Saturday, December 31, 2011

நேசம் - புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பு

வணக்கம் நண்பர்களே

பொன்வேண்டேன்,
பொருள் வேண்டேன்
மண் வேண்டேன்
மனை வேண்டேன்
நோயற்ற வாழ்வே நான் வாழ வேண்டும்
என்பதே அனைவரின் பிராத்தனையாக இருக்கும்



அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது, அதனிலும் கூன் குருடும் உடல் குறைபாடுகளும் இல்லாமல் பிறத்தல், அதையும் விட இன்று வாழ்நாள் முழுதும் எந்த வித உடல் பிணிகளும் இன்றி நல்நெடும்வாழ்வு வாழ்வதைவிட பெரிய செல்வம் ஏதும் இல்லை. எண்ணற்ற நோய்கள் வாழ்க்கை முறைகளினால் வந்தாலும் பெரும்பாலும் அவைகள் லைஃப்ஸ்டைல் எனப்படும் வாழ்வுமுறை நோய்களே.

இவ்வகை நோய்களின் ஏன் எதற்கு எப்படி என்றே அறியும் முன் உடலை அரித்து விடும் நோய்களில் ஒன்று கேன்சர் எனப்படும் புற்றுநோய். இன்று உலகம் எங்கும் இதனால் உயிர் விடுவோர் எண்ணிக்கை மற்ற அனைத்தையும் விட அதிகம். புற்றுநோய் வரக்காரணம் எவ்வளவோ இருக்கலாம், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், ஆனால் வந்த பின் அதனுடைய பாதிப்பின் அளவையும் நோயின் தீவிரத்தைப்பொறுத்தும் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளது.

எல்லா நோயைப்போலவும் இதனையும் நாம் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் நூறு சதவீத குணப்படுத்தலாம். எப்படி கண்டறிவது என்பதே விழிப்புணர்வு.

இந்த புது வருடத்தில் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு நேசம், முழுக்க முழுக்க புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் அதுகுறித்த நிகழ்வுகளுமாக இணையத்தில் உங்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கிறோம்.


நேசம் - அமைப்பில் இருந்து முதல் விழிப்புணர்வு அறிவிப்பு ஜனவரி முதல் அன்று வெளிவரும். புற்றுநோயை கண்டறிந்து களைவோம், போராடி வெல்வோம்

Friday, December 30, 2011

ஐ லவ் யு செல்லம்

வலைப்பதிவு என்பதே ஒரு கொசுவர்த்திதானே. இந்த வருச கொசுவர்த்தியை சுத்திப்பார்க்கிறேன். ஒவ்வொரு வருசமும் முடியும் போது ஏகப்பட்ட அனுபவங்களும் படிப்பினைகளும் வாழ்க்கையை செப்பனிடுகிறது.

இந்தவருடம் ஆரம்பமே அமர்க்களம். இடது கை உடைந்து 4 கிலோ அளவுக்கு பெரிய கட்டுடன் தான் வரவேற்றேன். ஊரே புத்தாண்டு கொண்டாடும் போதும் கங்கா மருத்துவமனையில் வலியில் புலம்பிட்டு இருந்தேன்.  போனவருடம் முழுதும் இழப்புகளின் வருடம், அப்பா இறந்தது, சில பல பர்சனல் இழப்புகள்னு ஒரே ஆர்ட் ப்லிம் ரேஞ்சுக்கு இருந்தது. இந்தவருடம் மட்டும் சளைச்சதா என்ன?

ஜனவரி கைகட்டுடன் வரவேற்று அனுப்பி பிப்ரவரி  வரும்போதே வாழ்வில் மறக்க முடியாத மாதமாக வந்தது. பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று என் அம்மாவின் மரணம், அதை அடுத்து 4 நாட்களில் மாமாவின் மரணம். மரண அடின்னு சொல்லுவாங்களே அதுதான் இது.


மார்ச் இத்தனை இழப்பிற்கு ஈடு செய்வது போல் எங்க வீட்டின் புது வரவு, என் தங்கை பையன் நந்தன். அவன் சிரிப்பு மட்டுமே எங்கள் இழப்பை கொஞ்சம் தள்ளி வைக்கிறது. ஏப்ரல் மாதம் கட்டு பிரித்து கை ஒரளவிற்கு வந்ததும் அப்பாடான்னு இருந்தது. இதற்கிடையில் இழந்த இன்னொரு பொருளும் மறுபடியும் கிடைத்தது. இனிமேல் பத்திரமா வைச்சுக்கனும்.

ஜூன் முதல் செப்டம்பர் வரையான மாதங்கள் மருத்துவமனையிலேயே பெரும்பாலான நாட்கள் கழிக்க வேண்டியிருந்தது. மாமியாரின் மரணம் வரை இந்த கதை தொடர்ந்தது. மரணங்களை மிக அருகில் பார்த்து பார்த்து மனது அடப்போ இவ்வளவு தானா என்று சலிக்கும் அளவுக்கு இந்த வருடம் எல்லாவிதத்திலும் பாடம் கற்றுக்கொடுத்தது.

போலியான மனிதர்களை வழக்கம் போல கடைசியில் கண்டு ஓடிப்போயிடுன்னு துரத்தி விட்டு, மறுபடியும் வண்டிசக்கரத்தில் எண்ணெய் விட்டு வாழ்க்கை சுற்ற ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு நாளும் கற்றுக்கொடுக்கும் வாழ்க்கையே ஐ லவ் யு. இப்பத்தான் தினம் தினம் வருவதை எதிர்கொண்டு வாழ பிடிக்கிறது. எவ்வளவு சுவாரஸியமா இருக்கிறது. மனிதர்கள் அதுவும் சாதாரணமான மனிதர்களா? எவ்வளவு வகை, ஒவ்வொரு மனிதனும் நிழலில் ஒன்று வெளிச்சத்தில் ஒன்று, இருட்டில் ஒன்றுன்னு ஏகப்பட்ட முகமூடிகளுடன், அவர்கள் நிகழ்த்தும் அல்லது அவர்களை சுற்றி நிகழும் நிகழ்வுகள், கவலைகள், காதல்கள், மரணங்கள், சிரிப்புகள், வேதனை, வலி, சந்தோசம், எல்லாம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.

இத்தனை விசயங்களுக்கு நடுவில் சில பல ஊர் சுற்றல்கள், சிங்கப்பூர், மலேசியான்னு பெரிய கும்பலை கூட்டிட்டு போயி கொண்டு வந்து பத்திரமா விட்டது பெரிய அனுபவம். வழக்கம் போல் என் நட்புகளும் உறவுகளும் சீண்டியும் சிரித்தும் தொடர்கிறது.

இணையத்தில் வந்த இந்த 5வதுவருட ஆரம்பம் மகிழ்ச்சியாகவே தொடங்குகிறது. கூகுள் பஸ் சோர்ந்து போன, தனிமையான  பல தருணங்களில் தோள் கொடுத்திருக்கிறது. அதன் மூலம் கிடைத்த நட்புகளுக்கு ஒரு தனி நன்றி. எதையும் உடனே பகிரவேண்டும் வாழ்த்தோ திட்டோ சிரிப்போ அவர்களுடன் சேர்ந்து இருக்கவேண்டும்னு தோனியது. தேங்க்ஸ் மக்கா :)

இந்த வருடம் புதுசா எதுவும் உறுதிமொழி இல்லை, பிடிக்காததை சட்டுன்னு தூக்கி எறியும் இந்த குணம் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா பண்ணனும். இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா மனிதர்களை படிக்கனும். அம்புட்டுதான். வழக்கம் போல கலாய்ச்சு, கலாய்க்கப்பட்டு, கவலைகளை பிரித்து தீர்வு கண்டு சந்தோசமா இருக்கனும். நீங்களும் உங்க எண்ணங்கள் எல்லாம் ஈடேறி சந்தோசமா இருங்க.

சில நண்பர்களுடன் சேர்ந்து உருப்படியா ஒரு வேலை செய்யலாம்னு இருக்கேன். உங்க ஆதரவு எப்பவும் அதற்கு தேவை. ஜனவரி ஒன்று அன்று அறிவிக்கலாம்னு இருக்கோம். அதற்கான உங்க ஆதரவுக்கு இப்பவே ஒரு பெரிய நன்றி சொல்லிக்கறேன்.



இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :)

Saturday, December 24, 2011

பொற்சித்திரமே பொக்கிஷமே



செல்லக்குட்டி, என் தங்கம், என் வெள்ளி .. இதெல்லாம் நான் பப்புவை கொஞ்சுவது இல்லை. அவ என்னை சொல்றது. இப்படி சொன்னா எதோ ஒரு காரியம் ஆகவேண்டி இருக்குன்னு அர்த்தம். தேவதைகளில் வால் முளைத்த தேவதையை பார்க்கனுமா? எங்க வீட்டில் இருக்கா.

சில நேரம் ரொம்ப பேசறாளேன்னு நினைக்கும் போது கூட இப்ப பெரும்பாலும் குழந்தைகள் அப்படித்தான் பேசுகிறார்கள், நாம தடுத்து ஒண்ணும் ஆகப்போவதில்லைன்னு விட்டுடுவேன். இருந்தாலும் எங்க அம்மினி கொஞ்சம் ஓவர் தான்.

பப்பு, ஒரு நடமாடும் இல்ல எப்பவும் ஆடிட்டே நடக்கும் ஒரு பட்டாம்பூச்சிதான். காலையில் எழுந்ததில் இருந்து ஆரம்பிக்கும் அவள் அட்டகாசங்கள் இரவு தூங்கும் போதும் சில நேரம் தூக்கத்திலும் தொடரும். எழுந்து வரும் போதே கட்டிலில் இருந்து கூப்பிடுவா, அவளை உப்பு மூட்டை தூக்கி வரனும், இனிமேல் முடியாது பெரிய பொண்ணு ஆயிட்டேன்னு சொன்னா, நீங்க தானே சொன்னீங்க எத்தனை வயசானாலும் நான் உங்க குழந்தைன்னு திருப்பி கேட்பாள். ப்ரஷ் பண்ண நாந்தான் தொடங்கி விடனும். அவ ரெடியாகி வந்ததும் எப்படி இருக்கேன்னு இடுப்பில் கை வைத்து ஸ்டைலா கேக்கும் போது பதில் ரெடியா வச்சிருக்கனும்.

பப்பு, அவளை சுற்றி இருக்கும் அனைவருக்கும் ஒரு உடனடி புன்னகை உற்பத்தி செய்யும் மந்திரக்காரிதான். நாம் யோசித்து சொல்வதை உடனே சொல்லி அசத்துவாள், சுத்தம், அவளோட பொருட்களை எடுத்து வைத்துக்கொள்வது. முக்கியமா சேமிப்பு, தெரியாமல் வெளியில் 5 ரூபாய் வைத்தால் கூட அது அவள் கணக்கில் போயிடும். அவகிட்ட கடன் வாங்கறதை நான் தான் நிறுத்தனும். நேத்து காய்க்காரம்மாவுக்கு தர 40 ரூபாய் எடுத்ததை நைட்டே கேட்டு வாங்கிட்டாள். எதுவும் கேக்கவே மாட்டாள். பிறந்த நாளுக்கு கூட அதிகபட்ச அவளோட ஆசை கலர்பென்சிலாகத்தான் இருக்கும். அவளோட ஷாப்பிங் போன கதை தனி பதிவா வரும்.

