Thursday, February 21, 2019

கும்பமேளா 2019

நாதகேந்த்ரா , ஆனைகட்டி கோவை


  குளிர்காலம், அதிக பட்சம் பத்து டிகிரியில் எலும்புவரை ஊடுருவும் குளிர், மிக மெல்லிய தூரத்தெரியும் விளக்கொளி, அமர்ந்திருக்கும் படித்துறையில் இரண்டு படிதாண்டி பெரும்பிரவாகமாக கங்கை, இருளில் குளிரில் உண்ட மயக்கத்தில் மெல்லிய குரலில் காதில் விழும் குரலொலி. கங்கை எப்படி பூமிக்கு வருகிறாள் என்று வர்ணனையை கண்களை மூடிக்கேட்டால் நாமும் கங்கையோடு விஷ்ணுவின் பாத்த்தை விட்டு வர மறுத்திருப்போம், பாகீரதனின் தவத்தில் விஷ்ணுவில் ஆணைக்கிணங்க கங்கை வர ஆயுத்தமானதை கண்டிருப்போம், ஒவ்வொரு உலகமாக கங்கை இறங்கி வர பூமிக்கு வரும் போது சிவபெருமானின் விரித்த சடையுடனான சுற்றில் கிறங்கியிருப்போம், கங்கையை முடிந்த சடையில் நாமும் கட்டுண்டிருப்போம். கண்களை திறக்காமல் இந்த காட்சிகள் நமக்குள் நடக்கும். இது ஒரு அனுபவம்.
ஒரு

எந்த ஒரு நிகழ்வு நம்மை  காலநேரக்கணக்குகள் தாண்டிஉறைந்த நொடிக்குள் ஆழ்ந்து போகச்செய்யுமோ அதுவே அனுபவம். உங்களுக்கு பிடித்த பிடிக்காத எந்த நிகழ்வானாலும் அந்த அனுபவம் நடந்தே தீரும். அதை மன இடுக்குகளில் ஒளிப்பதோ அல்லது தினமும் திறந்து நுகர்வதோ நம் விருப்பமே. நினைவுகளே மீதமாகி ஒரு காலத்தில் நம்மை மீட்டெடுக்கலாம், நல்ல ஆரோக்கியத்தில் இருக்கும் போதே அதை சேமிப்பது பணத்தை சேமிப்பதை காட்டிலும் சிறந்த்து.
நாங்கள் சார்ந்திருக்கும் நாத கேந்த்ரா ஒரு வேதகால வாழ்வியல் சூழல் கொண்ட தனிமனித ஆன்மீக கல்வி மையம். இங்கு நாம் மறந்து போன வழக்கங்கள் நிறைய கற்றுக்கொடுக்கப்படுகிறது. வேதகால வாழ்க்கை முறை, ஆன்மீகம், ( ஆன்மீகமும் பக்தியும் வேறு, குழப்பிக்க வேண்டாம்) ஜோதிடம், யோகா, போன்ற பரவலாக அனைவரும் அறிந்தவைகள் தவிர மந்திர சாஸ்திரம், எந்திர சாஸ்திரம், கர்ம தந்திரா, ஸ்வரயோகா, அக்னி ஹோத்ரா என்று நீங்கள் கேள்விப்படாத வாழ்க்கை முறைகளையும் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் நீங்களாகவே இருந்து குரு மூலம் தனிமனித மேம்பாடு அடைய வேதகால வாழ்க்கை முறையில் அமைந்த பயிற்சிகள் இவை. எங்கள் குரு ஸ்வாமி ஓம்கார் அவர்களின் நேரடி மேற்பார்வையிலும், அவரிடமே நேரடியாகவும் இப்பயிற்சிகளை கற்றுக்கொள்ளலாம். நாத கேந்த்ரா கோவை ஆனைகட்டியை தலைமை இடமாக கொண்டு, நகர்ப்புற மையமாக பிரணவபீடம் ஆர்.எஸ் புரத்திலும், மற்றும் சென்னை, நெய்வேலி சிங்கப்பூர், அர்ஜெண்டினா மற்றும் பெரும்பாலான நாடுகளிலும் உள்ளது. எங்களுடைய மாணவர்கள் உலகம் முழுதும் பரவலாக இருக்கிறார்கள். இந்த பயிற்சிகளில் ஒரு அங்கம் ஆன்மீகப்பயணங்கள். திருவண்ணாமலை, காசி, இமயமலை, கும்ப மேளா போன்ற இடங்களில் உள்ள நிகரற்ற இயற்கையின் சக்தியை நம் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தி கொள்ளுதல் முக்கியமானது. இந்த பயணங்களில் பெரும்பாலானவை ஆண்டுதோறும் செல்லப்படுபவை.

