Showing posts with label பப்பு. Show all posts
Showing posts with label பப்பு. Show all posts

Monday, June 10, 2013

என் வெளிச்ச பூக்களுக்கு வாழ்த்துகள்


ம்ம்மா சாயங்காலம் வரும் வரைக்கும் ரெஸ்ட் எடுங்கம்மா, வந்து பார்த்துக்கலாம். இது என் கண்மணிகள் இன்னைக்கு எங்கிட்ட சொல்லிட்டு போனது. கடந்த 50 நாட்களாக என்னுடன்.. இப்படி சொல்லுவது கூட தப்புதான் அவங்களோட எப்படி ஓடுச்சுன்னே தெரியலை. நான் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ரொம்ப சோர்ந்து போன தற்கொலை எண்ணம் கூட வந்த நாட்கள். என் குழந்தைகளோட முழு தைரியமும் என் வளர்ப்பு குறித்த சிறு பெருமிதமும் கொள்ள வைத்த நாட்கள். என்குழந்தைகள் என் முழு தோழிகளாகவும் சில நேரம் அம்மாவாகவும் என்னிடம் அன்புகாட்டிய விடுமுறை. இந்த விடுமுறை முடியாமல் இருந்திருக்கலாம்.


இந்த விடுமுறையில் கண்டிப்பா எதாவது கத்துக்கனும்னு நான் சொன்னபோது அவங்க சாய்ஸ் வீட்டு வேலைகளும் சமையலுமாக இருந்தது. வேற வீட்டுக்கு குடிவந்த நான்கு மாதம் ஆகிறது, இந்த நான்கு மாதத்தில் பெரும்பாலும் எல்லா வேலைகளூம் அவங்க தான் பண்ணிருக்காங்க. சமையல் கூட சில நேரம் அவங்கதான். அம்மா குழந்தைகள் உறவு மாறி தோழிகள் என்ற நிலை வந்து ரொம்ப நாள் ஆனபோதும் இந்த விடுமுறையில் என்னை உக்காரவைச்சு என்குழந்தைகள் ரொம்ப பார்த்துக்கிட்டாங்க. உடம்பு சரியில்லைன்னதும் அவங்களோட தவிப்பும் வேதனையும் எனக்கு இன்னும் பயத்தை உண்டாக்கிடுச்சு. கண்ணுகளா உங்களுக்காகவாவது எல்லாத்தையும் சமாளிக்கலாம்னு தோனுதுடா. 

இந்தவருசம் 8வது போகும் வர்ஷு சுடிதார்ல வந்து நிக்கும் போதுதான் என் பொண்ணு எவ்வளவு பெரியவளாயிட்டான்னு தோனுது. முன்னாடி இருக்கும் கடமைகள் பயமுறுத்துகிறது. கிட்டதட்ட அவ தோள் தாண்டி வளர்ந்து நிக்கும் பப்பு இந்த வருசம் 4ம் வகுப்பு. வழக்கம் போல இந்த வருடமும் என் செல்லங்கள் புஸ்தகத்தை கட்டிட்டு அழவேண்டியதில்லை. இந்த விடுமுறை பப்புக்கு அவ மொழியில் வெட்டியா போயிடுச்சு. வர்ஷா சிலது கற்றுக்கொண்டாள். ஹிந்து பேப்பர் நடத்தின ஃபோட்டாகிராபி சம்மர் கேம்ப், சுட்டிவிகடன் நடத்திய சுட்டி ஸ்டார் என்னும் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் தேர்வுல கலந்துட்டு செலக்ட் ஆயிருக்கா. விவசாயகல்லூரி வானொலியில் நான் பேட்டி கொடுக்க போனபோது கூட ரேடியோ ஸ்டேசன் காட்ட ரெண்டுபேரையும் கூட்டிட்டு போயிருந்தேன். அங்கு கதை, பாட்டுன்னு பாடினதில் வாராவாரம் கதை நேரத்தில் வர்ஷாவோட கதை வெளிவர அவங்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். வாழ்த்துகள் கண்ணம்மா.

பப்பு இந்த வருசம் பென்சிலை விட்டு பேனாவில் எழுத போறாளாம், பேனாவை பத்தி ஏகப்பட்ட ஆராய்ச்சி பண்ணி வாங்கிட்டு போயிருக்கா. அவளால் மட்டுமே இந்த 2 மாதங்கள் சின்ன சிரிப்பொலி கேக்க முடிஞ்சது. வருங்காலத்தில் விவசாயம் பார்க்க போறாளாம். அக்ரி யுனிவர்சிடியில் ஒரு ப்ரொபசரை ப்ரெண்ட் பிடிச்சி வச்சிருக்கா. அவரும் இவளுக்கு ஒரு துண்டு வெச்சிருக்காராம். பாவம் அக்ரி.

