷ்ரமம் போன்றவை உள்ளது.










Monday, April 2, 2012

வெறும் வார்த்தைகளில் முடிவதில்லை - நன்றி

நன்றி - இந்த ஒற்றை சொல்லில் எல்லாம் அடக்கமுடியுமா? இருந்தாலும் முடிந்தவரை என் நன்றியை தெரிவிக்கமுயல்கிறேன்.

நன்றி நண்பர்களே 

இணையத்தில் அறிமுகமாகி இதுவரை நேரில் கூட பார்த்திராத நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த குழுமம் என்ன செய்யலாம் - இதுதான் பெயரே. இதுவரை ஒரு பெயர் கூட வைக்கவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. எங்கள் நோக்கம் எங்கள் அளவில் நிறைவேறுகிறது. அது போதும். எந்த தேவையற்ற பேச்சும் இந்த குழுமத்தில் இருக்காது. தினேஷ், கே.விஆர், ஜோசப், அகிலா, மதார், அப்துல்லா, வெயிலான், வித்யா, பபாஷா இன்னும் சில நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த இந்த குழுமத்தில் இருந்து வந்ததுதான் நேசம். இந்த நண்பர்களின் முழு ஆதரவோடு கோவையிலிருந்து இயக்கப்படுகிறது. முழுக்க முழுக்க புற்றுநோய் விழிப்புணர்வுக்கு என்று ஆரம்பித்தது, ஆனால் எந்த வியாதிகளூக்கு அல்லது மருத்துவ ரீதியாக எதற்கு விழிப்புணர்வு தேவையோ அதை இனி செய்வோம்.

தேங்க்ஸ் மக்களே உங்க இந்த சப்போர்ட் இல்லனா இது சாத்தியம் இல்லை.

நன்றி நடுவர்களே 

விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி நடத்துவதாக அறிவித்தாகிவிட்டது. நடுவர்கள் என்று யோசிக்கும் போதே தோன்றியவர்கள் ஸ்ரீதர் நாராயணன், பாலபாரதி மற்றும் வெயிலான் ரமேஷ். இவர்கள் கட்டாயம் மிகச்சிறப்பாக மிக நடுநிலையான விமர்சனம் தருவார்கள் என்ற என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை.  கடுமையான பணி சூழலிலும் மூவரும் ஒவ்வொரு கதையைபற்றியும் விவாதித்து மதிப்பெண்கள் அளித்து, தேர்ந்தெடுத்த அனைத்து கதைகளூக்கும் அவர்களின் கருத்துகளை தெரிவித்து... அவர்களின் சிரத்தையும் மெனக்கெடலுமே இந்த போட்டியை நல்ல முறையில் நடத்திக்கொடுத்தது.


கட்டுரை போட்டியின் நடுவர்களான டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் ப்ருனோ.  இவர்களின் மிகக்கடுமையான பணிகளுக்கும் பயணங்களுக்கும் நடுவில் கட்டுரைகளின் தரங்களை மதிப்பிட்டு, அதன் உண்மைத்தன்மையை விளக்கி மிகசிறப்பான முறையில் கருத்துகளை தெரிவித்தனர்.

நெஞ்சார்ந்த நன்றிகள் ஸ்ரீதர், பாலபாரதி, வெயிலான், டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் ப்ருனோ.

நன்றி சேர்தளம்

திருப்பூரில் இந்த பரிசளிப்பை நடத்தலாம் என்று முடிவுசெய்தவுடன் சேர்தளம் நண்பர்கள் விழாவில் கலந்து கொள்ள மட்டும் வந்தால் போதும் என்று சொல்லிவிட்டார்கள். இடம் ஏற்பாடு செய்து லைட்டின், மைக், ஜென்ரேட்டர், விருந்தினர்கள் என்று பார்த்து பார்த்து செய்த திருப்பூர் சேர்தளம் தலைவர் வெயிலான், முரளி, செந்தில்,செல்வம், பரிசல், ராமன், இன்னும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நேற்றைய விழா :



மாலை 5.30க்கு ஆரம்பித்த விழா முதலில் செல்வம் அவர்களின் அறிமுக உரையுடன் ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து முரளியின் வரவேறுபு உரை.
புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த சிறப்புரை ஆற்றிய டாக்டர். கலைச்செல்விஅவர்கள் (குமரன் மருத்துவமனை - திருப்பூர்)  புற்றுநோய் வருவதற்கான காரணங்கள், அதற்குரிய சிகிச்சை முறைகள், முன்கூட்டியே கண்டறிந்தால் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்த கூடியது என்றும், ஒரு முறை சிகிச்சை எடுத்து குணமானவர்கள் மறுபடியும் குறைந்தது 5 வருடங்கள் மீண்டும் தொடர் சிகிச்சையில் இருக்க

வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.








நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கிய புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை போட்டிகளில் பரிசு பெற்ற நண்பர்களுக்கு பரிசும், சான்றிதழும்  விழா விருந்தினர்களுக்கு பொன்னாடை மற்றும் நினைவுபரிசுகளும் வழங்கப்பட்டது.

கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற திருமதி. மோகனா அவர்கள் - பழனியாண்டவர் கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியை, 30 ஆண்டு காலமாக தமிழ்நாடு அறிவியல் துறையில் இருப்பவர். இவர் மார்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து குணமடைந்தவர். இவரது உரையில் ஆண்களுக்கான மார்பு புற்றுநோய் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.


 


விழாவுக்கு தலைமை ஏற்ற திரு,.பி.ஆர்.கணேசன் அவர்களின் உரை அனைவரையும் மிக கனத்த மனநிலைக்கு கொண்டு சென்றது. புற்றுநோயால் அவர் தந்தை, சிறிய தந்தையர்கள் இருவர் மற்றும் அவரின் 21 வயது மகளை இழந்தது. புற்றுநோயின் வேதனை, போராட்டம் பற்றி அவரின் அனுபவங்கள் வந்திருந்த அனைவரையும் மனம் பதற செய்தது. புற்றுநோயின் விழிப்புணர்வின் அவசியத்தை மிக நெகிழ்வாக விளக்கினார்

.



இதனை தொடர்ந்து 15,வேலம்பாளையம் திருப்பூரை சேர்ந்த பள்ளிமாணவர்களின் தப்பாட்டம் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் மற்றுமன்றி அந்தபகுதியில் உள்ளவர்களையும் விழா அரங்கிற்கு இழுத்துவந்த நிகழ்வு. தப்பாட்டம் மற்றும் புதுக்கோட்டையின் பாரம்பரிய நடனமான சில்லாட்டம் ஆகியவை மிகச்சிறப்பாக நடைபெற்றது.


 

பதிவர் பரிசல் கிருஷ்ணாவின் நன்றியுரையுடன் நேசம் பரிசளிப்பு விழா சேர்தளம் சொந்தங்களின் சிறப்பான ஒருங்கிணைப்புடன் முடிவடைந்தது. சேர்தளம், டாக்டர் கலைச்செல்வி, திரு.கணேசன், நிகழ்காலத்தில் சிவா, மற்றும் இவ்விழாவில் செயல்பட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
 




இந்த போட்டியின் பரிசுத்தொகை கதை போட்டியின் முதல் மூன்று பரிசுகளை தந்த யுடான்ஸ் ஜோசப், கட்டுரை போட்டியின் முதல் பரிசை ஏற்ற பதிவர் ஓ.ஆர்.பி.ராஜா, மற்றும் அனைத்து ஆறுதல் பரிசுகளையும் தன் பங்காக தந்துதவிய பதிவர் ஸ்ரீதர் நாராயணன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

நேசம் முதல் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பில்லாத போது நம்பிக்கை அளித்த ஸ்வாமிஓம்கார். பேரே சொல்லக்கூடாது என்னும் நிபந்தனையுடன் நேசம் இலச்சினை வடிவமைத்த கோபி, ஆதவன், நேற்றைய விழாவில் பேருதவி செய்த முரளியின் மைத்துனரும், செந்திலின் உறவினர் சகோதரனும், இந்த விழாவிற்காக பெங்களூரில் இருந்து வந்திருந்த கோபி, குறும்படம் இயக்கிய அனந்து, நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கும். பரிசு பெற்றவர்களுக்கும் நேசம் சார்பில் வாழ்த்தும் நன்றிகளும்.

ஒரு சின்ன நிகழ்வாக இருந்தாலும் வெகு நிறைவான நிகழ்ச்சியாக அமைந்தது உங்கள் அனைவரின் ஆதரவே காரணம். மீண்டும் ஒருமுறை நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர்களே. இது போன்றே வரப்போகும் நாட்களிலும் எங்களால் இயன்ற பணிகளை செய்வோம், உங்கள் ஆதரவும் அன்பும் எப்போதும் உண்டு என்ற நம்பிக்கையுடன்.

நன்றி!!!







Thursday, March 29, 2012

நேசம்+யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு போட்டிகள் பரிசளிப்பு விழா


நேசம்+யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா 





அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

Wednesday, March 28, 2012

நேசம்+யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி முடிவுகள்


புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கட்டுரைகளில் பகிரவேண்டிய செய்திகள் ஏராளம் உள்ளன. போட்டிக்கு வந்திருந்த கட்டுரைகளில் விதிமுறைகளுக்கு உடபட்டு டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் ப்ருனோ அவர்கள் தேர்ந்தெடுத்த இந்த கட்டுரைகள் பரிசு பெறுகின்றன.



