பொதுவாகவே டிவி பார்க்க எனக்கு பிடிக்காது.
சின்னக்குழந்தைகளை முழு மேக்கப்புடன் அழைத்து வந்து ஆடவைத்து, பாடவைத்து, அழவைத்து, ஜெயித்தால் கட்டிப்பிடிச்சு, தோற்ற மனசுருக்க கணங்களை க்ளோசப்பில் காட்டி தேவையில்லாமல் இந்த வயதில் அவர்களை மன அயர்ச்சிக்கு ஆளாக்கும் பெற்றோர்களை உருவாக்கும் டிவி.
அடல்ஸண்ட் ஏஜ் எனப்படும் விடலைப்பருவத்தில் இருக்கும் குழந்தைகளை அவர்களைவிட பெரிய மனிதர்களாகவும், வயதிற்கு மீறிய வேலைகளை செய்பவர்களாகவும் காட்டி அந்த வயதிலிருப்போரை ஒரு மாய உலகத்திற்குள் தள்ளிவிடும் டிவி.
இளம்பெண்களையும், ஆணகளையும் கேக்கவே கர்ணகொடூரமாக இருக்கும் இசைக்கு கண்டபடி ஆடவிட்டு அதற்கு மதிப்பெண் கொடுக்க ஒரு கும்பலுமாக கெமிஸ்ரி, ஹிஸ்டரி என்று உளறிக்கொட்டும் மனிதர்களுக்கு நீதிபதி பதவி கொடுத்து அந்த பதவியை கேவலப்படுத்தும் டிவி.
இருபத்திநான்கு மணி நேரமும் ஒளிபரப்பு என்னும் நிலையில் அவர்கள் என்னதான் செய்ய முடியும்? சினிமாவும், அரசியலும் விட்டால் வேறு வழியே இல்லை. நல்ல செய்திகள் ஒரு 5% மக்களை அடையும் மீதி 95% சதவீத நிகழ்ச்சிகள் மக்களிடம் திணிக்கப்படுகிறது. இன்றைய நிலையில் மிக முக்கிய பிசினெஸ், பணப்புழக்கம் உள்ள இடம் டிவிதான்.
சமீபத்தில் எனக்கு ஒரு குறிப்பிட்ட டாக்ஷோவில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது, தலைப்பு செமையாக இருந்தது, எதிரணியினரும் சுவாரஸ்யமானவர்களாக இருக்கவே ஒத்துக்கொண்டு, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். வாழ்க்கையில் சமீபத்தில் செய்த பெரிய தவறு அதுதான். எனக்கு சாதாரணமா தலைவலியே வராது, (வரவைச்சுத்தான் பழக்கம்) ஆனால் இப்ப வரைக்கும் தலைக்கு உள்ளே எல்லாம் வலிப்பது மாதிரி ஒரு ஃபீலிங் :(
நிகழ்ச்சி மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டதால் சரியான நேரத்தில் அங்கே இருந்தேன், அப்போது இன்னொரு நிகழ்ச்சி (அதே ஷோவின் வேறு ஒரு தலைப்பு) படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது.. அப்பவே கடவுள் என்னை காப்பாத்த ட்ரை பண்ணிருக்கார்னு ரொம்ப லேட்டாத்தான் புரிஞ்சது.
இரண்டு மணிக்கு ஆரம்பிப்பதாக சொன்ன நிகழ்ச்சி மிகச்சரியாக 5.30க்கு ஆரம்பிக்கப்பட்டது, அதிலும் நான்கு வரிசைகளில் இருக்கைகள் இடப்பட்டிருந்தது, மிக உயரமான வரிசைகளில் ஏறமுடியாத பெண்கள் முன்வரிசையில் அமரவைக்கப்பட்டனர், அந்த இருக்கைகள் பாதி உடைந்தும், ஒரு பக்கம் லேசாக ஆடிக்கொண்டும் இருந்தது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் அமர்ந்து பேசக்கூடிய ஒரு நிகழ்ச்சியில் ஒரு வசதியான இருக்கை கூடவா போட முடியாது? அதைவிட கொடுமை சிறப்பு விருந்தினர் அமரும் இருக்கை,, டிவியில் பார்க்கும் போது ஒரு மாதிரி நெளியறாங்களே என்று நினைத்தேன், பின்ன மூட்டைப்பூச்சி கடிக்கும் போது சொறிய முடியாதில்ல, காமெரா வேற ஓடிட்டு இருக்கு, நெளிஞ்சுதானே ஆகனும்.