என் செல்லங்களுக்கு, எப்பவும் போல இப்பவும் உங்களை படின்னு சொல்லி படுத்த மாட்டேன். உங்களுக்கு என்ன தேவைன்னு உங்களுக்கே இப்ப தெரிஞ்சிருக்கும், இது பண்ணுங்க இதை செய்யாதிங்கன்னு இனி சொல்லிதர வேண்டாம். முடிவு பண்ணிக்குங்க, முடிவு செய்தபிறகு எதுக்காகவும் யோசிக்கவோ கவலைப்படவோ தேவையில்லை. இதெல்லாம் நம்மால் முடியும்னு நம்பிக்கையில தான் அந்த முடிவு நம்முள்ள வருது. அதனால் எப்பவும் எதையும் சந்தோசமா தெளிவா அணுகுங்க. கேள்வி நீங்க உங்களையே கேட்டு அதற்கு எல்லாகோணத்திலும் பதில் நீங்களே சொல்லி பாருங்க. இந்த பதிலில் இந்த முடிவு வரும் இது எதிர்விளைவா நடக்கும்னு நினைச்சு பாருங்க. வாழ்க்கை ஒரு முழு நீள கலர் படம் விரும்பிய வண்ணங்களில் அழகா அமைச்சுக்குங்க.ஒரு அம்மாவா அதுக்கு நான் என் உதவிகளை கண்டிப்பா செய்வேன். 

என்னை மன அளவில் இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என் தோழிகளுக்கு ஆல் தெ பெஸ்ட்..என் ஜாய். அண்ட் தேங்க்ஸ்.

உங்களுக்கு பிடித்த பாடலுடன் இந்த நாள் துவங்கட்டும். லவ் யு கண்ணுகளா


Monday, June 4, 2012

என் சிறகும் வானமும்


ஒன்றரை மாதம் கழித்து இன்னைக்குதான் ரெண்டு பேரும் சூரிய உதயம் பார்க்கிறார்கள். என்ன ஒரு ஆட்டம். ஏப்ரல் 18இல் இருந்து நேற்றுவரை வாசலில் பெய்த வெயில் முழுதும் இவங்க தலையில் தான் இருந்திருக்கும்.

தாத்தா வீட்டுக்கு ஒரு வாரம் அனுப்பி வைத்திருந்தேன். அடுத்த நாளிலிருந்து போன், அம்மா போரடிக்குது வாங்கம்மா, எப்பம்மா வருவீங்க, சாப்பிடவே பிடிக்கலம்மா, ஒரு இரவு ரெண்டு பேரும் குட்நைட்டுக்கு பதில் ஒரே அழுகை, வந்து கூட்டிட்டு போங்கன்னு..பின்ன இங்க ரோஹித், ரிஷித், மஹாலஷ்மி, காவியா, சனந்தா, பிருந்தா, நிதின், ஹரிஷ், அச்சு, சக்தி, ஸ்ரீவத்ஸன், இத்தனை பேரோட செம ஆட்டம். இதில் 10 நாள் முன்பு ரோஹித், ரிஷித் (ரெண்டு பேரும் இவங்க கஸின்) ஊருக்கு போயிட்டாங்க. சக்தி, அச்சு வீடு காலி செய்து போயிட்டார்கள். இருந்தாலும் கொஞ்சமும் குறையாத விடுமுறைகூத்துதான். வழக்கமாக போகும் டேபிள்டென்னிஸ், டான்ஸ், பாட்டு எல்லாம் நிறுத்திட்டேன். இருக்கவே இருக்கு இன்னைக்கு இருந்து அந்த கொடுமை எல்லாம். ஒரு மாசம் ஜாலியா இருக்கட்டும்னுதான்.

ம்ம்ம் ஒரு சின்ன கொசுவர்த்தி சுத்தி பார்த்தால், பால்யமும் பள்ளிவிடுமுறையும் எவ்வளவு அழகானது. இப்ப நாலு சுவருக்குள் விளையாடினாலும் அதுவும் அழகுதான். சின்ன சண்டை,கோபம், சமாதானம், மறுபடியும் சண்டை.

வர்ஷா பள்ளி சென்ற முதல் நாள் தான் பப்பு வயிற்றில் இருப்பதை உறுதி செய்த நாள். அதனால் அது எனக்கு கொஞ்சம் ஸ்பெஷலான நாள். தினம் அவளை நானே கொண்டு விட்டு கூட்டிட்டு வரனும்னு நினைத்தேன். பப்பு பள்ளிக்கு போனா நாளில் ஊரெங்கும் செம மழை. எப்படித்தான் மிஸ் இவளை சமாளிப்பாங்கன்னு கவலையா இருந்தது. அதே போல் இவங்க ரெண்டு பேரில் பப்பு மிஸ்கிட்ட தான் ஏகப்பட்ட பிரச்சனை.