காய்ச்சல், சளி எதுவுமே அவளை சோர்ந்து போகச்செய்யாது. எதுவந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இப்பவே இருக்கு. போன மாதத்தில் கிட்டத்தட்ட 15 நாள் காய்ச்சலில் இருந்தாள், ஒரு நாள் கூட அழவோ, வேறு எந்த வித சோர்வையுமோ முகத்தில் காட்டவே இல்லை. டாக்டர் என்ன சொன்னாரோ அதை நாம் மறந்தாலும் அவ மறக்கவே மாட்டாள், டயட் என்னன்னு கேட்டுட்டு வந்தாள், அதைத்தவிர வேறு எதையும் தொடக்கூட இல்லை.

பப்பு ரொம்ப ப்ராக்டிகல், யாருடா உனக்கு பெஸ்ட் ப்ரெண்டுன்னு கேட்டேன் அவ பதிலில் ஆடிப்போயிட்டேன். எதுக்கும்மா ஸ்கூலில் ப்ரெண்டு? க்ளாஸ் முழுதும் ப்ரெண்ட் தான், ஆனா யாரும் க்ளோஸ் ப்ரெண்ட் இல்லம்மா, அப்பறம் அவங்க பேசலை இவங்க பேசலைன்னு புலம்பனும், எனக்கு அக்காவும் நீங்களூம் தான் பெஸ்ட் ப்ரெண்ட்.  க்ளோஸ் ப்ரெண்டுனா பிரச்சனைம்மா. எல்லார்கிட்டயும் பேசுவேன்.,பை சொல்லிட்டு வந்துடுவேன்னு.. வர்ஷாவும் இப்படித்தான். இந்த தெளிவு கடைசி வரை இருக்கட்டும்.


என் மாமியார் இறந்த போது சிலர் அழுதபோது பப்பு அவளோட கஸின் அவ வயதுதான் அவன்கிட்ட சொல்றா, ”எதுக்கு அழறாங்க? வலியோட இருந்தாங்க, இப்ப காட் கிட்ட போயிட்டாங்க, அங்க வலிக்காதாம், காட் கிட்ட போனா ஹேப்பியா இருப்பாங்க, அப்பறம் எதுக்கு நாம அழனும்னு”



பப்பு, நீயும் வர்ஷாவும் என் குழந்தைகளாக வந்ததால் நான் தான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கேன். தேங்க்ஸ்டா செல்லம். நீ என் பொக்கிஷம் தான். எப்பவாவது வாழ்க்கையில் சோர்வுறும் தருணங்களில் தெய்வம் போல் ஒலிக்கும் உன் குரல் தான் என் அடுத்த அடிக்கு ஆதாரம். இப்ப மாதிரியே எப்பவும் சந்தோசமா விரும்பிய அனைத்தும் கிடைத்து ஆனந்தமா இருடா செல்லம்.



இன்னைக்கு அவளுக்கு ஸ்பெஷலா அவ ட்ரெஸ் கலரில் ஒரு ரோஸ் வேற எங்க வீட்டில் பூத்தது, அவளுக்கான சிறப்பு ஆசிர்வாதம்.

அம்மா உங்களுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்னு கேட்கும் போது இந்த உலகம் அளவுக்குன்னு சொன்னேன், அவ சொன்னது அவளோட இதயம் அளவுக்காம்.


தேங்க்ஸ்டா குட்டி


உனக்கு பிடிச்ச இந்த பாடலுடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என் ரவுடி பப்பு

இன்னைக்கு தான் ராம் க்கும் பிறந்த நாள் ஹேப்பி பர்த்டே ராம்



Friday, December 16, 2011

பல்ப் ஃப்ரம் பப்பு

இது கூகுள் பஸ்ஸில் எழுதியது. ஒரு தொகுப்பா எடுத்து வைத்து பப்பு பெரியவளானதும் கொடுக்கனும்

========

பப்பு சீக்கிரம் சாப்பிடு கண்ணு

அரை மணி நேரம் கழிச்சு அதே பருப்பு சாதம் நோண்டிட்டு இருந்தா

ஏநான் :என்னடி பண்றே. சீக்கிரம் சாப்பிடுன்னு சொன்னனே, நீ சாப்பிடற 4 பருக்கை பருப்பு சாதத்துக்கு அரை மணி நேரமா?

பப்பு : நான் டயட்டும்மா...

நான் : ங்ஙே!!!! என்னது டயட்டா?

பப்பு: ஆமாம்மா டயட்டுன்னா உங்களை மாதிரி இல்ல, நிஜ டயட்டு.. மீதி ஆனதை சாப்பிட மாட்டேம்மா.

-------
1.பப்புவும் வர்ஷாவும் சாப்பிட்டு இருந்தாங்க, ஒரு மாசமா டிவிக்கு தடா, வாரம் 3 மணி நேரம் டிவியில் ப்ரோக்ராமும், ஒரு படம் டவுன்லோடியும் பார்க்கலாம், சாய்ஸ் இருக்கு டிவி வேண்டாதவங்க கம்ப்யுட்டர் கேம்ஸ் ஆடலாம், யாரு குறைவா டிவி, கம்புட்டர் முன்னாடி இருக்காங்களோ அவங்களுக்கு வாரம் 50 பாயிண்ட், 500 பாயிண்ட் யாரு முதலில் ரீச் பண்றாங்களோ அவங்க இஷ்டப்படி 150 ரூபாய்க்கு ட்ரீட், ஒன்லி சாப்பாடு, ட்ரீட் வேண்டாதவங்க அந்த காசை உண்டியில் சேர்த்துடலாம். வர்ஷா 800, பப்பு 600 ரூபாய் வச்சிருக்காங்க, அதுல நான் 300ரூபாய் கடன் வாங்கினேன், மேட்டர் அது இல்ல வர்ஷாக்கு மேத்ஸ்ல இண்ட்ரஸ்ட்னு ஒன்னு சொல்லிதந்திருக்காங்க, அவ அதை பப்பு கிட்ட சொல்ல, பப்பு 12% வட்டி கணக்கு போட்டு அதை அவங்க பாட்டிகிட்ட செக் பண்ணி வந்து என்கிட்ட கேக்குது...அந்த 300 ரூபாய்க்கு இது இண்ட்ரஸ்ட்ம்மா, அதையும் சேர்த்துடுன்னு :((

2. எதோ சினிமா பாட்டு பாடிட்டு இருந்தா நான் முறைச்சேன், அதுக்கு ரொம்ப கூலா சொல்லுது எதை கேக்கறதா இருந்தாலும் என்கிட்ட கேக்காதீங்க, என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேளுங்க, அவங்கதான் சொல்லித்தந்தாங்க, நான் சும்மா பாடிப்பார்த்தேன்னு.

--------
பப்பு :அம்மாஆஆ, நீங்க என்ன சொன்னாலும் கலைஞருக்கு ஓட்டு போட மாட்டேன்

நான் : சுட்டி டிவி அவங்களுதுதான், ஓட்டு போடலைன்னா எப்படி தெரியும்?

பப்பு : ஓ அப்படியா? சரி போடறேன் :))

வருங்கால அரசியல்வாதி ரெடி


------
நான் : பப்பு போயி குளிடி..

பப்பு : ஒரு லுக்கோடு - ம்ம் எனக்கு ஆர்டர் போட அந்த ஆண்டவனே யோசிப்பான்

நான் : என்னடி சொல்றே?

பப்பு : பஞ்ச் டயலாக்கும்மா :))))

------
ஒவ்வொரு வருசமும் சித்ராபவுர்னமி மிக சிறப்பா சத்யநாராயண பூஜை ராமின் சித்தி வீட்டில் செய்வது வழக்கம், நேத்து நைட் பப்புவிடமும் வர்ஷாவிடமும் நாளைக்கு சாயங்காலம் இந்த பூஜைக்கு போறோம்னு சொன்னேன்..

இதற்கு முன் ஒரு சின்ன ப்ளாஷ்பேக் : பப்பு,வர்ஷா ரெண்டு பேருக்கும் பிடிச்ச கதை அவங்க பிறந்த கதைதான். வயிற்றில் இருக்கும் போது என்ன நடந்தது, எப்படி பிறந்தார்கள்ன்னு கேள்வியில் துளைச்சுடுவாங்க, டைரி எழுதும் பழக்கம் இருந்தது , (இப்ப இல்லை) அதை கொடுத்து படிச்சுக்க சொல்லிடுவேன். அப்படி ஒரு சித்ரா பவுர்னமி விரதத்திற்கு பிறகு பிறந்தவள் பப்பு, இதை சொல்லியிருந்தேன்.

மறுபடியும் நேத்து நைட் ஸ்டோரி..

நான்: பப்பு சீகிரம் கிளம்பனும், பாட்டிகூடவே போயிட்டு வந்திடலாம்

பப்பு : நான் வரலம்மா

நான் : ஏண்டா

பப்பு: இந்த பூஜைக்கு போயித்தானே நான் பிறந்தேன் , நாளைக்கு போயிட்டு வந்தா இன்னொரு பாப்பா வரும், எனக்கு பிடிக்கலை, நான் வரலை, எப்பவும் நாந்தான் பாப்பா........(பாரேன் இந்த புள்ளக்குள்ள இம்புட்டு இருக்கு)

நான் ----- பல்ப்பா எறியுது என்னை சுத்தி :(((((((

#புள்ளயா பெத்து வெச்சிருக்கேன்

Monday, December 12, 2011

அக்கம் பக்கம்

பக்க்த்து மாநிலமான கேரளாக்கும் நமக்கும் பங்காளி தகராறு முட்டிகொண்டு நிற்கும் இந்த நேரத்தில் தண்ணி தராத கேரளாவை கடுமையா கண்டிச்சுட்டு, முடிஞ்சா ப்ரித்வியை நாடுகடத்தி கோவைக்கு அனுப்புமாறு பணிவுடன் உம்மன்சாண்டி அங்கிளை கேட்டுக்கிறேன். வாளையாறு டேம்க்கு யாராவது போயிருக்கீங்களா? அதுவும் இருப்பது தமிழ்நாட்டில் தான் ஆனால் பயன் கேரளாவிற்கு..இதுக்கு ஒரு நாளைக்கு தனியா பொங்கலாம். கோவையில் பாதிக்கும் மேல் கேரள மக்கள் தான் இருக்கிறார்கள், தனியே கோவில், க்ளப், சங்கம், பள்ளிக்கூடம் என்று மினி கேரளாவே இருக்கிறது. ம்ம்ம் பெருந்தன்மையின் பரிசுதான் இது.

-------
கிட்டத்தட்ட ஆண்டு முடிவை நெருங்கும் நேரம் இந்த வருடம் முழுதும் அசைபோட்டுப்பார்த்தால் கற்றதும் பெற்றதும் ரொம்ப அதிகம். தனி செண்டி பதிவா தேத்திடலாம் விஜி ..டோண்ட்வொர்ரி

------
தங்கம்னு பேப்பரில் எழுதி லாக்கரில் வைக்கும் நிலைமைக்கு வந்துடுவோம் போல. எங்களை மாதிரி குடும்ப இஸ்திரிகளுக்கு விலையை கேட்டாலே திக்குன்னு இருக்கு. சேமிப்பின் பழக்கத்தை வலியுறுத்தும் தங்க விலையேற்றத்திற்கு ஒரு ஜே !!

------
 எங்கள் தெருவில் ஒரு பெண், கார்ப்பரேசனில் பணி புரிகிறார். 42 வயதானவர். அசாதாரணமான உடல் பருமன். அதைக்குறைக்க அவர் விஎல்சிசி சென்று ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டாராம். அதில் அவரின் இரு தொடைகளும் உணர்ச்சி இழந்து போனது. உடல் முழுதும் கொழுப்பு கட்டிகளும் படர்ந்துவிட்டது. ஏஞ்ஜெல் என்று இன்னொரு உடல்பருமன் குறைக்கும் நிலையம் சென்று சிகிச்சை எடுத்ததில் அவருடைய தோல் தொடையிலிருந்து கால் பாதம் வரை கருகினது போல ஆனது.