ஆறுதல் பரிசு ரூபாய் 1000 மதிப்புள்ள புத்தக கூப்பன்

பதிவர் திருமதி ஜலீலாகமால் வின்  புற்றை வெல்வோம் - வருமுன் காப்போம் -  பெண்களுக்கு மட்டும் இந்த கட்டுரை சற்றே பெரிது எனினும் பெண்களுக்கு வரும் புற்றுநோயின் தீவிரம் குறித்து அலசப்படுவதால் ஆறுதல் பரிசை பெறுகின்றது.


பதிவர் திரு. இன்னம்பூரான் எஸ்.சௌந்திரராஜனின் பசுமரத்தாணி - இந்த கட்டுரை ஆறுதல் பரிசை கட்டுரையின் தகவல் செறிவு பிழையின்மை ஆகியனவற்றிக்காக பெறுகிறது

மேற்கூறிய இரண்டு கட்டுரைகளும் ஆறுதல் பரிசை பெறுகின்றன. வாழ்த்துகள்



மூன்றாம் பரிசு - 2000 ரூபாய் 

பதிவர் திரு. ரத்னவேல்- கட்டுரை - ஆண்களுக்கான மார்பு புற்றுநோய்

ரத்னவேல் அவர்களின் தளத்தில் வெளியிட்டுள்ள இந்த கட்டுரை மூன்றாம் பரிசை பெறுகிறது. கட்டுரையின் செறிவும் தகவலும் நன்று. எனினும் இது அவர் சொந்த படைப்பு அல்ல என்பது மூன்றாம் பரிசுக்குகாரணம். எழுதிய டாக்டர் கே.முருகானந்தம் அவர்களுக்கு நன்றி

இரண்டாம் பரிசு -3000 ரூபாய்

பதிவர் திரு கதிரவன் -கட்டுரை - புற்றுநோய் ஒரு பார்வை 

கதிரவனின் கட்டுரை தேவையான அனைத்து தகவல்களையும் விழிப்புணர்வையும் ஒருங்கே கொண்டு இரண்டாம் இடத்தைப்பிடிக்கிறது.

முதல் பரிசு - ரூபாய் 5000.

பதிவர் திருமதி ஹுசைனம்மாவின் கட்டுரை மிக எளிதாக தேவையான விழிப்புணர்வுடன், படங்களுடன் அதன் சுட்டிகளுடன் இருப்பதால் அவரின் இரண்டு கட்டுரைகளும் முதல் இடத்தை பகிர்கின்றது.



போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல. வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துகள். உங்களில் நேரில் வந்து விழாவில் கலந்து கொண்டு பரிசை பெற இயலுபவர்கள் தயவுசெய்து நேரில் வந்து கலந்து கொள்ளூங்கள். இயலாதவர்கள் தங்கள் பரிசை அனுப்பவேண்டிய முகவரியை தெரிவிக்கவும்.


நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் குறும்பட போட்டிகள் குறித்து


நேசம் அமைப்பினர் எதிர்பார்த்த அளவிற்கு விழிப்புணர்வு குறும்படங்கள் வராததால் இந்த போட்டி பின்னர் மீண்டும் அறிவிக்கப்படும். தற்சமயம் வந்திருந்த குறும்படங்களில் சிறப்பானதாக கருதப்படும் அனந்துவின் குறும்படமும், கோவை விக்னேஷின் குறும்படமும் நேசம் பரிசளிப்பு விழாவில் திரையிடப்படும். இவை இரண்டுமே பின்னர் அறிவிக்கப்படும் போட்டிக்கு சேர்த்துக்கொள்ளப்படும்.




நன்றி

Monday, March 26, 2012

நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை போட்டி முடிவுகள்


நேசம் கதை கட்டுரை குறும்பட போட்டிகள் அறிவித்து சரியாக மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் எந்த வித வரவேற்பும் இல்லாமல் இருந்தது. பதிவர்களுக்கு என்று இருந்ததை பொதுவாக என்று மாற்றும் எண்ணம் கூட தோன்றியது.  முடிவு தேதி நெருங்க கதைகள் வந்த வண்ணம் இருந்தது. வந்திருந்த மொத்த கதைகளில் சுமார் 25 கதைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடுவர் குழுவினரின் இறுதி பட்டியலில் வந்தது. அதிலிருந்து சிறந்த முதல் மூன்று கதைகளூம் ஆறுதல் பரிசாக நான்கு கதைகளும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இறுதி சுற்றில் தேர்வான கதைகள் நேசம் வலைப்பூவில் வெளியிடப்பட்டு சான்றிதழ் அனுப்பப்படும். ஒரு நல்ல காரியத்திற்காக தோள்கொடுத்த அனைவருக்கும் நன்றி.