ஒரு வாரமாக துவங்கிய தடபுடல் ஏற்பாடுகள் புது சாக்ஸ், பென்சில் பாக்ஸ், பேனா, இன்னபிற வஸ்துகள். ஆனால் ரெண்டு பேரிடமும் நல்லவிசயம் தேவையற்றதுன்னு எடுத்து சொன்னா வேண்டாம்னு ஒதுக்கிடுவாங்க. அதிக விலையுயர்ந்த எந்த பொருளையும் வாங்கித்தரமாட்டேன். கடையில் பென்சில் பாக்ஸ் 400க்கும் மேல விக்கறாங்க. அதை வாங்கித்தரவும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்!!!  2 ரூவா பென்சிலுக்கு 400ரூபாய் பாக்ஸ்..!!!


என்னதான் விளையாட்டாக நாட்கள் சென்றாலும் அவங்க பள்ளி திறக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். எல்லாவருடம் போலவும் இந்த வருடமும் உற்சாகமாக கிளம்பி போயாச்சு. எனக்குதான் எல்லா அறைகளும் காலியாக வெறுமையாக இருக்கும். ஒரு வருடம் எப்படி ஓடிற்று? கண்முன் குழந்தைகள் வளர்ந்து வருவதை சின்னதான சீருடைகள் எடுத்துரைக்கிறது. எனக்கிருக்கும் பொறுப்புகளை அடுத்த அளவுக்கு போன அவர்களின் காலணிகள் கவனிக்க செய்கின்றது. தலைவாரும் போது அவர்களின் உயரக்கூடல் ஒரு வருடம் கூடியதை உணர்த்துகிறது. ஊட்டிவிடும்மா என்று சொல்லாமல் வர்ஷா தானே வேகவேகமாக சாப்பிடுவதை பார்க்கும் போது பால்யம் முடிந்து பதின்ம வயது வருகிறதோ என்று மனசுக்குள் ஒரு சின்ன பதற்றம்.


போட்டி நிறைந்த இந்த உலகில் மனசு விட்டு சிரிப்பது கூட குழந்தைகளுக்கு கடினமாக விசயமாக ஆகிவிட்டது. ஒரு சாக்கு மூட்டை அளவு புத்தகங்கள், இதெல்லாமா அவங்களுக்கு வாழ்க்கையை சொல்லிதரும்? இவ்வளவு விடியக்காலையில் பள்ளிக்கூடத்தில் என்ன செய்வார்கள்? காலையில் 8.40 முதல் மாலை 4 மணிவரை. என்ன கொடுமை இது? 10 மணிக்குப் பள்ளி ஆரம்பித்தால் என்ன? கிட்டத்தட்ட 8 மணிநேரம் ஒரே இடத்தில் ஒரே வேலையை விதவிதமான குணாதியம் உள்ள ஆசிரியர்களுடன் கழிப்பது கொஞ்சம் கடினம் தான். அதும் அறிவியல் ஆசிரியர்களும் கணித மேதைகளூம் எப்போதுமே கடினமாகவே இருக்கிறார்களாம்.


ஸ்கூல்க்கு போங்க, சந்தோசமா இருங்க, சொல்லித்தரதை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க, சும்மா நெஞ்சில் அடிச்சு மனப்பாடம் பண்ண வேண்டாம். ட்யுசன் வைக்க மாட்டேன், நானும் சொல்லித்தர மாட்டேன், நீயா படி நீயா புரிஞ்சுக்க, என்ன புரியுதோ அதை எழுது அதுக்கு மார்க் வந்தா போதும். அதனால் ரொம்ப டென்சன் ஆகாமல் போ. எந்த டீச்சரையும் பார்த்து பயந்துக்க வேண்டாம், தெரியலைன்னா தைரியமா கேளுன்னு சொல்லி அனுப்பிருக்கேன்.


வர்ஷா,பப்பு பள்ளியில் ஆயிரம் பேரில் நீங்களும் ஒருத்தர், ஆனா எனக்கு என் உலகமே நீங்க தான்.  நான் வெறும் தாய்ப்பறவை, என் சிறகும் வானமும் நீங்க தான். படிச்சு பெரிய வேலைக்கு போயி சம்பாதிக்கனும்னு இம்சை பண்ணமாட்டேண்டா. உங்களுக்கு சவுகரியா இருக்கும் அளவுக்கு நான் சம்பாதிச்சு தரேன். நீங்க சந்தோசமா இருங்க. வாழ்க்கையை அதன் போக்கில் வாழகற்றுக்கொள்ளுங்கள். எவ்வளவு போராட்டமான தருணமாக இருந்தாலும் எதிர்கொள்ளுங்கள், பணம் காசை விட பெரியது மன தைரியம், தன்னம்பிக்கை. அனாவசிய பயமில்லாமல், சுதந்திரமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். அதுவே பெரிய பாடமும் படிப்பும்.