யாருக்கு உடல் எடை குறைக்கனுமோ தயவுசெய்து சாதாரண உடற்பயிற்சி, சரியான உணவு முறைமூலம் மட்டுமே குறைக்க முயற்சி செய்யுங்கள்,. நான் அந்த பெண்னை பற்றி சொன்னது 10 சதவீதம் தான். உக்கார்ந்தால் எழ முடியவில்லை. திரும்பி படுக்க முடியவில்லை. :(


இந்த மாதிரி நிலையங்களை போகும் முன் தெரிந்தவர்களிடம் கேட்டு போங்கள், யாரோ ஒரு சிலருக்குதான் சரிப்படும். எனக்கு தெரிந்து இந்த சிகிச்சை முறை ஒத்துக்கொள்ளாதவர்கள் தான் அதிகம்
--------
நேத்து பாரதியார் பிறந்த நாள், இன்னைக்கு சூப்பர் ஸ்டார் பிறந்தநாள். சமூகவலைத்தளங்களில் திடீர் பாரதி பாசத்தை தாங்க முடியலை. பாவம் பாரதி. இருந்திருந்தா ரொம்ப ஃபீல் பண்ணிருப்பார்,. இம்புட்டு பாசக்காரங்களா இருக்காங்களேன்னு.. சூப்பர் ஸ்டார் வீட்டு சமையல் காரருக்கும் ஒரு வாழ்த்து சொல்லிடுங்க. வரலாறு முக்கியம்.-------
கூகுள் பஸ்ஸில் இருந்த வரைக்கும் பொழுது போனதே தெரியாது. ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் விருந்தினர் வீடு மாதிரி இருக்கு, போகலாம்னும் தோனுது போனதும் எப்ப கெளம்புவோம்னும் இருக்கு :)) செட் ஆக இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் போல.
---

தினம் பேப்பர் பார்க்கவே பயமா இருக்கு. இந்த வாரத்தில் 3 பெண் குழந்தைகளுடன் அம்மா தற்கொலை திருப்பூரில், கணவன் மனைவி குடும்பத்துடன் தற்கொலை, பெங்களூரில் 4 டாக்டர்கள் தற்கொலை.. என்ன நடக்குது.. சாவு அம்புட்டு ஈசியா போயிடுச்சா?

------

ஈரோடு பதிவர் சங்கமம் வரும் ஞாயிறு நடக்கிறது. மேலதிக தகவலுக்கு http://www.erodekathir.com/2011/12/2011.html. வாங்க அங்க மீட் பண்ணுவோம் :)

Wednesday, December 7, 2011

கானல் வாழ்க்கை


வீடு வரை உறவு 
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசிவரை யாரோ?
எவ்வளவு உண்மை...


நேற்றிருந்தவர் இன்றில்லை, இன்றிருப்பவர் நாளையில்லை. நிதர்சனம்தான். இன்று இறந்த பிணத்தைப்பார்த்து நாளை இறக்கப்போகும் பிணம் அழுகிறதுன்னு பட்டினத்தாரோ யாரோ சொல்லிருக்காங்க.. ஒரு இழப்பு வாழ்க்கையை அவர்களை சார்ந்தவர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிபோடும்  என்று இதுவரைக்கும் யோசிக்கலை.

சின்னவயதில் சாவு அறிமுகமானது பக்கத்து வீட்டு பாட்டியினால், திடீர்னு இறந்துட்டாங்கன்னுசொன்னாங்க. போயி பார்த்தேன், படுக்க வைத்திருந்தார்கள் அவ்ளோதான் சாவுக்கான அறிமுகம். 7வது படிக்கும் போது என் அப்பிச்சியின் அம்மா (அம்மத்தா) இறந்துவிட்டார்கள்னு பள்ளியில் இருந்து அழைத்து வந்து ஊருக்கு போனோம். அது இழப்பாக தெரிந்ததைவிட உறவு எல்லாம் கூடிய விழாவாகவே இருந்தது. இதற்குப்பிறகு வேறு ஏதும் பெரிதாக பாதிக்கவில்லை.

15வருடங்களுக்கு ஒரு நாள் அலுவலகத்திற்கு வந்த போன் சொல்லிய சேதி, எங்க பக்கத்துவீட்டில் இருந்த நகைக்கடை அதிபர் குடும்பத்துடன் தற்கொலை. திருப்பூரில் 13 பேர் இறந்தது மிகப்பெரிய அதிர்வு. அதும் பிறந்ததிலிருந்து பார்த்தவர்கள் இன்னைக்கு நாயைக்கூட விட்டுவைக்காமல் போய்விட்டார்கள் என்றதும் அதிர்ச்சிக்கு அளவில்லை.

பால்ய சிநேகிதம் என்பது மனதுக்கு மிக நெருக்கமானது, வலியோ சுகமோ பகிரும் உறவு அதுதான். சித்ரா. என் மிக நெருங்கிய தோழியாக இருந்தவள், கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள், படிப்பு சரியாக வராததால் திருமணத்திற்கு அவசரப்படுத்தப்பட்டவள், 13 வருடத்திற்கு முன் ஒரு ஜூலை 8-ல் தீக்குளித்தாள், உயிர் போகாமல் ஒரு நாள் முழுதும் இருந்தாள், என்னைப்பார்க்கனும்னு என் அப்பாவிடம் சொல்லி அனுப்பினார்கள் எனக்கு அவளைப்பார்க்கும் தைரியம் அப்போது இல்லை. இப்போதும் வரவில்லை.. மன்னிச்சுடு சித்ரா. பெரிய கண்களூடன் உன் சாயலில் பாதி கொண்டிருக்கும், நீ தற்கொலை செய்து கொள்ளும் போது 7 மாதக்குழந்தையாக இருந்த உன்  மகனை இப்போது பார்த்தாலும் மனசுக்குள் ஒரு கலவரம் வருகிறது.

ரொம்ப வருடம் கழித்து 4 வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பாவும் அவரைத்தொடர்ந்து 45 நாளில் என் அப்பாவின் அம்மாவும் (தாத்தா- பாட்டி) போய்ச்சேர்ந்தார்கள். இதைவிட என் அப்பா இறந்தது கூட ஒரு அதிர்ச்சிதான். ஆனால் என் கண் முன் நடந்த மரணம், இப்பவும் ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் நினைவில் வருவது. நாலே நாட்கள் கோமாவில் இருந்து வீட்டுக்கு போனதும் ஒரு வினாடி கண்ணைத்திறந்து பார்த்துவுடன் ஒரு சின்ன விக்கலில் உயிரை விட்ட அம்மா.

அம்மா இறந்துட்டாங்கன்னு சுதாரிக்கவே சில நிமிடம் ஆனது,. சரியாயிடுச்சு போலன்னு நினைச்சு அம்மா பாரும்மான்னு உலுக்கி எடுத்தேன். நானும் என் சித்தியும் மட்டுமே அருகில். ஆனால் திறந்து கண்கள் மூடவே இல்லை. முதலும் கடைசியுமாக நினைவு தெரிந்து அம்மாவை கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்தேன். கொடுத்துட்டே இருந்தேன். அழவே தோனலை. கூட இருந்தவர்களின் அழுகுரல் தான் மறுபடியும் இந்த உலகில் கொண்டுவந்தது. அவங்க கண்ணை தானம் தரும்போது என் மாமா உட்பட யாரும் ஒத்துக்கலை. டாக்டர் கடைசியாக மறுபடியும் அந்தக்கண்களை திறக்கும் போது எனக்கு பார்க்கும் அளவு தைரியம் வரவில்லை.

அம்மா இறந்ததுமே உண்மையிலேயே இவ்வளவு நாள் நினைத்தது வாழ்க்கை இல்லை. அர்த்தமில்லாத கோபம், வருத்தம், எல்லாம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. அடுத்த நான்கு நாட்களில் அப்பாவின் ஒரே தங்கையின் கணவர் - என் மாமா ஹார்ட் அட்டாக்கில் இறந்ததும் அடச்சேன்னு ஆயிடுச்சு.

அதெல்லாம் விட இன்னும் வாழ்க்கையின் மேல் பயமும், காதலும், விருப்பமும் வரக்காரணம், என் மாமியாரின் மரணம். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக புற்றுநோயில் போராடி, இவ்வளவுதான் என்று அளவிட முடியாத கஷ்டப்பட்டு, உடலின் ஒவ்வொரு பகுதியும் வலியில் துடித்து, தோல் கருகி, சுருங்கி, உடல் முழுதும் ரணமாகி, கடைசி இருபது நாட்கள் நரகத்தில் இருந்து ஒவ்வொரு அணுவும் வலியை அனுபவித்து ஒரு வழியாக மரணித்தார். அது என்னைப்பொறுத்தவரை அவருக்கு விடுதலைதான்.கடைசிநாட்களில் அவர் கண்ணாடியே பார்க்கவில்லை, ஒரு நாள் விளையாட்டாக போனில் போட்டா எடுத்த வர்ஷாவிடம் அவர் இன்னும் கொஞ்சம் சிரிக்கறேன் இப்ப எடுன்னு. அந்த சிரிப்பு என்பது உதடுகளின் விரிசல் தான்.

ஒரு மரணம் ஒரு தனிமனித மரணம் அல்ல, அது ஒரு தலைமுறையின் முடிவு. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே முடிந்துவிடுகிறது. அவருக்கு பிடித்தது, பிடிக்காததது, விருப்பு, வெறுப்பு, வலி,கோபதாபங்கள். மரணமில்லா பெருவாழ்வு சாத்தியமில்லாதது போல் மறதியும் உடனே வந்தால் பரவாயில்லை. எந்தப்பொருளை பார்த்தாலும் அதோடு சம்பந்தப்பட்ட அவர்களின் நினைவு வந்து இருக்கிறவர்களை கொல்கிறது. மனதை அதிலிருந்து வெளியெடுப்பது அவ்வளவு சிரமம்.

ம்ம் போகிறவர்கள் போகட்டும் மிச்சமிருப்பவர்களுடன் தொடரும் பயணம்..



Saturday, December 3, 2011

கல்யாண நதி

கமலா நேரு பார்க்கில் இங்கேயும் அங்கேயுமாய் சிலர் நின்று உக்கார்ந்து போட்டாவுக்கு சிரித்துக்கொண்டிருந்தனர். கார்த்திக்கும் மாயாவும் குழந்தைகளோடு நிற்க சித்ரா அவர்களை சுற்றி வளைத்து சுட்டுக்கொண்டிருந்தாள்.

"கார்த்திக் போதும் போலாமா' என்று மாயா நகர்ந்தாள்.  காலையில் இருந்து மும்பையை சுத்தி வெறுத்துபோயிருந்தாள் மாயா, எப்போது வீட்டுக்கு போவோம் என்று இருந்தது. கடைசியா மெரைன் ட்ரைவ் போகலாம் ப்ளிஸ் , சொன்ன கார்த்திக்கையும் சித்ரா, குழந்தைகளின் ஆர்வத்தையும்  பார்த்து தலையசைத்தில் தயக்கமும் இருந்தது.

7 மணி ஆகிவிட்டது, இதற்கு மேல் இந்த மும்பை ட்ராபிக்கில் எப்படி வீடு போவது என்று மலைப்பாக இருந்தது மாயாவிற்கு.

"கார்த்திக் ப்ளிஸ் கிளம்பலாம். எனக்கு ஒரு டாக்ஸி வைத்துக்கொடு நானும் குழந்தைகளும் போயிடுவோம்" என்றாள்.

கார்த்திக் "இல்ல நான் ட்ராப் பண்றேன். சித்ராவும் ஆதியும் வீட்டுக்குப்போயிடுவாங்க. உனக்குதான் ஊரு புதுசு நானே ட்ராப் பண்றேன்" என்றான்.

