Showing posts with label சொந்த கருத்து. Show all posts
Showing posts with label சொந்த கருத்து. Show all posts

Saturday, December 31, 2011

நேசம் - புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பு

வணக்கம் நண்பர்களே

பொன்வேண்டேன்,
பொருள் வேண்டேன்
மண் வேண்டேன்
மனை வேண்டேன்
நோயற்ற வாழ்வே நான் வாழ வேண்டும்
என்பதே அனைவரின் பிராத்தனையாக இருக்கும்



அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது, அதனிலும் கூன் குருடும் உடல் குறைபாடுகளும் இல்லாமல் பிறத்தல், அதையும் விட இன்று வாழ்நாள் முழுதும் எந்த வித உடல் பிணிகளும் இன்றி நல்நெடும்வாழ்வு வாழ்வதைவிட பெரிய செல்வம் ஏதும் இல்லை. எண்ணற்ற நோய்கள் வாழ்க்கை முறைகளினால் வந்தாலும் பெரும்பாலும் அவைகள் லைஃப்ஸ்டைல் எனப்படும் வாழ்வுமுறை நோய்களே.

இவ்வகை நோய்களின் ஏன் எதற்கு எப்படி என்றே அறியும் முன் உடலை அரித்து விடும் நோய்களில் ஒன்று கேன்சர் எனப்படும் புற்றுநோய். இன்று உலகம் எங்கும் இதனால் உயிர் விடுவோர் எண்ணிக்கை மற்ற அனைத்தையும் விட அதிகம். புற்றுநோய் வரக்காரணம் எவ்வளவோ இருக்கலாம், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், ஆனால் வந்த பின் அதனுடைய பாதிப்பின் அளவையும் நோயின் தீவிரத்தைப்பொறுத்தும் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளது.

எல்லா நோயைப்போலவும் இதனையும் நாம் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் நூறு சதவீத குணப்படுத்தலாம். எப்படி கண்டறிவது என்பதே விழிப்புணர்வு.

இந்த புது வருடத்தில் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு நேசம், முழுக்க முழுக்க புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் அதுகுறித்த நிகழ்வுகளுமாக இணையத்தில் உங்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கிறோம்.


நேசம் - அமைப்பில் இருந்து முதல் விழிப்புணர்வு அறிவிப்பு ஜனவரி முதல் அன்று வெளிவரும். புற்றுநோயை கண்டறிந்து களைவோம், போராடி வெல்வோம்

Friday, December 30, 2011

ஐ லவ் யு செல்லம்

வலைப்பதிவு என்பதே ஒரு கொசுவர்த்திதானே. இந்த வருச கொசுவர்த்தியை சுத்திப்பார்க்கிறேன். ஒவ்வொரு வருசமும் முடியும் போது ஏகப்பட்ட அனுபவங்களும் படிப்பினைகளும் வாழ்க்கையை செப்பனிடுகிறது.

இந்தவருடம் ஆரம்பமே அமர்க்களம். இடது கை உடைந்து 4 கிலோ அளவுக்கு பெரிய கட்டுடன் தான் வரவேற்றேன். ஊரே புத்தாண்டு கொண்டாடும் போதும் கங்கா மருத்துவமனையில் வலியில் புலம்பிட்டு இருந்தேன்.  போனவருடம் முழுதும் இழப்புகளின் வருடம், அப்பா இறந்தது, சில பல பர்சனல் இழப்புகள்னு ஒரே ஆர்ட் ப்லிம் ரேஞ்சுக்கு இருந்தது. இந்தவருடம் மட்டும் சளைச்சதா என்ன?

ஜனவரி கைகட்டுடன் வரவேற்று அனுப்பி பிப்ரவரி  வரும்போதே வாழ்வில் மறக்க முடியாத மாதமாக வந்தது. பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று என் அம்மாவின் மரணம், அதை அடுத்து 4 நாட்களில் மாமாவின் மரணம். மரண அடின்னு சொல்லுவாங்களே அதுதான் இது.


மார்ச் இத்தனை இழப்பிற்கு ஈடு செய்வது போல் எங்க வீட்டின் புது வரவு, என் தங்கை பையன் நந்தன். அவன் சிரிப்பு மட்டுமே எங்கள் இழப்பை கொஞ்சம் தள்ளி வைக்கிறது. ஏப்ரல் மாதம் கட்டு பிரித்து கை ஒரளவிற்கு வந்ததும் அப்பாடான்னு இருந்தது. இதற்கிடையில் இழந்த இன்னொரு பொருளும் மறுபடியும் கிடைத்தது. இனிமேல் பத்திரமா வைச்சுக்கனும்.