வாழ்த்துகள் கண்ணுகளா.. ஆல் தெ பெஸ்ட்


.உங்க ரெண்டுபேருக்கும் பிடிச்ச உங்க ஃபேவரைட் பாட்டு :)

YOU FOLLOW WHAT YOU FEEL INSIDE, YOU DON'T HAVE TO TRY, IT COMES NATURALLY :))



Saturday, December 24, 2011

பொற்சித்திரமே பொக்கிஷமே



செல்லக்குட்டி, என் தங்கம், என் வெள்ளி .. இதெல்லாம் நான் பப்புவை கொஞ்சுவது இல்லை. அவ என்னை சொல்றது. இப்படி சொன்னா எதோ ஒரு காரியம் ஆகவேண்டி இருக்குன்னு அர்த்தம். தேவதைகளில் வால் முளைத்த தேவதையை பார்க்கனுமா? எங்க வீட்டில் இருக்கா.

சில நேரம் ரொம்ப பேசறாளேன்னு நினைக்கும் போது கூட இப்ப பெரும்பாலும் குழந்தைகள் அப்படித்தான் பேசுகிறார்கள், நாம தடுத்து ஒண்ணும் ஆகப்போவதில்லைன்னு விட்டுடுவேன். இருந்தாலும் எங்க அம்மினி கொஞ்சம் ஓவர் தான்.

பப்பு, ஒரு நடமாடும் இல்ல எப்பவும் ஆடிட்டே நடக்கும் ஒரு பட்டாம்பூச்சிதான். காலையில் எழுந்ததில் இருந்து ஆரம்பிக்கும் அவள் அட்டகாசங்கள் இரவு தூங்கும் போதும் சில நேரம் தூக்கத்திலும் தொடரும். எழுந்து வரும் போதே கட்டிலில் இருந்து கூப்பிடுவா, அவளை உப்பு மூட்டை தூக்கி வரனும், இனிமேல் முடியாது பெரிய பொண்ணு ஆயிட்டேன்னு சொன்னா, நீங்க தானே சொன்னீங்க எத்தனை வயசானாலும் நான் உங்க குழந்தைன்னு திருப்பி கேட்பாள். ப்ரஷ் பண்ண நாந்தான் தொடங்கி விடனும். அவ ரெடியாகி வந்ததும் எப்படி இருக்கேன்னு இடுப்பில் கை வைத்து ஸ்டைலா கேக்கும் போது பதில் ரெடியா வச்சிருக்கனும்.

பப்பு, அவளை சுற்றி இருக்கும் அனைவருக்கும் ஒரு உடனடி புன்னகை உற்பத்தி செய்யும் மந்திரக்காரிதான். நாம் யோசித்து சொல்வதை உடனே சொல்லி அசத்துவாள், சுத்தம், அவளோட பொருட்களை எடுத்து வைத்துக்கொள்வது. முக்கியமா சேமிப்பு, தெரியாமல் வெளியில் 5 ரூபாய் வைத்தால் கூட அது அவள் கணக்கில் போயிடும். அவகிட்ட கடன் வாங்கறதை நான் தான் நிறுத்தனும். நேத்து காய்க்காரம்மாவுக்கு தர 40 ரூபாய் எடுத்ததை நைட்டே கேட்டு வாங்கிட்டாள். எதுவும் கேக்கவே மாட்டாள். பிறந்த நாளுக்கு கூட அதிகபட்ச அவளோட ஆசை கலர்பென்சிலாகத்தான் இருக்கும். அவளோட ஷாப்பிங் போன கதை தனி பதிவா வரும்.

காய்ச்சல், சளி எதுவுமே அவளை சோர்ந்து போகச்செய்யாது. எதுவந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இப்பவே இருக்கு. போன மாதத்தில் கிட்டத்தட்ட 15 நாள் காய்ச்சலில் இருந்தாள், ஒரு நாள் கூட அழவோ, வேறு எந்த வித சோர்வையுமோ முகத்தில் காட்டவே இல்லை. டாக்டர் என்ன சொன்னாரோ அதை நாம் மறந்தாலும் அவ மறக்கவே மாட்டாள், டயட் என்னன்னு கேட்டுட்டு வந்தாள், அதைத்தவிர வேறு எதையும் தொடக்கூட இல்லை.

பப்பு ரொம்ப ப்ராக்டிகல், யாருடா உனக்கு பெஸ்ட் ப்ரெண்டுன்னு கேட்டேன் அவ பதிலில் ஆடிப்போயிட்டேன். எதுக்கும்மா ஸ்கூலில் ப்ரெண்டு? க்ளாஸ் முழுதும் ப்ரெண்ட் தான், ஆனா யாரும் க்ளோஸ் ப்ரெண்ட் இல்லம்மா, அப்பறம் அவங்க பேசலை இவங்க பேசலைன்னு புலம்பனும், எனக்கு அக்காவும் நீங்களூம் தான் பெஸ்ட் ப்ரெண்ட்.  க்ளோஸ் ப்ரெண்டுனா பிரச்சனைம்மா. எல்லார்கிட்டயும் பேசுவேன்.,பை சொல்லிட்டு வந்துடுவேன்னு.. வர்ஷாவும் இப்படித்தான். இந்த தெளிவு கடைசி வரை இருக்கட்டும்.