"வேண்டாம் கார்த்திக் நீ டாக்ஸி மட்டும் அரேஞ்ச் பண்ணு" என்று பிடிவாதமாக மறுத்தாள்.

ஒரு நிமிடம் உற்றுப்பார்த்துவிட்டு ம்ம்ம் சரி என்று டாக்ஸியை அமர்த்தினான். 'போனை ஆஃப் பண்ணிடாதே, நான் வழி சொல்றேன். வீட்டுக்கு போனதும் கண்டிப்பா போன் பண்ணு என்று மறுபடியும் மறுபடியும்  சொல்லிக்கொண்டே போனோன்"

. சரி கார்த்திக் வரேன். வரேன் சித்ரா. ஆதி பை. சின்னு, மது டாட்டா சொல்லுங்க போகலாம்,. என்றவாறு டாக்ஸியில் ஏறினாள்.

போட்டிருந்த உடை பாதி ஈரத்திலும் மனது முழு ஈரத்திலும் இருந்தது. ஒரு திருமணத்திற்கு மும்பை வந்தவள், கார்த்திக்கின் அண்ணன் ராஜேஷிடம் மும்பைக்கு வருவேன் என்று சொல்லி இருந்ததை நினைவு வைத்து ராஜேஷை  முதல் நாள் காலையே அனுப்பி மாயாவையும் குழந்தைகளையும் வீட்டுக்கு வரவழைத்தான் கார்த்திக்.மாயா எவ்வளவு சொல்லியும் கேக்காமல் ராஜேஷ் பிடிவாதமாக இருந்தான். போன இடத்தில் அடுத்தவர்கள் முன் எதும் விவாதம் செய்ய விரும்பாமல் மாயா உடனே திரும்பிவிடும் கண்டிசனோடு கார்த்திக் வீட்டுக்கு வந்தாள்.

மாலை வரைக்கும் சித்ரா, ஆதியோடு பொழுது போனது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து கார்த்திக்கை சந்திக்கும் நொடியை தவிர்க்க முடியாமல் எப்படி எதிர்கொள்வது என்று யோசித்து மனது சலித்தது. ஏழுமணிக்கு கார்த்திக் வந்ததும் அப்போது பார்த்த அதே உருவம் சிறிது எடை கூடி  இருப்பது போல் தெரிந்தது. அவனும் அதையே நினைத்திருப்பான் போல,

”அடையாளமே தெரியலை மாயா, ரொம்ப மாறிட்டே..” என்றான்.

”சரி கிளம்பறேன் கார்த்திக் உன்னை பார்க்கத்தான் இவ்ளோ நேரம் இருந்தேன்” ராஜேஷை வீட்டில் ட்ராப் பண்ண சொல்லிகேட்டாள்.

கார்த்திக் கொஞ்சம் கோபத்துடன் ”இதற்கு நீ அப்பவே போயிருக்கலாமே எதுக்கு இருந்தே” என்ற படி சித்ராவை அழைத்து ”மாயாக்கு டின்னர் ரெடி பண்ணு” என்றான்.

மாயா ”வேண்டாம் நான் கிளம்பறேன், கார்த்திக் ”,

”மாயா இப்ப போறதுன்னா போ இனி ஒரு 15 வருசம் கழிச்சு பார்த்துக்கலாம்” என்றான்.

மாயா பேசவில்லை. அதற்குள் ஆதி, சின்னு, மது எல்லோரும் அவர்கள் பள்ளிக்கதைகளுடன் வேறு உலகத்தில் இருந்தனர். மாயா நான் சமைக்கிறேன் என்று எழுந்தாள்,

கார்த்திக் ”நீ அது வேற செய்வியா? மாறிட்டேன்னு சொன்னனே அதுல இதும் வரும்” என்ற படி அவளை தொடர்ந்தான். ”மாயா சித்ரா சமைக்கட்டும் நீ கொஞ்சம் என்னோடு வா,”

எங்க?

வா சொல்றேன் என்ற படி கிளம்பினான், மாயா சித்ராவை பார்க்க அவள் போ என்பது போல் கையசைத்தாள்.

”நீ இங்க தங்கும் ஐடியாவில் வந்திருக்க மாட்டே, நாளைக்கு நான் லீவு,  நாம வெளியில் போகலாம். அதனால்” என்று ஒரு ஷாப்பிங் ஏரியாவில் காரை நிறுத்தினான்.

மாயா முள் மேலிருந்தாள். ”சீக்கிரம் போகனும் கார்த்திக் அதெல்லாம் வேண்டாம். காலையில் நான் கிளம்பிடுவேன்” என்றாள்.

“மாயா ப்ளிஸ் இப்பவாவது நான் சொல்றதை கேளு” என்று கடைக்குள் நுழைந்தான். அவளுக்கும் சின்னு மதுவுக்கும் அவனுக்கு பிடித்த உடைகளாக வாங்கினான்.  மாயா வேறு ஒரு ஏரியாவில் சித்ராவிற்கும் ஆதிக்கும் சின்ன கிஃப்ட் வாங்கினாள்.  திரும்பி வரும் வரை பேச ஒன்றுமில்லை. தூக்கம் வராமல் கலைந்து போன கனவுகளின் மிச்சத்தோடு விடிந்தது.

முழு நாளும் கோவில், சானிடோரியம், ஹோட்டல், பார்க் என்று ஓடியது. வெளியில் போட்டா எடுக்கும் போதும் சித்ராவை விட்டு மாயாவோடு நடந்த படி பழைய ஊர்க்கதை பேசும் போதும் மாயா தயக்கத்துடன் சித்ராவை அடிக்கடி பார்த்துக்கொண்டாள். உனக்கு பைனாப்பிள் ஜூஸ் பிடிக்குமே மாயா என்று அவள் க்ளாஸில் அவனுடைய ஜூஸை பாதி ஊற்றும்போது சித்ராவின் கண்களில் எதையோ தேடினாள்..

டாக்ஸி சித்திவிநாயகர் கோவில் தாண்டி பிரபாதேவியில் நுழைந்தது. வீட்டில் இறங்கியதும் கார்த்திக்கை அழைந்து வந்து சேர்ந்து விட்டதாக தகவல் சொன்னாள். கார்த்திக் இரவு அழைக்கிறேன் என்றதும் மறுபடியும் கவலை வந்தது. சொன்னபடி இரவு பத்துமணிக்கு மேல் அழைத்தான்,

”மாயா நீ வருவேன்னு நினைக்கவே இல்லை. குழந்தைகளோடு உன்னைப்பார்த்ததும் எனக்கு ஒரு நிமிடம் என்ன பேசறதுன்னே தெரியலை. இன்னும் கோபமில்லைன்னு மட்டும் தெரிஞ்சுது. தேங்க்ஸ் மாயா. நம்ம கல்யாணம் நிச்சயத்தோட நின்னு போனதும் என் அம்மா அப்பாவை மீறி நான் எதும் செய்யலைன்னும் உனக்கு கோபமிருக்கும்னு நினைச்சேன் மாயா. நல்லா இருக்கியா ?”

“கார்த்திக் கல்யாணம் நின்னு போனாலும் நீயும் நானும் உறவினர் இல்லைன்னு ஆயிடாது. அதை நான் மறந்துட்டேன், நீயும் மறந்துடு, சித்ராவிற்கு நம்ம விசயம் தெரியுமா” என்றாள்.

கார்த்திக் ”தெரியும் அவ உன்க்குஒரு கிஃப்ட் கொடுத்திருக்கா, நான் ஏர்போர்ட் வரேன், கொண்டுவந்து தரேன்” என்றான்.

”வேண்டாம் நீ யாரிடாவது கொடுத்து அனுப்பு” என்றாள் மாயா.

ஏர்போர்டில் கார்த்திக்கின் அண்ணன் ராஜேஷ்  வந்து இனிப்புகளோடு ஒரு சிறு பெட்டியும் கொடுத்து சென்றார். ப்ளைட் கிளம்பியதும் மெதுவாக பிரித்து பார்த்தால், ஒரு வெள்ளைக்கல் மோதிரம். மாயா கார்த்திக் திருமண நிச்சயத்தின் போது கார்த்திக் போட்ட மோதிரம், மாயா ஆத்திரத்தில் திருப்பி அனுப்பிய மோதிரம். இதை விரலில் போடுவதா? என்ன செய்வது என்று குழம்பியபடி இருக்கையில் சின்னு கேட்டாள் ”அம்மா ஆதி அண்ணாவோட அப்பா நமக்கு என்ன ரிலேசன்? நான் என்னான்னு கூப்பிடனும்?” மாயா திகைத்தாள் 

ப்ளைட் சேரும் இடம் நெருங்கியது.

Wednesday, November 30, 2011

காந்தலும் ருசி

காந்தல் ஒரு ருசி, காந்தல்ன்னா சமைக்கும்போது அதிக வெப்பத்தினால் தீய்ந்து போகும் பகுதி. அதற்கென ஒரு ருசியும் வாசனையும் உண்டு. காந்தலே ஒரு ருசின்னு ஒத்துக்கொள்ளூம் போது ஏன் இன்னும் சில மனிதர்கள் கருப்பை ஒரு கலராக ஒத்துக்கொள்ள தயங்குகிறார்கள்?

ஷாப்பிங் போன ஒரு சின்ன குழந்தை 5 வயதிருக்கும் கொஞ்சம் ஒல்லியா கருப்பா லட்சணமா விளையாடிட்டு இருந்தது. அதோட கண்கள் அவ்வளவு அழகு, எனக்கு பக்கத்தில் அந்த குழந்தையின் அம்மாவும் பாட்டியும் அவளுக்கு பிறந்த நாள் துணி எடுக்கிறார்கள் போல், எந்த உடை எடுத்தாலும் கருப்பா இருக்கிறா அவளுக்கு செட் ஆகாதுன்னு சொல்லி ஒதுக்கி முடிவில் ஒரு மஞ்சள் கலர் துணி எடுத்து போனார்கள்..




வர்ஷா படிக்கும் நடனப்பள்ளியில் கிட்டத்தட்ட 15 வயதில் ஒரு பெண் இருக்கிறாள், அத்தனை நளினமாக அழகா அபிநயம் பிடித்து ஆடுவாள், ஆனால் அவள் கருப்பாக இருக்கும் ஒரே காரணத்தினால் எப்போதும் பின்வரிசை தோழியாக..

இது சும்மா உதாரணம் தான், ஆனால் இந்த ஒரு வாரத்தில் கருப்பாக இருக்கிறாய் என்று யாரையாவது யாராவது குறை கூறிக்கொண்டே இருப்பதை கேட்டுக்கொண்டே இருக்கிறேன். எதேச்சையாக பார்த்த விளம்பரத்திலும் கருப்பான பெண் அவமானமாக உணர்கிறாளாம்....என்ன நினைப்பு இது?கருப்பு என்பது உடலின் மெலனின் மட்டுமே அதுவா ஒரு மனித உயிர்? அதுவா உணர்வு? அதுவா அளவுகோல்?

கருப்பு என்பது மிக கவர்ந்திருக்கும் நிறம். எப்போதாவது நீங்கள் கருப்பு உடை அணிந்து பாருங்கள் உங்களுக்கே உங்களை பிடிக்கும். சின்னக்குழந்தைகளை கருப்புன்னு சொல்லுவது எவ்வளவு அவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை தரும் என்பதை ஏன் பெற்றோர் உணருவது இல்லை?
அவர்களை நான்கு பேர் முன்னிலையில் சொல்வதை எப்போது நிறுத்துவார்கள்? அப்படி சொல்லும் போது அந்த குழந்தையின் முகம் போகும் போக்கை பாருங்கள். கோவில் சிலையில் கூட கருப்புதான் அழகான சிலையாக இருக்கிறது.