நான்கு ஆறுதல் பரிசுகளாக

1. பதிவர் ஆசியா உமர் -  கதை  - வலி 

நடுவர்கள் கருத்து : 

ஓரளவுக்கு வட்டார வழக்கு இயல்பான கதை ஓட்டம் கொடுக்கிறது.  ஏதோ இரண்டொரு நாட்களில் வாய் புற்றுநோய் பெருமளவு பரவிவிடுவது போல் காண்பிப்பது சற்று இடறுகிறது.  பெத்தாவை மொத்தமாக கைவிட்டுவிடாமல் காப்பாற்றி இருக்கலாம்.  இயல்பான வசனங்கள் பெரும் பலம்.  எதுவும் புதியதாக நிகழாமல் எதிர்பார்த்தபடியே முடிந்து போவது கதையின் பலவீனம்.

2. பதிவர் தினேஷ் ராம் -   கதை   - ஜொள்ளன் 

நடுவர்கள் கருத்து : 


சிறு குழந்தையின் வரவால் நோயாளி நமசிவாயம் குணம் பெறுவதை அழகாக சொல்லியிருக்கிறார்.  கதையின் விவரணைகள் அருமை.  கதையில் சில பாத்திரங்களுக்கு (நமசிவாயம், பங்காளி ஆறுமுகம், கதிரேசன்) பெயர் இருக்கிறது.  சில பாத்திரங்களுக்கு பெயரில்லை (நமசிவாயத்தின் மகன், மனைவி போன்றோர்).  கதையின் வடிவமைப்பு நன்றாக இருக்கிறது.  நல்ல முயற்சி.


3. பதிவர் விச்சு - கதை உதிர்ந்த சிறகுகள் 

நடுவர்கள் கருத்து :


’நாந்தானே அண்ணியைக் கொன்னுட்டேன். இந்தப்பாவியை மன்னிச்சிரு’ என்று சங்கையாவின் தங்கை கதறுவதோடு கதை ஆரம்பித்திருந்தால இன்னும் விறுவிறுப்பாக தொடங்கியிருக்கும். முதலில் வரும் இழவு வீட்டு வர்ணனை அழுத்தமாக இல்லாமல் இழுவையாக தோன்றினாலும், நல்ல கதைக் களன்தான். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவோம் என்று சங்கையா நினைத்துக் கொள்வது பொருத்தமான முடிவு. கதை என்னமோ முழுமையாக வெளிப்படாதது போல ஒரு உணர்வு.


4. 
பதிவர் தேவராஜ் விட்டலன் -   கதை   - முகங்கள்


கர்ப்ப புற்றுநோய் பற்றி நிறைய தகவல்களும், சிகிச்சை முறைகளும் சாதகமான முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.  கதை நடக்கும் சூழலைப் பற்றிய வர்ணனைகள் நன்றாக இருக்கின்றன.  இன்னும் சிறிது மெருகேற்றியிருக்கலாம்.


மூன்றாவது இடம் - பதிவர் கார்த்திக் பாலா- கதை - அப்பா


நடுவர்கள் கருத்து : 


தலைப்புக்கு பொருத்தமான கல்யாண்ஜியின் கவிதையோடு துவங்குகிறது.  ஆனால் இது கதையா, அல்லது கட்டுரையா என்று ஒரு சந்தேகம் நிழலாடுகிறது. புற்றுநோய் என்றாலே ப்ளட் கேன்சர், லங்க் கேன்சர் என்று யோசிக்காமல் soft tissue sarcoma மாதிரியான நோய்களை யோசித்ததற்கு பாராட்டுகள்.  நோய் முற்றுமுன்னரே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளை சரியாக செருகியிருக்கிறார் கதாசிரியர். கதை முடியும்போது ஒரு நிமிடம் நாமும் கதைசொல்லியின் அப்பாவிற்காக பிரார்த்திக்கிறோம்.  ஆனால் கதை மட்டும் முடிவடையாத உணர்வு எஞ்சி நிற்கிறது.