அர்த்த கும்பமேளா :
12 வருடங்களுக்கு ஒரு முறை வரும் மஹா கும்பமேளா சென்ற ஆறு வருட்த்திற்கு முன்பு அலகாபாத்தில் நடந்த்து. அப்போது போக வாய்ப்பு அமையவில்லை. இந்த அர்த்த கும்பமேளாவிற்கு திட்டமிட்ட்தும் நான் போவதில் உறுதியாக இருந்தேன். 31 ஜனவரி அன்று காலையில் திட்டமிட்டபடி கிளம்பி பெங்களூர் விமானநிலையம் அடைந்தோம். அடுத்து அலஹாபாத் விமானம் கால தாமத்தால் மதியம் 3 மணிக்கு மேல் தான். இது மாதிரி ஸ்வாமி ஓம்காருடனான பயணத்தில் நான் பெரிதும் விரும்புவது அவர் கூறும் தகவல்களை. குருவுடன் பயணிப்பது என்பதே ஒரு அனுபவம். அதிலும் அவர் உங்களுடைய சிறந்த நண்பராகவும் இருந்தால் அந்த பயணம் மிகச்சிறப்பானதாக அமையும். ஸ்வாமியுடனான என் அனைத்து பயணங்களும் என்றும் நினைவிலிருக்கும் சிறந்தவையே. நான் மட்டுமல்ல எங்களுடைய மாணவர்கள் அனைவரும் இதை கட்டாயம் ஆமோதிப்பார்கள்.

பெங்களூரில் காத்திருக்கிறோம். எனக்குள் ஏகப்பட்ட கேள்விகளும் யோசனைகளுமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதலின் நாம எதுக்கு கும்பமேளா போகிறோம்? பத்து நாட்கள் என்ன செய்வோம்? இந்த ரெண்டு கேள்விகளுக்கும் காரணம் இருக்கிறது. ஜோதிடம் தவிர அனைத்து பயிற்சிகளும் கற்றிருந்தாலும் எதையும் முழுதாக உபயோகிக்காத ஆள் நான். அதிலும் முக்கியமாக மந்திர ஜெபம் போன்றவைகளை என் கணவர் அளவிற்கோ, என் மகள் அளவிற்கோ, என்னுடன் இருக்கும் சக மாணவர்கள் அளவிற்கோ இடைவிடாது செய்யும் ஆள் இல்லை. என் இயல்பு அப்படி. காசி பயணங்களில் தினமும் இரு வேளை கங்கையை தரிசித்து, குளித்து , கேதாரநாதருக்கு கங்கையால் அபிஷேகம் செய்து , தொடர்ச்சியாக மந்திர ஜெபம் முடித்து அன்றைய பொழுது வேறு இடங்களை பார்ப்பது, பயணிப்பதுன்னு இருக்கும். ஆனால் கும்பமேளாவில் எங்கும் நகராமல் இதையே என்னால் செய்ய முடியுமா என்று பெரிய கேள்வி மிகவும் தொல்லையாகவே இருந்த்து. பயணம் முடிவதற்குள் பதில் கிடைக்கும் என்றும் தோணியது. ஒரு வழியாக மாலை 5 மணிக்கு ப்ரயாக்ராஜ் என்னும் அல்காபாத் அடைந்தோம். எங்களை அழைத்து செல்ல வண்டி தயாராக இருந்த்து.