நான் சின்னப்புள்ளையா இருக்கும் போது இப்படி தினம் தினம் கேட்டிருக்கேன். அப்பல்லாம் எல்லாரும் ஒரே கலரில் இருப்போம் வெள்ளையானவர்கள் ரொம்ப குறைவு.. நானும் கல்லூரி காலங்களில் நினைத்தது உண்டு..ச்சே இன்னும் ஒரு ஷேடு டல்லாயிருக்கலாம்னு ( தொழில் புத்தி) ஆனால் கலரில் ஒரு மண்ணும் இல்லைன்னு புரிய ரொம்ப நாள் ஆயிடுச்சு.  

சோப்பு, க்ரீம் போட்டு கலர் வருதோ இல்லையோ சில பாட்டி வைத்தியங்கள் மூலம் நம் தோலை மிருதுவாக வாசனையாக சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்.

அதில் ஒன்று இது

பாசிப்பயிறு - 1கிலோ
கடலைப்பருப்பு -அரைக்கிலோ
கஸ்தூரி மஞ்சள் - 150 கிராம்
பூலாங்கிழங்கு - 150 கிராம்
கோரைக்கிழங்கு - 150 கிராம்
வெட்டிவேர் - 150 கிராம்
ஆவாரம்பூ - 150 கிராம்
இதை மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். சோப்பு தேய்த்த பிறகு இதை தினம் தேய்த்து குளித்தால் உடம்பில் இருக்கும் சொறசொறப்பு, வறட்டுத்தன்மை நீங்கும். வெட்டிவேர் நல்ல வாசனையை தரும். முக்கியமா வேர்வை வாசனையை போக்கும். இதை ஆண்களும் உபயோகிக்கலாம். கஸ்தூரி மஞ்சள் தவிர்த்து மற்றவைகளை பொடிசெய்து கொள்ளலாம். இது அனைத்துமே நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். இதோடு குப்பைமேனி தழை ரோஜா இதழ்களும் சேர்த்து அரைத்தால் பெண் குழந்தைகளின் உடம்பில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்கும்.

(ரொம்ப நாளா பதிவு எழுதாமல் டச் விட்டு போயிடுச்சு. இனி எழுத ட்ரை பண்ணுவோம்..#தப்பிக்க முடியாதுல்ல)


Sunday, September 18, 2011

பால்யம் - ஜவ்வு மிட்டாய்

க்ளிங் க்ளிங் க்ளிங்.. இந்த வித்யாசமான மணி முட்டாய் தாத்தாவோடது.  மறக்கமுடியாத சில முகங்களில் அவரோடதும் ஒண்ணு. முட்டாய்தாத்தா,, காலையில் வெயில் மண்டைகாய வைக்கும் போது நிலாகாய்ஞ்சுட்டு மெதுவா நடந்து வருவார். ஒவ்வொரு அடி எட்டு வைக்கும் போதும் அதற்கு பேக்ரவுண்ட் இந்த க்ளிங் சத்தம். 

அவரோட தோளில் இருக்கும் துண்டை மெத்தையாக்ககி ஒரு  மரசட்டம் சாய்ந்திருக்கும், அதில ஒரு பொம்மை முகம் சகல அலங்காரங்களும் செய்து பொட்டு வைத்து பூச்சூடி இருக்கும். அவளோட உடம்புதான் விசேசம். நல்ல பிங்க் கலரில் வெள்ளை பார்டரோடு நடுவில் வரிவரியா சிவப்பும் சில நேரம் இருக்கும், இழுக்க இழுக்க வரும் இனிப்பு ட்ரெஸ் அவளுக்கு. 

ஐஞ்சு பைசாக்கு செயின், பத்து பைசாக்கு டாலர் வச்ச நெக்லஸ், வாட்ச், இன்னும் ஐஞ்சு பைசா சேர்த்து கொடுத்தா செயின், நெக்லஸ், வாட்ச் எல்லாம் கிடைக்கும். பரபரன்னு அந்த ஜவ்வு மிட்டாயை இழுத்து ரெண்டு சுத்து சுத்தி நகை செய்து மாட்டியும் விடுவார்.  அதோட கண்டிப்பா ஒரு கொசுறு கன்னத்தில் ஒட்டிவிடப்படும்.  சனி ஞாயிறு காலை பதினோரு மணி எங்க முட்டாய் தாத்தாவிடம் நெக்லஸ் வாங்கி போட்டுகொண்டால் மட்டும் தான் நகரும். பிசுபிசுன்னு உடம்பு முழுசும் ஒட்டிக்கொள்ளும் அதை எவ்வளவு  முடியுமோ அவ்வளவு இழுத்து ரசிச்சு சாப்பிடனும்.

இப்பல்லாம் எப்பவாவது எங்காவது போகும் போது ஏதும் திருவிழா மாதிரி தெரிந்தால் நானும் முடிஞ்ச அளவு தேடிப்பார்க்கிறேன். இந்த மிட்டாய் மட்டும் இருக்காது. கடைசியில் கண்டே பிடிச்சேன். ஒரு நண்பனின் திருமணத்தில் தீம் ஊர்திருவிழா, அதற்காக அவன் குழந்தைகளுக்கு சின்ன ரங்கராட்டினம், இந்த மிட்டாய்காரர், ஒரு பஞ்சு மிட்டாய், பலூன் கடையும் வச்சிருந்தான்... யாருக்கும் தெரியாமல் நைசா ஒண்ணு வாங்கிட்டு வந்தேன். வீட்டுக்கு வந்து எப்பவும் போல ஒரு செயின் செய்து சாப்பிட முயற்சி செய்தேன்.. சுவையும் பிடிக்கலை அதை செயினா போடவும் பிடிக்கலை. ஆனால் பிசுபிசுப்பு மட்டும் அப்படியே பழைய மாதிரியே இருந்தது...வயசாயிடுச்சோ? இல்ல வாழ்க்கை முறை மாற்றத்தில் பழசு மறக்கப்படுகிறதோன்னு ஒரே ஃபீல் பண்ணி அடுத்தது மூக்குத்திப்பூ பத்தி யோசிச்சேன்.



Thursday, September 15, 2011

பால்யம் - எருக்கம்பூ

எங்க ஸ்கூலுக்கும் வீட்டுக்கும் ஒரு கிலோ மீட்டருக்கு அதிக தூரமிருக்கும். நேர்வழியில் போனால் லேட்டாகும். அதனால் குறுக்குவழி.(என்னைக்கு நேர்வழியில் போயிருக்கேன்னு சொல்லுவது கேட்கிறது) போகும் வழியில் நிறைய அரளிப்பூ, வெள்ளெருக்கு, ஊமந்தம்பூ, இன்ன பிற பேர் தெரியா பூக்கள் இருக்கும். அதைவிட அதிகமாக முள்ளு மரம். சின்னசின்ன சந்துகளின் முடிவில் ஒரு பெரிய வீடு இருக்கும். ரொம்ப அதிசயமாக தினம் பார்த்து செல்வோம். அங்க தான் இருக்கு பெரிய எருக்கம்பூ தோட்டம். பின்ன ஒரே இடத்தில் 20 செடி இருந்தா அது தோட்டம் தானே?  முதலில் அது பக்கம் போகவே மாட்டேன். ரெண்டு  மூணு நாய் அங்கயே படுத்திருக்கும்.  எந்த மனுசபயலுகளை கண்டும் பயப்படாத இந்த சிங்கம் அந்த தம்மாத்துண்டு நாய்க்கு பயப்படும். இப்பவும் தான்.

கொழுக்கட்டைக்காக விநாயகரை தீவிரமா கும்பிடும் சதுர்த்தி காலத்தில் ஈஸ்வரன் கோவிலில் ஒரு இன்ப அதிர்ச்சி. விநாயகர் கழுத்தில் நம்ம எருக்கம்பூ மாலை. அப்பத்தான் தெரிஞ்சுது விநாயகர் எம்புட்டு எளிமையானவர்னு. சரி நாமும் ஒரு மாலை கட்டுவோம்னு நான், சித்ரா, வனிதா, செல்வி எல்லாரும் எருக்கம்பூ வேட்டைக்கு போனோம். எருக்கம்பூல இருந்து பால் வருமாம் அதை கையில் தொட்டா கையில புண்ணு வரும், ஆறவே ஆறாது, மேல பட்டா சொறியும் போன்ற தடாபுடா முஸ்தீபுகளுடன் பூ பறிக்கும் படலம் ஆரம்பமானது. ஒரு கொத்தா பூ, லேசா மொட்டோடு ஒரு மாதிரி வெண்மை கலந்த சாம்பல் ஊதாவில் அவ்வளவு அழகான பூ. லேசா குமிழ் மாதிரி அமைப்பில், கொத்து கொத்தாக இருந்தது. லேசா அழுத்தி பார்த்தேன். பட்... அட பூ விரிஞ்சுடுச்சே...கண்டுபிடிச்சமில்ல. எல்லா பூவையும் அழுத்தி அழுத்தி பட் பட்ன்னு விரிய வச்சோம்....விரிஞ்ச பிறகு அழகு கொஞ்சம் குறைச்சலா போனது போல பட்டது.

அதற்குபிறகு எப்ப எங்க எருக்கம்பூ பார்த்தாலும் ஒரு பட் கண்டிப்பா உண்டு. இப்ப வரைக்கும். இது நான் எடுத்த எருக்கம்பூ படம். என் பால்யத்தை நினைவுபடுத்தும் பூ...

இன்னும் வரும்
டிஸ்கி..இது சின்ன பதிவுதான். பஸ்ல போடலாம்னு எழுதினது.இருந்தாலும் ஒரு கல்வெட்டா கிடக்கட்டும்னு :))))

Friday, June 17, 2011

அக்கம் பக்கம்

கோவையில் இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்.. இன்னொரு தமாசா ஆகாமல் இருக்கனும். என்னதான் சட்டம் போட்டாலும் நம்ம மக்கள் அதை ஸ்டைலா மாத்திடுவாங்க. ஹெல்மெட் வண்டி பெட்ரோல் டாங்க் மேல், கண்ணாடி மேல், சைடில் என்று தலையைத்தவிர எல்லா இடமும் தொங்கியது. தலைதொங்காமல் இருக்கத்தான்யா ஹெல்மெட்.

---

தினம் புதுபுதுப்பாடல்கள் கேட்க நல்லாத்தான் இருக்கு. சமீபத்தில் கேட்ட பாடல் 180. நல்லாத்தான் இருக்கு. கேட்டதும் கடுப்படித்த பாடல் வேங்கை படத்தில் வரும் ஓப்பனிங் பாட்டு. கதை, சதைன்னு காது வலிக்குது..ஏன்யா ஏன்?
----
சமீபத்தில் தான் ஆடுகளம் பார்த்தேன், ஒத்தை சொல்லாலே பாட்டுக்கு தனுஷ் என்னா ஆட்டம். பார்க்கும் போதே அந்த சந்தோசம் நமக்கும் தொற்றி ஒரு ஆட்டம் போடலாம்னு தோனுச்சு. 60 வருச பழமையான வீட்டில் இருக்கோம்னு நினைப்பு வந்து கம்முனு இருந்துட்டேன். இந்தப்பாட்டை பார்த்து தனுஷ் ரசிகையா மாறலாமான்னு யோசிக்கும் போது வேங்கை படப்பாட்டை கேட்டேன்..என்ன கொடுமை தனுஷ் இது.. வரட்டும் பார்ப்போம்.