என் மாமியார் இறந்த போது சிலர் அழுதபோது பப்பு அவளோட கஸின் அவ வயதுதான் அவன்கிட்ட சொல்றா, ”எதுக்கு அழறாங்க? வலியோட இருந்தாங்க, இப்ப காட் கிட்ட போயிட்டாங்க, அங்க வலிக்காதாம், காட் கிட்ட போனா ஹேப்பியா இருப்பாங்க, அப்பறம் எதுக்கு நாம அழனும்னு”



பப்பு, நீயும் வர்ஷாவும் என் குழந்தைகளாக வந்ததால் நான் தான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கேன். தேங்க்ஸ்டா செல்லம். நீ என் பொக்கிஷம் தான். எப்பவாவது வாழ்க்கையில் சோர்வுறும் தருணங்களில் தெய்வம் போல் ஒலிக்கும் உன் குரல் தான் என் அடுத்த அடிக்கு ஆதாரம். இப்ப மாதிரியே எப்பவும் சந்தோசமா விரும்பிய அனைத்தும் கிடைத்து ஆனந்தமா இருடா செல்லம்.



இன்னைக்கு அவளுக்கு ஸ்பெஷலா அவ ட்ரெஸ் கலரில் ஒரு ரோஸ் வேற எங்க வீட்டில் பூத்தது, அவளுக்கான சிறப்பு ஆசிர்வாதம்.

அம்மா உங்களுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்னு கேட்கும் போது இந்த உலகம் அளவுக்குன்னு சொன்னேன், அவ சொன்னது அவளோட இதயம் அளவுக்காம்.


தேங்க்ஸ்டா குட்டி


உனக்கு பிடிச்ச இந்த பாடலுடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என் ரவுடி பப்பு

இன்னைக்கு தான் ராம் க்கும் பிறந்த நாள் ஹேப்பி பர்த்டே ராம்



Friday, December 16, 2011

பல்ப் ஃப்ரம் பப்பு

இது கூகுள் பஸ்ஸில் எழுதியது. ஒரு தொகுப்பா எடுத்து வைத்து பப்பு பெரியவளானதும் கொடுக்கனும்

========

பப்பு சீக்கிரம் சாப்பிடு கண்ணு

அரை மணி நேரம் கழிச்சு அதே பருப்பு சாதம் நோண்டிட்டு இருந்தா

ஏநான் :என்னடி பண்றே. சீக்கிரம் சாப்பிடுன்னு சொன்னனே, நீ சாப்பிடற 4 பருக்கை பருப்பு சாதத்துக்கு அரை மணி நேரமா?

பப்பு : நான் டயட்டும்மா...

நான் : ங்ஙே!!!! என்னது டயட்டா?

பப்பு: ஆமாம்மா டயட்டுன்னா உங்களை மாதிரி இல்ல, நிஜ டயட்டு.. மீதி ஆனதை சாப்பிட மாட்டேம்மா.

-------
1.பப்புவும் வர்ஷாவும் சாப்பிட்டு இருந்தாங்க, ஒரு மாசமா டிவிக்கு தடா, வாரம் 3 மணி நேரம் டிவியில் ப்ரோக்ராமும், ஒரு படம் டவுன்லோடியும் பார்க்கலாம், சாய்ஸ் இருக்கு டிவி வேண்டாதவங்க கம்ப்யுட்டர் கேம்ஸ் ஆடலாம், யாரு குறைவா டிவி, கம்புட்டர் முன்னாடி இருக்காங்களோ அவங்களுக்கு வாரம் 50 பாயிண்ட், 500 பாயிண்ட் யாரு முதலில் ரீச் பண்றாங்களோ அவங்க இஷ்டப்படி 150 ரூபாய்க்கு ட்ரீட், ஒன்லி சாப்பாடு, ட்ரீட் வேண்டாதவங்க அந்த காசை உண்டியில் சேர்த்துடலாம். வர்ஷா 800, பப்பு 600 ரூபாய் வச்சிருக்காங்க, அதுல நான் 300ரூபாய் கடன் வாங்கினேன், மேட்டர் அது இல்ல வர்ஷாக்கு மேத்ஸ்ல இண்ட்ரஸ்ட்னு ஒன்னு சொல்லிதந்திருக்காங்க, அவ அதை பப்பு கிட்ட சொல்ல, பப்பு 12% வட்டி கணக்கு போட்டு அதை அவங்க பாட்டிகிட்ட செக் பண்ணி வந்து என்கிட்ட கேக்குது...அந்த 300 ரூபாய்க்கு இது இண்ட்ரஸ்ட்ம்மா, அதையும் சேர்த்துடுன்னு :((

2. எதோ சினிமா பாட்டு பாடிட்டு இருந்தா நான் முறைச்சேன், அதுக்கு ரொம்ப கூலா சொல்லுது எதை கேக்கறதா இருந்தாலும் என்கிட்ட கேக்காதீங்க, என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேளுங்க, அவங்கதான் சொல்லித்தந்தாங்க, நான் சும்மா பாடிப்பார்த்தேன்னு.