வழக்கமான வட இந்திய நகரங்கள் போன்றே தூசி நிறைந்த வழி, அலகாபாத் நகரை அடைந்த்தும் நகரெங்கும் விழாக்கோலம். எங்கும் மந்திர ஓசைகள் பெரிய ஸ்பீக்கரில் வழிகிறது. ஹரஹர மஹாதேவ் , ஹரே ராம ஹரே சீதா , ஜெய் ஜெய் என்று விதவிதமான வழிபாட்டு முழக்கங்கள். இதற்கு முந்தைய கும்பமேளாவிற்கு நான் செல்லவில்லையே தவிர அங்கு இருந்த்து போன்றே அத்தனை விசயங்களை ஆயிரம் முறை கேட்டிருப்பேன். கூட்டம், குளியல், அசுத்தம், உணவு, வெள்ளம் வந்து டெண்ட் நிறைந்த்து, என்று ஏகப்பட்ட விசயங்கள் சொல்லப்பட்டிருந்த்தால் கொஞ்சம் பரபரப்பாகவும் இருந்த்து. இன்னும் நான்கு நாட்களே மவுனி அமாவாசைக்கு இருந்த நிலையில் எங்கும் மக்கள் வெள்ளம். நம்மைப்போல் ப்ளைட் டிக்கெட் எடுத்து ரூம் புக் பண்ணி வரவங்க இல்லை. தலைச்சுமையாக உடைகளும் சமைக்க பொருட்களும் வயதானவர்கள் முதல் கைக்குழந்தை வரையிலுமாக சாரைசாரையாக மக்கள். எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் கிடைத்த இட்த்தில் சமைத்து உண்டு உறங்கி கங்கையை பூஜித்து, வணங்கி , குளிப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். கம்பூன்றிய மூதாட்டி முதல் பால்குடிமாறாத பச்சிளம் குழந்தை வரை அந்தக்குளிரில் கங்கையை பிராத்தனை செய்வது தங்களது கடமையாக கருதுகின்றனர்.
.
மருமக்கள் எடுத்த தம்பதியினர் ஒரு மண்டலம் போல கங்கைக்கரையில் தங்கி தினம் அவர்களால்  முடிந்த்தை அவர்கள் குடும்ப பண்டிட்க்கு தானம் செய்து, ஒரு வேளை உப்பில்லாமல் சமைத்து விரதம் இருக்கின்றனர். அவர்களின் வசிப்பிடம் முன்பு கோதுமைப்புல்லை முளைப்பாரியாக விதைத்து பூஜிக்கின்றனர். சிலர் வாழைக்கன்றும் சிலர் துளசியும் கூட வளர்க்கிறார்கள். இவ்வாறு விரதம் இருப்பவர்கள் கல்பவாசிகள் என்று அழைக்கின்றனர். தசரதனுடைய முன்னோர் தன் அரசு உட்பட அனைத்தும் தானம் தந்து கங்கைக்கரையில் இந்த விரதம் மேற்க்கொண்ட்தால் அவர்கள் வம்சத்தில் ராமன் அவதரித்த்தாக நம்பிக்கை. அதே நம்பிக்கையுடன் இந்த கடும் குளிரில் இவ்விரத்த்தை அனுசரிக்கிறார்கள்.


 
மொத்தம் பத்து நாட்கள் கும்பமேளாவில் இருப்பதாக திட்டம் அதில் பிப்ரவரி 4 மவுனி அமாவாசையும்,  10 ஆம் தேதியும் முக்கியமான நாட்கள். 31 அன்று இரவு நாங்கள் எங்களுடைய தங்குமிட்த்தை அடைந்தோம். வழியெங்கும் டெண்ட்களை பார்த்தபடி போனதால் அதையே எதிர்பார்த்திருந்தேன். ஆனால் மிக அருமையான இரண்டு பெரிய டெண்ட்களும் , முன்புறம் பெரிய காலியிடமும், அதனை சுற்றி தகரத்தால் அமைந்த சுற்றுசுவரும், உள்ளே தனித்தனியான இந்திய, வெஸ்டர்ன் கழிப்பிடங்களும், தண்ணீர் பைப்பும், உள்ளே வைக்கோல் விரித்து அதன் மேல் ப்ளாஸ்டிக் ஷீட் தரை, படுக்க இதமான பெட், போர்த்துக்கொள்ள ரஜாய், தலையணை என்று  அட்டகாசமான இடம்