------
பள்ளி திறந்து எல்லாரும் செட்டில் ஆகியாச்சு. விலைவாசி ஏற்றத்துக்கு வேன் ட்ரைவர் மட்டும் தப்புவாறா என்ன? போன வருசம் வேனுக்கு 1,100 ரூபாய் ரெண்டு பேருக்கும் சேர்ந்து கொடுத்தேன், இந்த வருசம் அது 2,000. பள்ளிக்கூடம் பக்கமா இருந்தா நடந்தே போயிடலாம். அதனால் ஸ்கூல் பஸ்ஸை சரணடையப்பட்டது. சமச்சீர் இதுக்கு வர வாய்ப்பு உண்டா?

------
கோவையில் இருப்பவர்கள் லேசில் வேறு ஊரில் செட்டில் ஆக மாட்டார்கள், அப்படி இருக்கு ஃப்ரீயா ஊருமுழுதும் ஏசி பண்ணியது போல்.. சொர்க்கமே என்றாலும்.....

----

ஒரு க்ரூப் டூர் போலாம்னு எங்க சங்கத்தில முடிவு செய்து அதற்கு ஒருங்கினைப்பு வேலை நடக்குது. இரண்டு பெண்கள் இருந்தாலே சமாளிப்பது கஷ்டம். 16 பேரை எப்படி கூட்டிட்டு போயி திருப்பி கொண்டு வந்து சேர்த்தப்போறேன்னு நினைச்சாலே கண்ணைக்கட்டுது. ஆனால் சில பல பதிவு எழுத விசயம் கிடைக்கும்.. நரி கிழக்க போனாலும் மேற்கே போனாலும்...............

--------
எங்க ஊருக்கு வரவங்களுக்கு ஒரு அறிமுகம் கொடுக்கலாம்னு :) கோவை வரவங்க எல்லாருக்கும் அன்னபூர்னா தவிர ஹோட்டலே இல்லாத மாதிரி ஒரு பில்டப்பு இருக்கு. அதையும் தாண்டி வயித்தை கெடுக்காத காசையும் பிடுங்காத நல்ல ஹோட்டல் நிறைய்ய இருக்கு.

சாப்பாடு : ரொம்ப பழைமையான ஹோட்டல்.கிட்டத்தட்ட சுதந்திரத்திற்கு  முன் இருந்து இருக்கும்னு நினைக்கிறேன். C.S. MEALS. மதியம் மட்டுமல்ல இரவும் கோவையில் ஃபுல் மீல்ஸ் இருக்கும் இரண்டு உணவகங்களில் இது ஒன்று. ( இன்னொன்று கீதா கபே) மதியம் கெட்டித்தயிர், இனிப்பு ( இது மட்டும் சுமாரா இருக்கும்) வத்தக்குழம்புன்னு நல்ல லஞ்ச். அதே இரவில் நீர்த்த மோர், ஒரு கூட்டுன்னு சிம்பிள் சாப்பாடு. ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கு, அவங்களோடதே அருகில் டிபன் செண்டரும் வச்சிருக்காங்க அங்க அடை, அவியல், வெண்ணெய், வெல்லம்...ம்ம்ம்ம்ம்ம் சூப்பர். எதிரில் கலெக்டர் ஆபிஸ் இருப்பதால் ஓரளவிற்கு கூட்டமும் இருக்கும். நல்ல சைவ ஹோட்டல்.

-----


கூகுள் பஸ்ஸில் முழு நேரம் போவதால் இந்த பதிவு டைரி எழுதும் பழக்கம் குறைஞ்சு போச்சு. இனி கொஞ்சமாவது எழுதனும்னு என்று பாடிகார்ட் முனிஸ்வரனை வேண்டிக்கறேன்.

Wednesday, June 15, 2011

தேவதைகள் கலைத்த வீடு


கிட்டத்தட்ட 60 நாட்கள், காலைச்சுற்றும் பூனைக்குட்டி மாதிரி வீடு முழுதும் வியாபித்த என் தேவதைகள், படுக்கை அறைக்கதவு காலை 10 மணிக்கு மேல் தான் திறக்கும், அதற்குள் அதிலிருந்து வரும் சந்தோசக்குரலில் தெரியும் குறும்பு அந்த நாளைக்கான அலும்புக்கான அஸ்திவாரம்.

ராம நாமம் ஜெபித்தால் புண்ணியமாம்? அதைவிட அதிக முறை அதைவிட அதிக அன்புடன், காதலுடன், கோவத்துடன், பாசத்துடன் உங்களை கூப்பிட்டிருக்கிறேன், என்ன கத்தினாலும் ஒரு சின்ன எதிர்வினை கூட உங்ககிட்ட இருந்து வராது.

என்னைமட்டுமல்ல சுற்றி இருக்கும் நண்பர்களையும் சந்தோசமாகவும், உயிர்ப்போடும் வைத்திருக்கும் வித்தை எங்கிருந்து வந்தது? தினம் பப்புவை தேடி வரும் நண்பர்களுக்கு அவள் அளிக்கும் பதிலிருந்தே அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள்ன்னு தெரிந்துவிடும். 60 நாட்கள் கொண்டாட்டமுடன் கழிந்த இரவுகள், கடைசியாக நேற்று இரவு போட்ட ஆட்டமும், தினம் பாடிய பாடல்களும், உங்களிடம் வாங்கின எண்ணற்ற பல்புக்களும் தான் இனிவரும் நாளையும் நகர்த்த உதவும்.

எதற்கு இன்று விடியவேண்டும்? இதோ திரும்பி வந்து பார்க்கும் போது கலைந்து கிடக்கும் வீடு. காலையில் உங்களை ஆசிர்வதிப்பது போல் தூறிய மழை, அதோடு பப்புவின் பெரிய வகுப்பு போகும் (2 வகுப்பு) முன்னேற்பாடுகள், சொத்து பிரிப்பை விட ஜாக்ரதையாக பிரிக்கப்பட்ட பென்சில்கள், க்ரேயான்கள். ஒவ்வொன்றும் நீங்கள் இப்போது இங்கில்லை என்று குறைகூறுகிறது..

கண்ணுகளா, பள்ளி என்பது ஒவ்வொரு நிமிடமும் சந்தோசமுடன் நினைவு கொள்ள வேண்டியது. எப்போதும் போல் இனியும் படின்னு படுத்த மாட்டேன். முதல் மார்க் எடுத்து உங்க அறிவை நீங்க நிருபிக்க வேண்டியதில்லை, சந்தோசமா அனுபவியுங்கள், பள்ளிதரும் அனுபவம், நண்பர்கள், ஒரு நாள் நோட் கொண்டு போகாட்டி மிஸ் வந்து திட்டுவாங்களோ என்ற பய உணர்வு, பிடிச்ச லஞ்ச் கொண்டு போய் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ண, பிறந்தநாள் நண்பர்களின் தனித்தருணங்களில் உடனிருங்கள், இது கடந்து போனால் திரும்ப வராது. வீடு, வாழ்வியல் துன்பங்கள் எல்லாருக்கும் காத்திருக்கும், கடந்து செல்லவேண்டியும் இருக்கும், அதுவரை பள்ளியை அனுபவியுங்கள். அதோடு முடிஞ்சா கொஞ்சம் படிங்க, ஒரு போதும் ட்யுசன் போ என்றோ, ஏன் முதல் மதிப்பெண் வரலைன்னோ கண்டிப்பா நான் கேட்க மாட்டேன்.
என்ன பிடிக்குதோ அதை செய்யுங்கள், அதில் மேலும் சிறப்பாக வர பெற்றோரா என்ன கடமையோ அதை நாங்கள் செய்கிறோம். உங்கள் சந்தோசம் முக்கியம்.

அன்பான குழந்தைகளை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி.. சிலநேரம் அடுத்தடுத்த சென்ற வருடம் இறந்து போன என் பெற்றோரை நினைத்து மூட் அவுட் ஆகும் போது வர்ஷா வந்து மெதுவா அணைத்துக் கொள்ளுவாள், பப்புவோ இப்ப எதுக்கு சோக சீன்ன்னு கேட்பாள்,

இரண்டையும் அனுபவிக்கும் அம்மாவாக ஆனதற்கு நன்றி கடவுளே.என் அம்மாவாக, தோழிகளாக, செல்ல எதிரிகளாக, எப்போதும் கலாய்க்கும் என் இனிய ராட்சசிகளுக்கு இந்தப்பாட்டு.

உங்களுக்கு பிடிச்ச பாட்டு உங்களுக்காக மட்டும் செல்லங்களா..

Wednesday, June 1, 2011

நாலுகட்டு - எம்.டி.வாசுதேவன் நாயர் - தமிழில் சி.ஏ.பாலன்

பல்வேறு சமுதாயத்தின் வாழ்க்கை முறைகள், அந்தந்த கால கட்டத்தின் சமூக கட்டமைப்புகள், அந்த காலகட்டத்தின் மனித மனங்களின் போக்கும் அங்கீகாரங்களும் ஒரு நல்ல எழுத்தாளரின் பார்வையில் சுவாரஸ்யமாக இருக்கும். அந்த வரிசையில் பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயரின் “நாலுகட்டு”. 1958-59 வருட கேரள சாகித்ய அகாடமி விருது வாங்கிய இந்த நாவலை தமிழில் சி.ஏ .பாலன் மொழிபெயர்த்துள்ளார்.

சில இடங்களில் மூலக்கதையை அப்படியே தரவேண்டிய நிர்பந்தம். கேரள வாழ்க்கை முறை ஓரளவிற்கு தெரிந்தவர்களுக்கு சுலபத்தில் புரியும். இல்லாவிட்டால் சில பகுதிகளை மீண்டும் வாசிக்க நேரிடும். சில புழக்கத்தில் உள்ள சொற்களும் தமிழ் படுத்தும் போது அதன் உச்சரிப்பை சரியாக தரமுடியாததும் ஒரு சிறு இடறல். உ.தா. முத்தஷி - முத்தாட்சி, இடஞ்ஞாழி ( உழக்கு) - இடங்கழி போன்றவைகள்.

நாவல் ஒரு சிறுவனின் வாழ்க்கையும் அவமானமும் அதிலிருந்து அவன் எடுக்கும் தீர்மானமும் பற்றியது. எந்த சமுதாயம் அல்லது மக்கள் என்றாலும் அவர்களின் பாரம்பரியம் என்பது மிக மதிக்கப்படவேண்டிய ஒன்று. இதில் கேரள நாயர் குடும்பமும் அவர்களின் பாரம்பரிய வீடும் கதைக்களன்.

கேரள குடும்பங்கள் அவர்களின் வீட்டைக்கொண்டே விளிப்பது வழக்கம். அதை சுருங்க தரவாடு என்பர். வீடு என்பது பல ஆத்மாக்களின் சங்கமம், பெரிய வீடுகள் நாலு கட்டு கொண்டிருக்கும், வீட்டிலேயே குலதெய்வமோ, பகவதியோ, நாகமோ, குட்டிச்சாத்தானோ வைத்திருப்பார்கள்.

இதில் வடக்கே வீடு   என்னும் பெரிய நாலு கட்டு வீட்டில் வசிக்கும் பெரிய மாமா என்னும் குடும்பத்தலைவனும் அவரின் பெரிய குடும்பத்தையும் குறித்த கதை. நாயர் குடும்பங்களில் மணமகன் திருமணம் முடித்து மணமகள் வீட்டிற்கு சென்று வாழ்வதே அன்றைய வழக்கம். சொத்துக்களில் முன்னுரிமை பெண்களூக்கே. அப்படி ஒரு குடும்பத்தில் பிறக்கும் ஒரு பெண் தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவரை மணந்து வீட்டை விட்டு சென்று விடுகிறாள். அவர்களுக்கு பிறக்கும் மகனை பற்றியும் அந்த குறிப்பிட்ட வீட்டையும் பற்றியது நாலுகட்டு நாவல்.