இரண்டாவது இடம் - பதிவர் ஸ்டார்ஜன் - கதை - பொழுதுவிடியட்டும்

நடுவர்கள் கருத்து :


தன்மையில் கதை சொல்லும்பாணியில் ஒரு 'திடுக்' முடிவு கொடுத்திருக்கிறார் கதாசிரியர்.  கிராமிய வழக்கினை நன்றாகவே பயன்படுதியிருக்கிறார்.  அந்த பிச்சை பாத்திரம் ஏதோ பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.  இறுதியில் செல்விக்கு நிரந்தர தீர்வு எதுவும் ஏற்படாமல் போனதுதான் சோகம். இன்னும் கொஞ்சம் அடர்த்தியாக இருந்திருந்தால் நல்ல   கதையாக பரிமளித்திருக்கும்.


முதலிடம் - பதிவர் அப்பாவி தங்கமணி - கதை - ஆசிர்வாதம்  

நடுவர்கள் கருத்து :


சிறுகதைக்கான எல்லா அம்சஙக்ளும் நிறைந்திருக்கிறது. இயல்பான உரையாடல், கனமான செண்டிமெண்ட், பாந்தமான தலைப்பு, அளவான டெக்னிகல் சமாச்சாரஙக்ள் என்று நிறைவான கலவை. வலிய திணிக்கபப்ட்ட சோகமாக இல்லாமல் பொருத்தமாக இருந்தது முடிவு.  வாழ்த்துகள்.


பரிசுகள் ஏற்கனவே அறிவித்திருந்த படி முதல் பரிசு ரூபாய் 5000, இரண்டாம் பரிசு ரூபாய் 3000, இரண்டாம் பரிசு ரூபாய் 2000. ஆறுதல் பரிசுகளாக நான்கு சிறுகதைகள் ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள புத்தக கூப்பன்கள் பெறுகிறது.


இந்த பரிசுகள் திருப்பூர் பதிவர்களின் அமைப்பான சேர்தளம் ஒருங்கிணைப்பில் வரும் ஏப்ரல் ஒன்று அன்று மாலை 5 மணிக்கு திருப்பூர் டைமண்ட் தியேட்டர் எதிரில் உள்ள அரங்கில் நடைபெறுகிறது. பரிசு பெற்றவர்களின் நேரில் வர இயலும் நண்பர்கள் தயவுசெய்து மின்னஞ்சலில் தெரிவிக்கவும். நிகழ்வுகள் குறித்த பதிவு நாளை வெளியிடப்படும்.

பரிசு பெற்ற அனைவருக்கும் நேசம் சார்பில் வாழ்த்துகளும் நன்றிகளும்.

Friday, February 17, 2012

என் செல்லக்கண்ணம்மா



ஒரு ஜூன் மாதத்தில் என் நண்பனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருந்தாள், அவளை பார்த்ததும் எதோ ஒன்று இல்லாத வெறுமை டக்குன்னு தோனியது. கல்யாணம் ஆகி 8 மாசம் ஆச்சே, ஒண்ணும் விசேசம் இல்லையா போன்ற கேள்விகள் ஆரம்பம் ஆன நேரம். குழந்தையா நமக்கா? அய்யோ ஒரு பொம்மையை கூட ஒழுங்கா வெச்சுக்க வக்கில்லாத ஆளு, நம்ம பெருமை நமக்குதான் தெரியும்னு என்ற நினைப்பு மாறி ஒரு குழந்தை இருந்தா நல்லாத்தான் இருக்கும் போலன்னு தோன ஆரம்பித்தது அன்றுதான்.

ஜூலை 2, 2000 அன்று என் சின்ன மாமியார் மகப்பேறு மருத்துவர், உறுதியாக குழந்தைதான்னு சொன்னதும், அங்கயே விசில் அடிச்சேன். அந்த நிமிடம் முதல் என் குழந்தையுடன் பேச ஆரம்பித்தேன். அன்னைக்கே திரும்பி ட்ரெயினில் போகும் போது ஊருக்கதை அதனிடம் பேசி முடித்திருந்தேன். கூட்டமாகவே இருந்து பழக்கப்பட்ட நான் தனியா இருப்பதை விரும்பினேன். ஒரு மழைக்காலத்தில் என் நெஞ்சளவு தண்ணீரில் நடந்து வரும் போது அதையும் என் வயிற்றுக்குழந்தைக்கு சொல்லிட்டே வந்தேன்.