தலைப்பு மட்டும் தான் நல்லாருந்தது, ஆனால் நிகழ்ச்சி ஒரு மினி குழாயடி சண்டைதான், ஒரு குருப்புக்கு ஒரு மைக் அதை ஒருத்தர் பேசுவதற்குள் இன்னொருவர் பிடுங்க, கிட்டத்தட்ட அடிதடிதான், இதை பார்த்து கேலியாக சிரிக்கும் பார்வையாளர் கூட்டம், நான் மேல் வரிசையில் உட்கார்ந்திருந்தேன், பின்னால் திரும்பி கீழே பார்த்தால் வாந்தி வருவது மாதிரி இருந்தது. இடையில் டீ கொடுத்தார்கள் குடித்து விட்டு கப்பை பின்னாடி போட்டிருங்கன்னு சொன்னா அப்படித்தானே இருக்கும். கொடுத்திருக்கும் தலைப்புக்கும் பேசும் பேச்சுக்கும் அர்த்தமோ,தொடர்போ இல்லை, நிகழ்ச்சியை நடத்துபவர் அவருக்கு வரும் டாக்பேக் ( இயக்குனர் எப்படி பேசனும், என்ன டயலாக் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார் அதான் டாக்பேக்) அதை கிளிப்பிள்ளையாக சமாளிக்கிறார், சொல்லவரும் கருத்தை பாதியிலேயே மறுப்பது, அதற்கு தேவையில்லாமல் நேர்மாறாக கேள்வி கேட்பது, மிக செயற்கையாக, நாடகத்தனமாக ரியாக்சன், பங்கேற்பாளர்கள் சொல்வதை முழுதும் கேட்காமல் இயக்குனர் திருப்பும் திசைக்கு நிகழ்ச்சி திரும்புவது, பங்கேற்பாளர்கள் என்று வருபவர்கள் ரொம்ப சொற்பம் மற்றவர்கள் ஃபில்லர்ஸ் எனப்படும் நிரப்பபடுபவர்கள்,
(பரவலாக பங்கேற்பாளர்களை அமர வைத்து நடுவில் அவர்கள் யூனிட் ஆட்களை அல்லது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அமரவைப்பது, இவர்களுக்கு ஃபில்லர்ஸ் என்றூ பெயர்) என்று ஒரு டாக் ஷோவின் உண்மையான முகம் இதுதான்.
இந்த மாதிரி நிகழ்ச்சிகள் எப்படி படம்பிடிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளத்தான் அதில் கலந்து கொள்ள சம்மதித்தேன், ஆனா அது இவ்வளவு கொடுமையாக இருக்கும் என்று தெரியவில்லை. இதில் பாராட்டப்பட வேண்டிய விசயம், இந்த நிகழ்ச்சியை நடத்த துணைபுரியும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், அவர்கள் பெரும்பாலும் பெண்கள் மிக சுறுசுறுப்பாக, எவ்வளவு பொறுமையாக வேலைபார்த்தார்கள், பணி முடிந்து வீடு போக விடியற்காலை 3 மணி ஆனதாக கூறினார்கள்.
இப்படியாக போய்க்கொண்டே இருந்தது, ஒரு கட்டத்தில் தலைவலி தாங்கமுடியாமல், கடுப்பாகி கொண்டே இருந்தது நிகழ்ச்சி முடியும் அறிகுறியே இல்லை, 7.30 மணிவரை பேசியதையே திரும்பத்திரும்ப பேசி சாவடித்தார்கள். பொறுமை எருமையை விட பெரிது தான் ஆனாலும் என் பொறுமை எல்லை தாண்டிபோயிடுச்சு.. அதனால அங்க இருந்து எஸ்கேப்.. இனிமேல் யாராவது டாக்ஷோ, குரங்காட கோட்டானாட, அப்படின்னா சொன்னா... என்னை கொலைகாரி ஆக்க விருப்பமிருப்போர் சொல்லலாம்..