பாருகுட்டி வடக்கே நாலுகட்டு வீட்டில் பிறந்த பெண், கோந்துண்ணி என்னும் சூதாட்ட வீரனை (சூதாட்டம் கௌரவமாக கருதப்பட்ட காலகட்டம்) மணந்து வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசிக்கிறார்கள். அவர்களூக்கு ஒரு மகன் பிறக்கிறான். அப்புண்ணி என்னும் அந்த சிறுவன் 3 வயது இருக்கும் போது செய்தாலி குட்டி என்னும் நண்பன் வைக்கும் விருந்தில் மாமிசம் அருந்தி இறந்து போகிறார் கோந்துண்ணி, செய்தாலி அதில் விசம் வைத்திருந்தார் என்று பேச்சு.

அப்புண்ணி அவன் தாயுடன் வசித்து வருகிறான், பாருக்குட்டி ஒரு நம்பூதிரி வீட்டில் வேலை செய்து அவனை காப்பாற்றுகிறாள். அவர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு முத்தஷி ( பாட்டி) அப்புண்ணியிடம் அவன் தாயின் பிறந்த வீட்டு பெருமைகளையும் அங்கு நடக்கும் விசேசங்களையும் கூறி கொண்டே இருந்ததால் அவனுக்கு அங்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. முத்தாட்சியுடன் அங்கு நடக்கும் ஒரு சர்ப்பவிழாவுக்கு செல்கிறான், அவன் சொந்த பாட்டி அவனை ஆதரிக்கிறாள் ஆனால் குடும்பத்தலைவனான பெரியமாமா அவனை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளுகிறார், சிறுவனின் மனதில் இது ஆறாத ரணமாகிறது.

இதற்கிடையில் அப்புண்ணி 8 வகுப்பு செல்கிறான். சங்கரன் நாயர் என்பவர் அப்புண்ணிக்கும் அவன் அம்மாவிற்கும் உதவி செய்கிறார். ஊரார் தவறாக பேசுகின்றனர். அப்புண்ணி அதை உண்மை என்று நினைத்து வீட்டை விட்டு வெளியேறி தனக்கும் வடக்கே வீட்டில் உரிமை உண்டு என்று கூறி நாலுகட்டு வீட்டுக்கு செல்கிறான். பல்வேறு தடைகளுக்கு இடையில் நன்கு படித்து ஆசிரியரின் உதவியுடன் வேலைக்கும் செல்கிறான்.

இப்போது அப்புண்ணி இளைஞன், வேலையில் இருந்து வெகு நாட்களூக்கு பின் அவன் சொந்த ஊருக்கு வருகிறான், பெரிய மாமாவின் குடும்பமும் சொத்தும் பிரிக்கப்பட்டு சிதறிக்கிடக்கின்றது. பெரிய மாமா அவனிடம் நாலுகட்டு வீட்டை அடகில் இருந்து மீட்க பணம் கேட்கிறார், தனக்கே விற்க சொல்லி அதை பட்டா பண்ணிக்கொல்கிறான் அப்புண்ணி. இறுதியில் பிரிந்து போன தாயையும் சங்கரன் நாயரையும் அந்த வீட்டுக்கு அழைத்து வருகிறான், வீட்டில் புழுக்கம் தாங்காமல் திணறும் தாயிடம் இடித்து கட்டுவதாக சொல்லுவதை வீட்டை மட்டும் அல்ல அவன் தாயும் சங்கரன் நாயருக்குமான உறவையும் அவன் ஏற்றுகொள்கிறான் என்பதாக முடிகிறது.

அப்புண்ணி சிறுவனாக அறிமுகம் ஆகும் போது ஆரம்பிக்கும் கதை அவனில் ஒரு நாளில் பெரும் பகுதியை நாமும் கழிக்கிறோம். பயந்த சிறுவன், சொந்தங்களை விரும்பும் சிறுவன், தாயின் புது மனித அறிமுகத்தை எதிர்க்கும் சிறுவன், படித்து பெரியவனாகி மனதில் சினத்தோடு இருக்கும் அப்புண்ணி, அவன் விரும்பிய அம்மினியின் மரணம் அவனை மாற்றும் சிந்தனை வரை நல்ல பாத்திரப்படைப்பு. அவன் தந்தையை கொன்றாதாக கூறும் செய்தாலிக்குட்டி சில இடங்களிலும் இறுதியில் பெரியவனான அப்புண்ணிக்கு வேலை வாங்கித்தந்து உதவுவதும், சங்கரன் நாயர் அப்புண்ணியின் குடும்பத்திற்கு உதவுவதை வெறுப்பதும், பெரிய வீட்டின் குடும்ப உறுப்பினரான பெரியமாமா, கிருஷ்னண் குட்டி, பாஸ்கரன், அப்பத்தா, குட்டன், மாளு, அம்மினி, மீனாஷி, போன்ற எல்லா கதை மாந்தர்களூம மறக்கமுடியாத நபர்கள்.

மொழிபெயர்ப்பு நூல்களில் என்னை கவர்வது அவர்களின் வாழ்க்கை முறை, இதில் அதற்கு குறையேதும் இல்லை, ஒரு பெரிய தரவாட்டு வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் விரிவாக இருப்பது அந்த நிகழ்வுகளில் படங்களாக விரிகிறது. படிக்க (பொறுமையுடன்) நல்ல நாவல்.

டிஸ்கி : வேறு ஏதேனும் நல்ல நாவல்கள் இருந்தால் சொல்லுங்க

Tuesday, May 31, 2011

நளபாகம் - தி.ஜா

நூல் விமர்சனம் எழுதும் அளவிற்கு படிப்பாளி இல்லை, இருந்தாலும் படிப்பதில் பிடிச்சதை பகிர்ந்து கொள்ளத்தான். நம்ம ரேஞ்ச் ஏனோ தி.ஜா, கி.ரா, சு.ரா, ஆதவன, ஜெயகாந்தன்,பாலகுமாரன், சுஜாதாவோட தேங்கிடறேன். என்னை பொறுத்தவரை எழுத்தாளர்கள் அவர்களை சுற்றி நிகழும் சம்பவங்களுடன், பலதரப்பட்ட மனித வாழ்வியல் முறைகளுடன் அவங்களையும் இணைத்து வெளிகொண்டுவரவேண்டும். அவர்களை மட்டுமே முதன்மை படுத்தி படிப்பவர்களை படுத்துவதை தவிர்க்கலாம்.

ஒரு வர்ணனை என்பது அதனுள் இழுத்து அதன் போக்கில் நாமும் பயணப்பட வைக்கவேண்டும், தாகூரின் கோராவில் வரும் மழைக்காட்சிகளில் கல்கத்தாவிலும், சு.ராவின் பெண்கள் குழந்தைகளில் கேரளாவிலும் நாமும் நனைவோம். கி.ராவின் கதை மாந்தர் பேசும் பேச்சுகளின் ஊமைபார்வையாளராக இருப்போம். பெண் எழுத்தாளர்களில் லஷ்மியின் வருணனைகள் என்னை கவர்ந்தவை. ஒவ்வொரு எழுத்தாளரும் அவர் நடையில் ஒரு வாசகனை கவரும் போதும் மீண்டும் படிக்க தூண்டுகையிலும் ஆதர்ச எழுத்தர் ஆகிறார். எனக்கு குறிப்பிட்ட யாரும் இல்லை எனினும் தி.ஜாவின் சில நூல்கள் மறுபடி படிக்க வைக்கும், அந்த வரிசையில் நளபாகம்.

நர்மதை ஆற்றின் மேல் ரயில்யாத்திரையில் ஆரம்பமாகும் கதை. கதைன்னு எடுத்துக்கிட்டால் ரொம்ப எளியது, ஆனால் அதில் வரும் மனிதர்களும் அவர்களின் ஆசாபாசங்களும் ஒரு தேர்ந்த சமையலின் எல்லா மண குணங்களையும் கொண்டது. ரங்கமணி என்னும் நடுத்தரவயது மாது, ஜோதிடர் முத்துசாமி, அவர் மனைவி இன்னும் பலருடன் ரயில் யாத்திரையில் வட இந்தியா பயணமாகிறார், கணவனும் குழதைகளும் அற்ற அவருக்கு ஒரு சுவீகார புத்திரனும் மருமகளும் இருக்கிறார்கள். ரயிலுல் தலைமை சமையல்காரனாக அறிமுகமாகும் காமேஸ்வரந்தான் இந்த நளபாகன். காமேச்வரனிடம் மகனை போல் பாசம் கொள்ளும் ரங்கமணி தன்னுடன் வந்து தங்குமாறு அழைக்கிறார். அதே நேரத்தில் அவரின் தத்துபிள்ளை, மருமகளின் ஜாதகத்தை பார்க்கும் முத்துசாமி ஜோதிடர், அவர் மகனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை, ஆனால் மருமகளுக்கு உண்டு என்றும் உறுதியாக கூறுகிறார்.

யாத்திரை முடிந்து ஊர் திரும்பியதும் காமேச்வரன் ரங்கமணி வீட்டிற்கு சென்று சமையல்காரனாக சேர்கிறார், அப்போது தான் ரங்கமணி காமேச்வரன் மூலம் தன் குடும்பத்துக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று விரும்பியது புரிகிறது. ரங்கமணி நினைத்தது நடந்ததா, காமேச்வரனின் வாழ்க்கையின் அடுத்து என்ன என்பது தான் கதை.

காமேச்வரின் பாத்திரம் ஒரு அம்பாள் உபாசகனாக, ஒரு தேர்ந்த சமையல்காரனாக அறிமுகப்படுத்தப்படுகிறது. முத்துசாமி ஜோதிடர் எல்லா ஜோதிடர்களின் நிழல் உருவமாகவும், ரங்கமணியின் குணாதிசியம் ஊரைப்பற்றி நினைக்காமல் தன் வம்ச விருத்தியை மட்டும் குறிக்கோளாக்கும் பெண்ணாகவும், பங்கஜத்தையும் துரையையும் நெடுநாள் பழகிய தம்பதியினரைப்போன்றும், காமேச்வரனின் குருவான வத்ஸனை இறந்தகால பாத்திரமாக்கி எப்பேர்பட்ட சன்யாசிக்கும் ஒரு இரவு உண்டு என்றும், வீட்டுக்கார பாட்டி, ஜகது, தேவாரம் ஐய்யங்கார் எல்லாருமே ஒரு கதாருசிதான்.

Monday, March 14, 2011

அம்மா. அப்பா காக்கா......

இன்றோடு ஒரு மாதம், புதை சேறில் மூழ்கி மூச்சு திணறி போராடி வெளி வந்த காலம், போன மாதம் இதே 14 ஆம் தேதி, 5 நாட்களாக கோமாவில் இருந்த என் அம்மா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட 15வது நிமிடம் கண்ணைத்திறந்து என்னைப்பார்த்ததும், நான் பார்த்துக்கொண்டே இருக்கும் போதே அவர் உயிர் பிரிந்ததும்  நிகழ்ந்த நாள்.என் அப்பா இறந்து முழுதாக ஒரு வருடம் 15 நாட்களே ஆன நிலையில் அம்மாவும் கிளம்பிட்டாங்க. திடீர்ன்னு ஒரு வட்டவெளியில் பாதுகாப்பு இல்லாமல் நிற்பது போல ஒரு உணர்வு..அம்மா....

அம்மா...உனக்கும் எனக்குமான உறவு ரொம்ப அன்னியோன்னியமா இருந்ததில்லை. 6 குழந்தைகளை பெற்று வளர்க்கும் ஆயாசத்தில் குறிப்பிடும் படி நீ  என்னை கவனித்ததாக நினைவு இல்லை.  ஒரு வயசில் கொண்டு போய் அப்பிச்சி வீட்டில் விட்டுட்டே, நான் திரும்பி வரும்போது எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா பிறந்து சாமிகிட்ட போயிட்டதும், புதுசா ஒரு தம்பி பிறந்திருப்பதும் தெரிஞ்சுது. ஆனா உனக்கு தெரிஞ்சிருக்கும், அந்த வீட்டு வாசப்படியில் உக்கார்ந்து நான் அம்மாவை நினைச்சு அழுதது இன்னும் புகையாக நினைவிருக்கிறது.