காதல் திருமணத்தின் அத்தனை சங்கடங்களையும் பாதியாக குறைக்க வந்த குழந்தை, டெலிவரிக்கு முன் கோவையில் செட்டில் பண்ணியே ஆகனும்னு பாட்டியின் அடத்தில் கோவை வந்தோம். ஒரு விடியற்காலையில் மருத்துவ அதிசயத்தில் ஒன்றாக பிறக்கும் குழந்தையை வலியின்றி ரசித்து பார்த்துகொண்டிருந்தேன். என்ன அழகான அழுகையா இருந்தது. என்ன குழந்தைன்னு தெரிஞ்சுக்கனுமான்னு மாமி கேட்டாங்க. எனக்கு பையன் வேணும்னு முதலில் நினைச்சுட்டு இருந்தேன். இல்ல வேண்டாம் நானே பார்த்துக்கறேன்னு சொல்லி குழந்தைவரும் வரை காத்திருந்தேன். தூயவெள்ளை டவலில் சுற்றிய ரோஜா வண்ண தேவதை, எவ்வளவு அழகான கண்கள், நான் பார்த்தவரைக்கும் உலகின் அழகிய கண், வரைந்த மாதிரியான இதழ்கள், சின்ன சங்கு பூ மாதிரி இமைகள், அழுத்தி எடுத்தால் ரத்தம் கன்றும் தாழம்பு கைகள். சொர்க்கம் என்பது என் முன் இருந்தது.

ஒரு நாள் இரவில் அழததில்லை, ஒரு முறைகூட என்னை சங்கடப்படுத்தியதில்லை, அது இது என்று எதற்கும் அடம் பிடித்ததில்லை. அவளுடைய உள்ளும் புறமுமாக எல்லாமாக நானே இருந்தேன், எனக்கு அவளும். மழலையாக பேசியதே இல்லை, நடக்க ஆரம்பிக்கும் முன்பே நன்றாக பேசுவாள், யாருமற்ற பகல் பொழுதுகளில் நானும் அவளும் இருண்ட அறைக்குள் பேசிக்களித்து களைத்த கதைகள் ஆயிரம். தாய்ப்பால் குடிக்கும் போதே என் முகம் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பாள், திடீரென்று முகம் விலக்கி ஒரு தேவதை சிரிப்பு சிரிப்பாள். அந்தக்காலம்தான் வாழ்ந்த காலத்தில் வசந்தம்.

சரியாக எல்.கே.ஜி போன அன்று இன்னொரு குழந்தை என் வயிற்றில். கொஞ்சம் பயந்தேன், பாசத்துக்கு பங்கு வருமென்று நினைப்பாளோ? மாலையில் வீட்டுக்கு வந்ததும் முதலில் அவளிடம் தான் சொன்னேன். அவளுக்கு ஊற்றி வைத்திருந்த ஹார்லிக்ஸை என் வயிற்றுக்கு அருகில் வைத்து பாப்ஸுக்கும்மா என்றாள். ஒரு குழந்தையை நல்லபடியா வளர்த்தியிருக்கிறேன் என்று கொஞ்சம் இறுமாந்தேன். தினம் பள்ளிக்கு செல்லும் போது அவள் ஸ்னாக்ஸில் கொஞ்சம் கொடுத்து செல்வாள், வந்ததும் அதுவரை முக்கியமான நான் விலக்கப்பட்டு அங்கு பாப்ஸ் வந்தது. இம்முறை வயிற்றிலிருப்பது பெண் தான் என்று தெரிந்திருந்தது. இருந்தாலும் சும்மா பாப்ஸ்ன்னு சொல்லுவோம். 8 மாதத்தில் ஒரு நாள் என் வயிற்றில் காது வைத்து குழந்தையின் அசைவை ரசித்துக்கொண்டிருந்தாள். எதோ சொல்லும் போது வயிற்றுக்குழந்தை செமையா ஒரு உதை உதைத்தது. என்ன சந்தோசம் அவளுக்கு. ரெண்டாவது குழந்தை பிறந்ததும் தினம் மருத்துவமனைக்கு வருவாள். வந்ததும் அவளிடம் தான் குழந்தைக்கு சர்வீஸ் போகும். நாப்கின் தருவது. எனக்கு உதவுவதுன்னு அவள் பிசியா இருப்பாள்.

இன்றுவரை பப்புக்கு அவள் தான் இன்னொரு அம்மா, நான் ஊரு உலகமே சுத்த போனாலும் அவளிடம் ஒரு வார்த்தை கண்ணு பப்புவை பார்த்துக்கடா என்று சொல்லி சென்றாள் போதும். கொஞ்சம் அடாவடியான எனக்கு இப்படி அமைதியான பொறுப்பான பெண்., உறவினர் எல்லாருமே சொல்லுவாங்க. அவ ரொம்ப அன்பான பொண்ணு, யாரு வந்தாலும் சிரித்த முகத்துடன் தண்ணீர் கொண்டுவந்து தருவாள். நானாக சொல்லித்தரவில்லை. அவளே செய்வாள். பிறகு அவளுண்டு அவ வேலை உண்டுன்னு அமைதியகா நகர்ந்துவிடுவாள். எப்பவும் படிப்பு படிப்பு .. பாட புத்தகமில்லை. அதை தவிர அனைத்தும். பொரி மடித்து வரும் பேப்பர் உட்பட படிச்சு முடிச்சுடுவா.