--------
பப்பு :அம்மாஆஆ, நீங்க என்ன சொன்னாலும் கலைஞருக்கு ஓட்டு போட மாட்டேன்

நான் : சுட்டி டிவி அவங்களுதுதான், ஓட்டு போடலைன்னா எப்படி தெரியும்?

பப்பு : ஓ அப்படியா? சரி போடறேன் :))

வருங்கால அரசியல்வாதி ரெடி


------
நான் : பப்பு போயி குளிடி..

பப்பு : ஒரு லுக்கோடு - ம்ம் எனக்கு ஆர்டர் போட அந்த ஆண்டவனே யோசிப்பான்

நான் : என்னடி சொல்றே?

பப்பு : பஞ்ச் டயலாக்கும்மா :))))

------
ஒவ்வொரு வருசமும் சித்ராபவுர்னமி மிக சிறப்பா சத்யநாராயண பூஜை ராமின் சித்தி வீட்டில் செய்வது வழக்கம், நேத்து நைட் பப்புவிடமும் வர்ஷாவிடமும் நாளைக்கு சாயங்காலம் இந்த பூஜைக்கு போறோம்னு சொன்னேன்..

இதற்கு முன் ஒரு சின்ன ப்ளாஷ்பேக் : பப்பு,வர்ஷா ரெண்டு பேருக்கும் பிடிச்ச கதை அவங்க பிறந்த கதைதான். வயிற்றில் இருக்கும் போது என்ன நடந்தது, எப்படி பிறந்தார்கள்ன்னு கேள்வியில் துளைச்சுடுவாங்க, டைரி எழுதும் பழக்கம் இருந்தது , (இப்ப இல்லை) அதை கொடுத்து படிச்சுக்க சொல்லிடுவேன். அப்படி ஒரு சித்ரா பவுர்னமி விரதத்திற்கு பிறகு பிறந்தவள் பப்பு, இதை சொல்லியிருந்தேன்.

மறுபடியும் நேத்து நைட் ஸ்டோரி..

நான்: பப்பு சீகிரம் கிளம்பனும், பாட்டிகூடவே போயிட்டு வந்திடலாம்

பப்பு : நான் வரலம்மா

நான் : ஏண்டா

பப்பு: இந்த பூஜைக்கு போயித்தானே நான் பிறந்தேன் , நாளைக்கு போயிட்டு வந்தா இன்னொரு பாப்பா வரும், எனக்கு பிடிக்கலை, நான் வரலை, எப்பவும் நாந்தான் பாப்பா........(பாரேன் இந்த புள்ளக்குள்ள இம்புட்டு இருக்கு)

நான் ----- பல்ப்பா எறியுது என்னை சுத்தி :(((((((

#புள்ளயா பெத்து வெச்சிருக்கேன்

Wednesday, June 15, 2011

தேவதைகள் கலைத்த வீடு


கிட்டத்தட்ட 60 நாட்கள், காலைச்சுற்றும் பூனைக்குட்டி மாதிரி வீடு முழுதும் வியாபித்த என் தேவதைகள், படுக்கை அறைக்கதவு காலை 10 மணிக்கு மேல் தான் திறக்கும், அதற்குள் அதிலிருந்து வரும் சந்தோசக்குரலில் தெரியும் குறும்பு அந்த நாளைக்கான அலும்புக்கான அஸ்திவாரம்.

ராம நாமம் ஜெபித்தால் புண்ணியமாம்? அதைவிட அதிக முறை அதைவிட அதிக அன்புடன், காதலுடன், கோவத்துடன், பாசத்துடன் உங்களை கூப்பிட்டிருக்கிறேன், என்ன கத்தினாலும் ஒரு சின்ன எதிர்வினை கூட உங்ககிட்ட இருந்து வராது.

என்னைமட்டுமல்ல சுற்றி இருக்கும் நண்பர்களையும் சந்தோசமாகவும், உயிர்ப்போடும் வைத்திருக்கும் வித்தை எங்கிருந்து வந்தது? தினம் பப்புவை தேடி வரும் நண்பர்களுக்கு அவள் அளிக்கும் பதிலிருந்தே அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள்ன்னு தெரிந்துவிடும். 60 நாட்கள் கொண்டாட்டமுடன் கழிந்த இரவுகள், கடைசியாக நேற்று இரவு போட்ட ஆட்டமும், தினம் பாடிய பாடல்களும், உங்களிடம் வாங்கின எண்ணற்ற பல்புக்களும் தான் இனிவரும் நாளையும் நகர்த்த உதவும்.

எதற்கு இன்று விடியவேண்டும்? இதோ திரும்பி வந்து பார்க்கும் போது கலைந்து கிடக்கும் வீடு. காலையில் உங்களை ஆசிர்வதிப்பது போல் தூறிய மழை, அதோடு பப்புவின் பெரிய வகுப்பு போகும் (2 வகுப்பு) முன்னேற்பாடுகள், சொத்து பிரிப்பை விட ஜாக்ரதையாக பிரிக்கப்பட்ட பென்சில்கள், க்ரேயான்கள். ஒவ்வொன்றும் நீங்கள் இப்போது இங்கில்லை என்று குறைகூறுகிறது..