அம்மா...உன்னோடு வந்த பிறகும் ஒரு நாள்கூட உன் பக்கத்தில் தூங்கினதில்லம்மா, எனக்கு பிறகு 2 தம்பி, 1 தங்கைன்னு எப்பவும் உன்னை பங்குபோட்டுக்க ரெடியா இருப்பாங்க. ஒவ்வொரு வருச லீவுக்கும் நான் போகவே மாட்டேன்னு அழுவேன், நீயும் அப்பிச்சியும் பிடிவாதமா ஊருக்கு கொண்டு போய் விடுவீங்க, எப்ப திரும்பி வந்து கூட்டிட்டு போவேன்னு தினம் ராத்திரி அழுதுட்டேதான் இருப்பேன்.

அம்மா...கொஞ்சம் பெரியவளானதும் அதே காம்பவுண்டில் இருந்த விதவை தூரத்து சொந்தக்கரம்மாக்கு துணைக்கு நிரந்தர துணையாக ஆயிட்டேன். உன்கூட ஒரு நாள் கூட பக்கத்தில் உக்கார்ந்தோ உன் கையில் சாப்பிட்டோ நினைவே இல்லம்மா. உன்னால தலை பின்ன முடியாதுன்னு நான் 10வரைக்கும் முடியே வளர்த்தலை. நான் உன்னை எவ்வளவு எதிர்பார்த்தனோ அவ்வளவு தூரத்தில் இருந்தேன்.

அம்மா, நீ ரொம்ப பாவம், படிப்பறிவு இல்லாத, அப்பாதான் உலகம்னு நம்பி இருந்த லட்சக்கணக்கான அம்மாவில் நீயும் ஒருத்தி, ஒரு நாள் கூட என்னைப்படின்னு சொன்னதில்லை, திட்டினதில்லை, அடிச்சதில்லை, ஒரு முத்தம்கூட கொடுத்ததில்லை. ஆனா நீ கடைசி படுக்கையில் இருந்த போது நான் உனக்கு கொடுத்தேன், மகேஷும், தேவாவும் ரமேசும் அழுதுட்டே இருந்தாங்க, நீ போயிடுவேன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சுது, நாங்க உன்கிட்ட பேசினது உனக்கு தெரிஞ்சுதா?

அம்மா...எனக்கு குழந்தைகள் பிறந்தபோதும் நீ என் அருகில் இல்லை, உன்னை ரொம்ப மிஸ் பண்ணினது அப்பதான். உனக்கு அப்பாமேல எவ்வளவு நம்பிக்கை, நாங்க கிண்டல் பண்ணினமாதிரியே உன்னால அப்பா இல்லாமல் இருக்க முடியலையா? உன் கண்ணை தானம் கொடுததது உனக்கு தெரிஞ்சிருந்தா நீ என்ன சொல்லிருப்பேன்னு யோசிக்கறேன்.

அம்மா.. நீ என்னை பார்த்துட்டே கண்ணை மூடினையே அனத நிமிசம் எனக்கு என்ன தோனிச்சு தெரியுமா? நல்லதும்மா நீ போனதே நல்லது, இப்படி கஷ்டப்பட்டு படுக்கையில் இருப்பதற்கு போவதே நல்லதுன்னு தோனிச்சும்மா. நீ இல்லாத இந்த 30 நாட்களில் வாழ்க்கையின் இழப்பதற்கு ஒன்னுமில்லைன்னு புரிஞ்சுது. நீ போன 5வது நாள் இன்னொரு மரணமும் நம்ம வீட்டில் நடந்துடுச்சு. யாருக்காகவோ வாங்கின வலி, அர்த்தமற்று யார் மேலோ கொண்ட அன்பு, கோபம், பொறாமை, துக்கம், ஏமாற்றம் எல்லாமே அந்த நேர உணர்வுகள்.

அம்மா.. நீ சொன்னது மாதிரி நான் கொஞ்சம் கல்லுதான்மா, அப்பா இறந்தபோது இருந்த திடுக்கிடல் நீ போனபோது இல்லம்மா, ஒருவேளை உன் முடிவு ஏற்கனவே தெரிந்தனாலயால் இருக்கும். இப்ப எங்க இருக்கே? இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாமில்ல? உனக்கு புரியுதோ இல்லையோ உன்கிட்ட எல்லாம் சொல்லனும்னு தோனும், எப்பவும் போல பேசாம இருந்திடுவேன், நேத்து திருப்பூர் போயிட்டு வரும்போது இனி இங்க நமக்கு யார் இருக்காங்கன்னு தோனுச்சு.

அப்பா, இப்பவாவது அம்மாவை நல்லா பார்த்துக்க. தினம் காலையில் வரும் காக்காக்கள் தான் இனி நீங்க நினைச்சுக்கறேன். எப்பவும் எங்க கூட இருங்க. ரெண்டு பேருமே இல்லைன்னு நினைக்கும்போது ஒரு துக்கமான, ஏமாற்ற, ஒரு குறை இருப்பது போன்ற  உணர்வு வருவதை தவிர்க்கமுடியலை.. இனிமேல் சும்மா கூப்பிடக்கூட நீங்க ரெண்டு பேரும் இல்லையே. இதிலிருந்து நான் சீக்கிரம் வந்துடுவேன், அவங்களையும் வரவைங்க.

அம்மா, அப்பா இனி போட்டாவிலும், வீட்டை சுத்தும் காக்கா உருவிலும்..

Tuesday, March 1, 2011

வலி...வலி...வலி

நலமா?


இரண்டு மாதங்கள் தான் எழுதாமல் இருந்திருக்கேன், ஆனால் கடந்து  போன 65 நாட்களும் கற்றுக்கொடுத்த பாடங்கள் மீதமிருக்கும் வாழ்க்கைக்கு மிகவும் உதவும்.

வலிக்காமலே வாழ்வில்லையே..ரொம்ப சரிதான், இதுவரைக்கும் எவ்வளவோ வலிகள் வந்து போயிருக்கிறது. எப்ப நினைச்சாலும் வலிக்ககூடியது ஒன்றுதான். கால் தடுக்கி விழுந்து இடது கை மணிக்கட்டு இரண்டு இடத்தில் நொறுங்கியது. வலி உச்சந்தலையில் இறுக்கி பிடித்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்தேன். மருத்துவமனைகள் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு போயி ரொம்ப நாள் ஆயிடுச்சு போல. ஆனாலும் அந்த காலை வேளையில் அறுவை சிகிச்சைக்கு கிட்டத்தட்ட என்னையும் சேர்த்து 20 பேர் இருந்தோம். வலி மறக்க செய்யும் மருந்து ஊசிமூலம் இடது கை தோள் பகுதியிலும் கழுத்திலும் போடப்பட்டது. உடைந்த கை என்னோடதே இல்லை என்பது போல் தனியே கட்டுப்பாடின்றி சுழன்றது.

உடைந்த மணிக்கட்டுக்கு பின்னிங் என்னும் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது, உடைப்பின் தன்மை பொறுத்தும் தேவை பொறுத்தும் பின் எண்ணிக்கை அமைகிறது. சுவற்றில் ஓட்டை போடும் ட்ரில் மிசின் மாதிரி ஒரு ட்ரில் மிசினில் கை எலும்புகளில் ஓட்டை இடப்பட்டு பின்கள் பொருத்தப்படுகிறது. நீளமாக இருக்கும் அவைகள் தேவைபோக வெட்டப்பட்டு மடக்கி விடப்படுகிறது. உணர்வுகள் மறத்துப்போவதால் வலியின்றி இந்த சிகிச்சையை பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் மேல் வழக்கம் போல் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கட்டு. வலியே இல்லை, கை மிக கனமா, எதோ ஒரு தேவையற்ற பொருளை சுமப்பது போல ரொம்ப உறுத்தலா இருந்தது. ஒரு 4 மணி நேரம் கழித்து தான் நரகம் தெரிந்தது.

ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் வைக்க முடியாது, கையில் பெல்ட் போட்டு தோள் வழியே கழுத்தில் மாலை மாதிரி ஒரு தொட்டில் வேறு. இந்த இடம் தான் வலிக்குது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாமல் கை, விரல்கள், தோள் பட்டை, பின் கழுத்து, முதுகு என்று வலி வலி வலி மட்டுமே. தூக்கம் தொலைத்த மிக நீண்ட 6 வார காலங்கள். வீக்கம் குறைந்து சிறு இடைவெளி தெரிய ஆரம்பித்ததும் தோலின் வறட்டுத்தன்மை காரணமாக அரிப்பு வேறு. ஏதாவது பூச்சி உள்ள போயிட்டா என்ன பண்றது என்ற கவலை.

எல்லாவற்றையும் விட கொடுமை, ஒரு வேலையும் செய்ய முடியாமல் முடக்கி போட்டதுதான். தலை பின்னக்கூட இன்னொருத்தர் தயவு தேவை.
ஒரு கையை கொண்டு என்னதான் செய்து பழக முடியும்? இல்லாத போதுதான் அதன் உபயோகம் தெரியும் என்பது உண்மைதான். கோபம், ஆத்திரம், யாருகிட்டவும் பேசப்பிடிக்காமல், எந்த நேரமும் ஒரு எரிச்சல், எல்லாரிடமும் சிடுசிடுப்பது, தூக்கமில்லாததால் வரும் சோர்வு என்று கூட இருப்பவர்களையும் சேர்த்து வதைத்த நாட்கள்.

6 நரக வாரத்திற்குப்பிறகு கட்டுப்பிரிக்கப்ப்ட்டு பின் அகற்றப்பட்டது. வலியில் மயக்கமே வந்தது. இதற்கு எந்த வலி நிவாரணிகளும் தரப்படுவது இல்லை. பின் எடுத்ததும் கையே ஒரு கோணல் ஆனது போலவும், விரல்களை அசைக்க முடியாத வலியும்....இனி பழைய படி வண்டி ஓட்ட இன்னும் 3 மாதம் ஆகும்.

பின் இணைத்தலும் , அகற்றுதலும் யுடுபில் இருக்கு ஆனால் பார்க்கவே முடியாது. ஒரு சின்ன கவனக்குறைவு இவ்வளவு வலியும், செலவும், வேதனையும் தந்திருக்கிறது. இதற்கு முன் பிரசவ டேபிளுக்கு மட்டும் இன்னொரு முறை போகக்கூடாதுன்னு நினைச்சிருக்கேன். ஆனால் அதை விட கொடூரம் எலும்பு முறிவு. வயதானவர்கள், குழந்தைகளை நினைத்தால் ரொம்ப கஷ்டம்தான். ஒரு சின்ன கை எலும்பு முறிவேஇப்படி இருக்கே இடுப்பு உடைந்தவர்கள், கால் உடைந்தவர்கள்...நினைக்கவே பயமாருக்கு.

இந்த வலியில் எனக்கு ஒரே பொழுது போக்கு, ப்திவுலகம் தான், கூகுள் பஸ் இல்லாட்டி நான் கொலைகாரியாவே ஆயிருப்பேன். இவ்வளவு நடந்ததிலிருந்து ஒன்று நல்லா புரிஞ்சுது.. என்னவா?

நான் ஒத்தைக்கையையிலேயே வேகமா தமிழில் டைப் பண்ணுவேன்,, இப்ப வரைக்கும், இதையும் சேர்த்து, இன்னும் 3 மாசத்திற்க்கு :)))