உலகத்தில் அவளுக்கு பிடித்த இன்னொரு விசயம் பரதநாட்டியம். அவளோட கடலளவு கண்ணுக்கு ஏற்ற விசயம். ரொம்ப சின்ன வயசில் இருந்து கத்துக்கறா, ஒரு முறை ஒரு நடன நிகழ்ச்சியின் போது வெள்ளை பட்டாடையில் முதல் ஆளா வரும்போது எனக்கு திக்குன்னு இருந்துச்சு. நம்ம குழந்தையா இது? இவ்வளவு அழகான ஒரு குழந்தைக்கு அம்மா என்பதே பெருமைதான். எந்த வரைமுறைகளூம் இல்லாத மிக இயல்பான எளிமையான பெண் என் மகள் என்றால் எனக்கு சந்தோசம் தானே. என் அம்மா இறந்த போதுஅழாமல் அசராமல் நின்று கொண்டு அடுத்த ஏற்பாடுகளை பார்த்துட்டு இருந்தேன். இவ வந்து கட்டிப்பிடித்ததும் என் அம்மாவின் ஸ்பரிச நினைவு உடனே வந்து ஒரு பெரிய அழுகையா வெளிவந்தது. இப்போதும் மனம் தடுமாறும் போதும் கோபப்படும் போதும் என் தெய்வ அசிரீரி அவள் தான்.


வர்ஷா வளர்ந்து கொண்டே போகிறாள் நான் அவளுக்கு குழந்தையாகிக்கொண்டே இருக்கிறேன். இதுவும் நன்றாக இருக்கிறது

என் உயிரான என் கண்மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், உனக்கு பிடித்தது மட்டுமே நடக்கட்டும். நம்ம மூணு பேருக்கும் பிடித்த பாட்டு.

உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி


 

Tuesday, February 14, 2012

அம்மா

பிப்ரவரி மாதம் என் வாழ்க்கையில் மிக முக்கியமானது. வர்ஷா பிறந்து நான் ஒரு அம்மான்னு ஆனதும் என் அம்மா இந்த உலகைவிட்டு போனதும் ஒரு பிப்ரவரி மாதம்.  இன்றோடு ஒரு வருசம்.. முழுசாக ஒரு வருசம். எப்படி ஓடிப்போயிடுச்சு. ஒரு வாரமாகவே போன வருசம் இந்த நேரம், இந்த நாள்னு ஒவ்வொரு நாளும் எதோ ஒரு வகையில் தடுமாற்றம். பிப்ரவரி 14. ஒரு வருசம்மா.. நீ எங்களை விட்டு போயி ஒரு வருசம் ஆயிடுச்சு. உடம்பு சரியில்லைன்னு ஒரு வாரம் ஹாஸ்பிடலில் வீட்டுக்கு போனதும் கண்ணை திறந்து என்னை பார்த்தபடி போன உன் உயிர்..  அம்மா.

அம்மாவும் அப்பாவும் அடுத்தத்து தவறுவது ரொம்ப கொடுமைம்மா. எதாவது தோனும் போது,. ஒரு சந்தோசமோ துக்கமோ சட்டுன்னு சொல்ல ஒரு ஆள் இல்லையே. என்னதான் விட்டேத்தியா இருந்தாலும் நமக்குன்னு அம்மா அப்பா இல்லையேன்னு ரொம்ப தோனுதும்மா. நீயும் போன இந்த ஒரு வருசத்தில் எவ்வளவோ நடந்திடுச்சு. உன் மரணம் என்னை ரொம்ப மாத்திடுச்சும்மா. நீ இப்படி டக்குன்னு போவேன்னு நான் எதிர்பார்க்கலை.

ரொம்ப நாள் கழிச்சு இதை எழுதும் போது என்னவோ நினைப்பு வந்து வாய்விட்டு அழனும் போல இருக்கு. அம்மா. எப்பவாவது எங்களை பார்க்கனும்னு உனக்கு தோனிச்சா?  மின்மயானத்தில் இருந்து வரும் போது எப்படி இருந்துச்சு தெரியுமா? ஒரு மண் பானையில் இதான் உன் அம்மா அப்பான்னு வாங்கி ஆத்தில் கரைக்கும் போது உங்களை வைத்து கட்டின கனவுகளும் கரைஞ்சுடுச்சு.  ரொம்ப நாளா உன் புடவையை வச்சு தூங்கிட்டு இருப்பேன். இனி ஆயுசுக்கும் அப்படித்தான்னு நினைச்சு தாங்க முடியலைம்மா. எவ்வளவோ நாள் எத்தனையோ கஷ்டப்பட்டிருப்போம், ஆனாலும் உங்களோடு இருந்த அந்த சந்தோசமான நாட்கள் இனிமேல் வரவே வராதும்மா. அப்பா போனதும் பாதி போயிடுச்சு, நீயும் போனதும் உடம்பில் மனசில் இருந்து என்னமோ போயிடுச்சும்மா.