கண்ணுகளா, பள்ளி என்பது ஒவ்வொரு நிமிடமும் சந்தோசமுடன் நினைவு கொள்ள வேண்டியது. எப்போதும் போல் இனியும் படின்னு படுத்த மாட்டேன். முதல் மார்க் எடுத்து உங்க அறிவை நீங்க நிருபிக்க வேண்டியதில்லை, சந்தோசமா அனுபவியுங்கள், பள்ளிதரும் அனுபவம், நண்பர்கள், ஒரு நாள் நோட் கொண்டு போகாட்டி மிஸ் வந்து திட்டுவாங்களோ என்ற பய உணர்வு, பிடிச்ச லஞ்ச் கொண்டு போய் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ண, பிறந்தநாள் நண்பர்களின் தனித்தருணங்களில் உடனிருங்கள், இது கடந்து போனால் திரும்ப வராது. வீடு, வாழ்வியல் துன்பங்கள் எல்லாருக்கும் காத்திருக்கும், கடந்து செல்லவேண்டியும் இருக்கும், அதுவரை பள்ளியை அனுபவியுங்கள். அதோடு முடிஞ்சா கொஞ்சம் படிங்க, ஒரு போதும் ட்யுசன் போ என்றோ, ஏன் முதல் மதிப்பெண் வரலைன்னோ கண்டிப்பா நான் கேட்க மாட்டேன்.
என்ன பிடிக்குதோ அதை செய்யுங்கள், அதில் மேலும் சிறப்பாக வர பெற்றோரா என்ன கடமையோ அதை நாங்கள் செய்கிறோம். உங்கள் சந்தோசம் முக்கியம்.

அன்பான குழந்தைகளை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி.. சிலநேரம் அடுத்தடுத்த சென்ற வருடம் இறந்து போன என் பெற்றோரை நினைத்து மூட் அவுட் ஆகும் போது வர்ஷா வந்து மெதுவா அணைத்துக் கொள்ளுவாள், பப்புவோ இப்ப எதுக்கு சோக சீன்ன்னு கேட்பாள்,

இரண்டையும் அனுபவிக்கும் அம்மாவாக ஆனதற்கு நன்றி கடவுளே.என் அம்மாவாக, தோழிகளாக, செல்ல எதிரிகளாக, எப்போதும் கலாய்க்கும் என் இனிய ராட்சசிகளுக்கு இந்தப்பாட்டு.

உங்களுக்கு பிடிச்ச பாட்டு உங்களுக்காக மட்டும் செல்லங்களா..

Thursday, December 23, 2010

LOVE YOU பப்பு



காலையில சாப்பிட்டு ரெடியா இரு விஜி,ஸ்கேன் பண்ணி பார்த்துட்டு முடிவு பண்ணலாம்..சொல்லிட்டு டாக்டர் - ( எனக்கு சின்ன மாமியார்), கிளம்பிட்டாங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. மருத்துவமனையில் வந்து சேர்ந்து ஒரு வாரம் ஆகிடுச்சு, தினம் 4 யுனிட் சலைன், ரெண்டு முறை ஸ்ட்ராயிட் ஊசி, எல்லாம் முடிஞ்சுது. ஆனாலும் சரியாகவில்லை, வேறு வழியில்லை எதாவது ஒரு முடிவு நாளைக்கு எடுத்துத்தான் ஆகனும். ரெண்டாவது குழந்தை உறுதியான நாளிலிருந்து வாந்தியும் தலைசுத்தும் கடைசிநாள் வரை இருந்தது,, ஆறாம் மாத துவக்கத்தில் கர்ப்பகால சர்க்கரை நோய் வேறு, நல்லவேளை டயட்டிலேயே சரியாகும் என்று சொன்னது, இல்லைன்னா அதற்கு தினம் இன்சுலின் போடவேண்டி இருந்திருக்கும். 27வது வாரத்தில் கர்ப்பப்பை வாய் திறந்துவிட்டது என்று பாண்ட் போட்டிருந்தார்கள்,, 34 வாரம் தான் ஆகியிருந்தது, ஆனால் பனிக்குட நீர் ரொம்ப குறைவாக இருந்ததால் ஒரு வாரமாக மருத்துவமனை வாசம். 8 பாயிண்ட் இருக்க வேண்டிய பனிக்குட நீர் வந்து சேரும் போது 6 இருந்தது, ஒரு வாரத்தில் 4ஆக குறைந்து விட்டது. இனி அடுத்த நாள் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