குளிர் ஒரு மெல்லிய ஈரப்போர்வையாக படர ஆரம்பித்த்து. நாங்கள் தங்கிருந்த இடம் ஷர்மா என்பவருக்கு சொந்தமானது, அவரும் அவருடைய சகோதர்ர்களுக்கும். குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு கும்பமேளாவிலும் இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவர்கள் இரண்டு மாதம் அங்கு தங்கி மேலே சொன்ன கல்பகவாசிகளை தினமும் வழிநட்த்துகின்றனர். தொழில்முறையில் நீதிபதியான ஷர்மா, குடும்ப பாரம்பரியமான பண்டிட் என்பதையே முக்கியமாக கருதுகிறார். அவரின் மொத்த குடும்பமும் எங்களுக்கு அருகிலிருந்த டெண்ட்டில் வசித்து, வேலையாட்கள் இல்லாத போது எங்களுக்கு தேவையான உணவையும் அவரின்மனைவியே செய்து தந்தார். இரவு நாங்கள் சென்றடைந்த போது சுடசுட ரொட்டி, சப்ஜி தயாராக இருந்த்து. உணவு முடித்து கங்கைகரையை பார்க்க சென்றோம், நாங்கள் தங்கியிருந்த இடமே செப்டம்பரில் கங்கை பிரவாகமாக ஓடும் இடம் தான், இப்போது அங்கு தான் ஆயிரக்கணக்கில் டெண்ட், ரோடு, பாலம், மின்கம்பங்கள், கழிப்பிடங்கள், தண்ணீர் குழாய்கள், மனிதர்களால் நிறைந்திருந்த்து. மிக அருகில் கங்கை, கரையெங்கும் மின் ஒளியில் குளிரில் கங்கையை தரிசிப்பதே ஒரு அனுபவம்.

ஜெயஜெய கங்கே
நீங்கள் சுற்றுலாவாசியாக இல்லாமல் கங்கையை உணர்ந்து செல்பவராக இருந்தால், எங்களுக்கு அவளைப்பார்த்த்தும் வரும் சந்தோசத்தை புரியவைக்க முடியும். வெகு நாள் பார்க்காத அம்மாவை, காத்திருந்து நெடுந்தொலைவு பயணித்து  பார்க்க போனால்,   பார்த்த்தும் எப்படி உணருவீர்களோ அப்படியே எங்களுக்கு கங்கை. வெகுநேரம் ஆனதால் குளிக்க முடியவில்லை. எங்கே போகப்போகிறாள், எங்களை ஆசிர்வதிக்காமல் காலையில் பார்ப்போம்.

பிப்ரவரி 1- 5 வரை
இரவா பகலா என்று தெரியாத மின்னொளியில் கண்ணை மூடி தூங்க முயற்சித்தால் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் பஜன்கள். ஹரஹர மகாதேவ், சீதாராமா என்று ஆறு பக்கத்தில் இருந்து வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு அழைப்புகளில் ஒலித்துக்கொண்டே இருந்த்து. ஒவ்வொரு திசையாக கவனித்து எப்போது உறங்கிப்போனேன்னு தெரியவில்லை. விடிந்த்து, குளிர் 10 டிகிரிக்குள் நடுங்கவைத்த்து. எங்களது தினப்படி வேலை இங்கு காலையில் அக்னிஹோத்ரா, தொடர்ந்து ஜெபம், முடிந்த்தும் டீ வரும், குடித்து குளிக்க செல்வோம், உடல் நடுங்க, மனம் குளிர நிறைவாக குளித்து முடித்த்தும், மீண்டும் ஜெபம். 11 மணிக்கு உணவு வரும், உணவருந்தி சிறிது ஓய்வு, அல்லது வெளியில் சென்று வரலாம், மீண்டும் 4 .30 க்கு குளியல், அக்னிஹோத்ரா, ஜெபம், இரவு உணவு என்பது மட்டுமே. பிப்ரவரி 4 அன்று காலையில் சிறிது நேரத்தில் குளியல், அதனை தொடர்ந்து ஹோம்ம், பிராத்தனைகள், ஜெபம் , தொடர்ந்து மூன்று நாட்கள் இரவில் சத்சங்கம் என்று 5 நாட்கள் ஓடியே விட்ட்து.