ரெண்டு பேரும் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இப்படி போயிட்டீங்க. எங்களுக்குன்னு யாரும் இல்லன்னு ஏன் தோனலை? ரோட்டில் யாராவது உங்க வயசில் போனாலே அவங்களிடம் உங்க ஜாடையை தேடுகிறேன். இந்த மாதிரிதான் அப்பா இருப்பாரு, அம்மா நடப்பாங்க, முடியலைம்மா.
போனில் உன் நம்பரைபார்த்தாலே கஷ்டமா இருக்குப்பா.ஊரு உலகத்தில் சின்ன வயசில் அம்மா அப்பாவை இழந்தவங்க எவ்வளவோ பேரு இருப்பாங்க. ஏன் உனக்கு கூட உன் அம்மா சின்ன வயசிலேயே இறந்துட்டாங்கல்லமா, ஆனாலும் அம்மா அப்பா உறவை விட வேறு எதுவும் தனியா சிறப்பானதா இல்லை.


அம்மா அப்பா எங்களோடவே இருங்க, மறந்துடாதீங்க.. எங்களுக்கு யாரும் இல்லைம்மா.
..

Monday, January 30, 2012

ஒரு அறிவிப்பு

 

நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை, கட்டுரை, குறும்பட போட்டிகள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதன் படைப்புகளை சமர்ப்பிக்கும் கடைசி தேதி ஜனவரி 31க்கு பதிலாக  பிப்ரவரி 10க்கு மாற்றி அமைக்கப்படுகிறது. நண்பர்கள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


குறும்படம் அனுப்பும் நண்பர்கள் இரண்டு டிவிடிகளாக அனுப்பவும். முகவரி மெயிலில் பெற்றுக்கொள்ளலாம்.


நன்றி

Tuesday, January 10, 2012

நேசம் + ப்ரணவ பீடம் வழங்கும் இலவச யோகா பயிற்சி பட்டறை


 
நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் 
வாய் நாடி வாய்ப்பச் செயல்

இந்தக்குறளின் வழி உள்ளிருந்து கொல்லும் நோயான புற்றுநோயை வராமல் தவிர்க்க உள்ள வழிமுறைகளை கண்டறியும் பொருட்டு நம் மருத்துவத்தில் நம் முன்னோர்களின் வாழ்வியல் முறையில் இதற்கு என்ன வழி என்றும் அறிதல் பொருட்டும் ஏற்படும் விழிப்புணர்வு முகாம் கோவையில் வரும் பிப்ரவரி 5 - ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது.


நேசம் அமைப்பின் முதல் நிகழ்வாக கோவையின் பிரபல பதிவர், யோகா ஆசிரியர் சுவாமி ஓம்கார் அவர்களின் ப்ரணவ பீடம் ( http://pranavapeetam.org/)
 இணைந்து கோவையில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி புற்றுநோய் விழிப்புணர்வு சிறப்பு இலவச யோகா பயிற்சி பட்டறை நடத்தப்பட உள்ளது.. ஆர்வமுள்ள யாரும் கலந்து கொள்ளலாம். கீழ்கண்ட எண்ணில் அல்லது நேசம் ஈமெயில் முகவரியில்  உங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

இடவசதி கருதி முதலில் வரும் 80 பேர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் அனுமதி.  இரண்டு பிரிவாக ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 35 முதல் 40 பேர்கள் இருப்பார்கள். முதல் பிரிவு காலையிலும் இரண்டாம் பிரிவு மாலையிலும் நடக்கும். குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம். பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி உண்டு. யோகா செய்ய வசதியான உடையுடன் வரவும். 

நிகழ்ச்சி நடக்கும் இடம் : 





ப்ரணவ பீடம், 
பொன்னுரங்கம் ரோடு, 
ஜெயின் கோவில் எதிரில்
ஆர்.எஸ் புரம் 

நேரம் : முதல் பிரிவு : காலை 9 முதல் 12 மணி வரை


இரண்டாம் பிரிவு - மாலை 4 முதல் 7 மணி வரை.
 


தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9994108710

மின்னஞ்சல் முகவரி ; nesamgroup@gmail.com