ரெண்டு நாளில் சுனாமி வரப்போவதை அறியாமல் அந்த மருத்துவமனை மிக மெதுவாக விழித்துக்கொண்டது. வெள்ளிக்கிழமை- டிசம்பர் 24- 2004, காலையில் 10 மணிக்கு ஸ்கேன் பார்த்த போது குழந்தை 35 வாரம் ஆகியிருந்தது.. பொதுவாக 40 வாரம் இருக்க வேண்டும். ஆனால் வேற வழியில்லை. என்ன பண்ணலாம் விஜின்னு மறுபடியும் கேள்வி.. சிசேரியன் மட்டும் வேண்டாம் வேற என்ன வேண்டும் என்றாலும் ட்ரை பண்ணலாம். கடைசி நிமிடம் வரை நான் ஒத்துழைக்கிறேன்னு சொல்லிட்டேன். ஸ்கேன் பார்க்கும் போதே பிஞ்சு விரல்களில் அச்சு காட்டினார்கள். இன்னைக்கு வேண்டுமா இல்லனா நாளைக்கு ஒரு நாள் வரை தள்ளிப்போடலாம், கிருஸ்மஸ் பேபியா இருக்கும்னு சொன்னாங்க. நான் இல்ல வேண்டாம் இன்னைக்கே இருக்கட்டும், இன்னைக்கு பிறந்தா அது ராம்க்கு நான் தரும் ஸ்பெஷல் பர்த்டே கிஃப்ட்னு சொன்னேன். ஏனெனில் டிசம்பர் 24 ராம்க்கும் பிறந்தநாள்.


12 மணிவாக்கில் நார்மல் டெலிவர் நடக்க, வலி வருவதற்கு ஜெல் தரப்பட்டது. அரை மணி நேரத்தில் வலி ஆரம்பித்தது, நான் இந்த முறையும் டெலிவரியை பார்க்க விரும்பினேன். அதனால் எபிட்யுரல் அனஸ்தீஷியா போட சொன்னேன். அதற்குள் நல்லா வலி வந்ததால், மாமியார் கொஞ்ச நேரம் பொறுத்துக்க எதுக்கு அன்ஸ்தீஷியா வேண்டாம்னு சொன்னார், இல்ல நான் இந்த குழந்தையையும் முதல் நிமிடத்தில் இருந்து பார்க்கனும் என்று சொல்லி போட்டுக்கொண்டேன். மாலை 5.30 மணிவரை பார்க்கலாம் இல்லனா சிசேரியன் என்று சொல்லப்பட்டது.

நான் ரெண்டு குழந்தைகளூக்கும் வயிற்றில் உறுதி செய்யப்பட்ட நாள் முதல் அவர்களிடம் பேசுவேன். இப்பவும் சொன்னேன், குழந்தை வயிற்றில் இருக்கும் போதே அதற்கு பேரு வைத்திருந்தோம்.. பாப்ஸ் இதான் அந்த பேரு, பாப்ஸ் நீ இப்ப அம்மாவை கஷ்டப்படுத்தாம வந்திடு, உன்னை பார்த்துக்க அம்மாவை தவிர யாரும் இல்லை, அம்மாவையே இன்னொருத்தர் தயவில விட்டுடாதேடா செல்லம்னு கேட்டுக்கொண்டேன். ராம் கூடவே இருந்தார், 5 மணிக்கு டாக்டர் இன்னும் அரை மணி நேரத்தில் டெலிவரி ஆகிவிடும்னு சொன்னதும் ராமை வெளியில் போகச்சொல்லிவிட்டேன். வலியை உணராமல் குழந்தை வந்ததும் அதன் எடை ஒரு கிலோ 600 கிராம் மட்டுமே இருந்தது.. பெண் குழந்தை என்று தெரிந்ததும் ரொம்ப சந்தோசமாவும் அவளோட சுறுசுறுப்பான அழுகை சந்தோசமாகவும் இருந்தது...

எல்லா தாய்க்கும் அவர்கள் குழந்தை ரொம்ப ஸ்பெஷல் தான். அவர்களை பற்றி எவ்வளவு பேசினாலும் தீரவே தீராது. அதிலும் ரெண்டும் பெண் குழந்தைகளூம் என் வீட்டில் வளரும் தேவதை என்று கூட சொல்ல முடியாது, தெய்வங்கள் தான். எதாவது ஒரு முடிவெடுத்து அது தோல்வியில் முடிந்து மனசு கஷ்டப்படும் நேரங்களில் இவர்கள் பேசுவது தெய்வத்தின் குரலாகத்தான் தோனும்.

இன்னைக்கு என் குட்டி செல்லத்துக்கு 6 வயசு ஆகிறது. ஆனால் அவளோட நிதானம், கவனிக்கும் தன்மை, நகைச்சுவை உணர்வு எல்லாம் ஸ்பெஷல் தான்.. லவ் யூடா பப்பு :)) உன் சிரிப்பு, குறும்பு, டைமுக்கு அடிக்கும் டயலாக், ஒரு நாளைக்கு நீ கொடுக்கும் 100 முத்தம், எல்லாம் எப்பவும் இப்படியே இருக்கனும்டா... ஹேப்பி பர்த்டே செல்லம்


டிஸ்கி: இன்னைக்குத்தான் ராம்க்கும் பிறந்த நாள்... ஹேப்பி பர்த்டே ராம்.