கங்கையில் குளியல் இரு வேளை என்பதே நோக்கம், காலையில் 8 மணிக்கு சென்றாலும் குளிர் சில நாட்களில் 6 டிகிரி இருந்த்து. கரையில் கங்கையை விழுந்து வணங்கி, தியானித்து, ஸ்பரிசித்து பிறகே கால் வைப்போம். குளிர் நடு எலும்பில் சென்று நேராக தாக்கும். அத்தனை குளிர் பழக்கமில்லாவிட்டாலும் எங்களுடைய காசி பயணங்கள் பெரும்பாலும் இந்த காலநிலையிலேயே இருக்கும் என்பதால், இது புதிதில்லை. மெதுவாக, ஆர்பரித்து ஓடும் கங்கையில் மார்பளவு தண்ணீரில் நின்று மீண்டும் தியானித்து முங்கி எழுவோம். அதில் எங்களுக்குள் போட்டியும் உண்டு, விடாமல் 11 முறை நானும் ஹென்னாவும் முங்கி எழ முயற்சித்து 2வது நாள் தான் முடிந்த்து. ஒரு முறை முங்கும் போது மட்டுமே குளிர், அது முடிந்தால் ஆனந்தமே, எத்தனை நேரம் வேண்டுமானாலும் கங்கையில் கிடப்போம், சில நேரம் மாணவர்களில் பெரும்பாலோனோர் இருப்பார்கள், எப்போதும் விட இந்த முறை ஜலஜபம் அநேகமாக எல்லா நாளும் செய்தோம். மாலையும் இதே நடைமுறை தொடரும்.

பிப்ரவரி 6-8
முன்பே சென்றூ இருந்தாலும் மீண்டுமொரு முறை குருவுடன் காசி பயணிக்கவேண்டும் என்பது  நெடுநாள் விருப்பம். அதற்கு ஒரு வாய்ப்பாக அலகாபாத்திலிருந்து காசி. கேதார்நாதர் கோவில் கரையில் கங்கையில் குளியல், தனியே கங்கா ஆரத்தி பார்க்க நின்று கொண்டிருந்தேன். இணையம் தொடர்பு விட்டுவிட்டு வந்தாலும் அவ்வப்போது பேஸ்புக் லைவ் முயற்சித்துகொண்டிருந்தவளை கங்கா ஆரத்தியில் பெரிய விளக்கு ஏற்ற சில பொதுமக்களுடன் என்னையும் அழைத்து ஏற்ற சொன்னார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் காத்திருக்கும்போது அழைத்து விளக்கேற்ற சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியான ஆனந்தமாகவே இருந்த்து



எப்போதும் விட காசிவிசுவநாதரை தரிசிக்க மிகப்பெரிய வரிசை, கிலோமீட்டர் நீளத்தில் இருந்த்து. நடக்கவே தேவையில்லாமல் தள்ளியே சென்ற கூட்டம். அடுத்த நாள் காலையில் நானும் ஸ்வாமியும் விசுவநாதரை தரிசிக்க சென்றால் அதே வரிசை இன்னும் பெரிய நீளத்தில். ஸ்வாமி என்னிடம் உள்ள போய் தான் தரிசிக்கனுமா என்றார், அப்படி எதுமில்லை, நீங்க எங்க சொல்றீங்களோ அங்கிருந்து பார்த்தால் போதும் சொன்னதும், விசுவநாதர் கோவிலை சுற்றி இடிபாடுகளுக்கிடையில் எங்கெல்லாமோ அழைத்து சென்று ஒரு உயரமான இடிந்த இட்த்தில் நின்று அதோ பாருங்கள் விசுவநாதர் கோவில் என்று காட்டினார். 20 அடி தொலைவில் வெளியிலிருந்து தரிசித்த்தும், விசாலாட்சி ஆலயத்திற்கு சென்றோம். மிக சிறிய கோவில்தான் அவள் குடியிருப்பது,நெருக்கமான சந்துகளில் உள் புகுந்து புறப்பட்டால் பச்சை பட்டுத்தி பின்னால் சக்தி ரூபமும் முன்னாள் உற்சவருமாக அழகாக தரிசனம் தந்தார். அத்தனை நேரம் கூட்டமான கோவிலில் திடீரென்று நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். திருப்தியாக தரிசித்து,  அன்னபூரணி கோவிலில் மதிய உணவிற்கு சென்றோம். அத்தனை கூட்ட்த்தில் என்று நினைக்கும்போதே அன்னபூரணி எங்களை உடனே உள் அழைத்து இனிப்புடன் முழு உணவளித்தார். அங்கிருந்து மீண்டும் கேதாரநாதர். மாலைகுளியல் தரிசனம், ஜெபம். இரவு உணவிற்கு வெளியே சென்றதும் வாரணாசியை மேலும் குளிர்விக்க இடி மின்னலுடன் பெருமழை. கங்கைக்கரையோரம் தங்கியிருந்த இட்த்தில் காற்றின் சத்தமும் மழையும் அடிக்கடி மின் தடையுமாக மறக்கமுடியாத இரவானது. அடுத்த நாள்  மீண்டும் அல்காபாத் திரும்பினோம்.



பிப்ரவரி, 9-10.
இன்னும் ஒரே ஒரு நாள் தான் என்னும் போது அதற்குள்ளாகவா முடிந்துவிட்ட்துன்னு இருந்த்து. இந்த இட்த்தில் அலகாபாத்தில் கும்பமேளாவிற்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை பற்றி கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். ஸ்டில் தகடினால் ரோடு, பாலம் என்று இராணுவம் பாதி வேலையை முடித்து கொடுத்திருக்கிறது. அனைத்து இடங்களிலும் கழிப்பறை, உடை மாற்றும் வசதி, கங்கையில் பூக்கள் உள்ளிட்ட எதையும் விடவும், துணிகள் துவைக்கவும் தடை, குழந்தைகள் குதித்து விளையாடினால் கூட கரையிலிருக்கும் காவலர்களும் தன்னார்வலர்களும் மிக மென்மையாக தடுக்கிறார்கள், பெண்கள் உடைமாற்ற எட்டுக்கு எட்டு அளவில் கரையெல்லாம் தற்காலிக அறைகள், வழுக்காமல் இருக்க தினமும் நிரப்ப்ப்படும் வைக்கோல்கள், தண்ணீர் குழாய்கள், இலவச உணவுகள் என்று அத்தனை சிறப்பான ஏற்பாடுகள். ஆனால் காசியில் அதற்கு நேர் மாறாய் சுத்தம் என்றால் என்ன விலைன்னு கேக்கும் நிலை.
ஸ்டில் ஷீட் ரோடு
தற்காலிக பாலங்கள்

உடை மாற்றும் அறை
. எங்களுடைய இந்த 10 நாள் பயணத்தில் கூடவே இருந்து அனைத்து ஏற்பாடுகளும் செய்த ஹென்னாவிற்கு தனிப்பட்ட முறையில் நன்றிகள். துறவு மட்டுமே ஆன்மீகம் அல்ல. குருவானவர் உங்கள் பொறுப்புகளை விட்டுவிட்டு ஆன்மீகத்தில் ஈடுபடு என எப்பொழுதும் கூறமாட்டார். உங்கள் பொறுப்புகளை சிறப்பாக செய்ய வழிகாட்டுவார். சரியான வழிகாட்டியுமாவார்.  எல்லாருமே அலகாபாத் போகலாம், திரிவேணி சங்கமத்தில் குளிக்கலாம், காசி செல்ல்லாம், கங்கையில் முங்கலாம், ஆனால் குருவுடன், குருவருளுடன், அவர் துணையுடன் வழிகாட்டுதலுடன் செல்வது எல்லோருக்கும் அமையாது. இந்த முறை எனக்கு   அந்த வாய்ப்பை தந்த என் குருவிற்கு அன்பும் நன்றியும் வணக்கங்களும்.