ஜூன் முதல் செப்டம்பர் வரையான மாதங்கள் மருத்துவமனையிலேயே பெரும்பாலான நாட்கள் கழிக்க வேண்டியிருந்தது. மாமியாரின் மரணம் வரை இந்த கதை தொடர்ந்தது. மரணங்களை மிக அருகில் பார்த்து பார்த்து மனது அடப்போ இவ்வளவு தானா என்று சலிக்கும் அளவுக்கு இந்த வருடம் எல்லாவிதத்திலும் பாடம் கற்றுக்கொடுத்தது.

போலியான மனிதர்களை வழக்கம் போல கடைசியில் கண்டு ஓடிப்போயிடுன்னு துரத்தி விட்டு, மறுபடியும் வண்டிசக்கரத்தில் எண்ணெய் விட்டு வாழ்க்கை சுற்ற ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு நாளும் கற்றுக்கொடுக்கும் வாழ்க்கையே ஐ லவ் யு. இப்பத்தான் தினம் தினம் வருவதை எதிர்கொண்டு வாழ பிடிக்கிறது. எவ்வளவு சுவாரஸியமா இருக்கிறது. மனிதர்கள் அதுவும் சாதாரணமான மனிதர்களா? எவ்வளவு வகை, ஒவ்வொரு மனிதனும் நிழலில் ஒன்று வெளிச்சத்தில் ஒன்று, இருட்டில் ஒன்றுன்னு ஏகப்பட்ட முகமூடிகளுடன், அவர்கள் நிகழ்த்தும் அல்லது அவர்களை சுற்றி நிகழும் நிகழ்வுகள், கவலைகள், காதல்கள், மரணங்கள், சிரிப்புகள், வேதனை, வலி, சந்தோசம், எல்லாம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.

இத்தனை விசயங்களுக்கு நடுவில் சில பல ஊர் சுற்றல்கள், சிங்கப்பூர், மலேசியான்னு பெரிய கும்பலை கூட்டிட்டு போயி கொண்டு வந்து பத்திரமா விட்டது பெரிய அனுபவம். வழக்கம் போல் என் நட்புகளும் உறவுகளும் சீண்டியும் சிரித்தும் தொடர்கிறது.

இணையத்தில் வந்த இந்த 5வதுவருட ஆரம்பம் மகிழ்ச்சியாகவே தொடங்குகிறது. கூகுள் பஸ் சோர்ந்து போன, தனிமையான  பல தருணங்களில் தோள் கொடுத்திருக்கிறது. அதன் மூலம் கிடைத்த நட்புகளுக்கு ஒரு தனி நன்றி. எதையும் உடனே பகிரவேண்டும் வாழ்த்தோ திட்டோ சிரிப்போ அவர்களுடன் சேர்ந்து இருக்கவேண்டும்னு தோனியது. தேங்க்ஸ் மக்கா :)

இந்த வருடம் புதுசா எதுவும் உறுதிமொழி இல்லை, பிடிக்காததை சட்டுன்னு தூக்கி எறியும் இந்த குணம் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா பண்ணனும். இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா மனிதர்களை படிக்கனும். அம்புட்டுதான். வழக்கம் போல கலாய்ச்சு, கலாய்க்கப்பட்டு, கவலைகளை பிரித்து தீர்வு கண்டு சந்தோசமா இருக்கனும். நீங்களும் உங்க எண்ணங்கள் எல்லாம் ஈடேறி சந்தோசமா இருங்க.

சில நண்பர்களுடன் சேர்ந்து உருப்படியா ஒரு வேலை செய்யலாம்னு இருக்கேன். உங்க ஆதரவு எப்பவும் அதற்கு தேவை. ஜனவரி ஒன்று அன்று அறிவிக்கலாம்னு இருக்கோம். அதற்கான உங்க ஆதரவுக்கு இப்பவே ஒரு பெரிய நன்றி சொல்லிக்கறேன்.



இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :)

Friday, December 16, 2011

பல்ப் ஃப்ரம் பப்பு

இது கூகுள் பஸ்ஸில் எழுதியது. ஒரு தொகுப்பா எடுத்து வைத்து பப்பு பெரியவளானதும் கொடுக்கனும்

========

பப்பு சீக்கிரம் சாப்பிடு கண்ணு

அரை மணி நேரம் கழிச்சு அதே பருப்பு சாதம் நோண்டிட்டு இருந்தா

ஏநான் :என்னடி பண்றே. சீக்கிரம் சாப்பிடுன்னு சொன்னனே, நீ சாப்பிடற 4 பருக்கை பருப்பு சாதத்துக்கு அரை மணி நேரமா?

பப்பு : நான் டயட்டும்மா...

நான் : ங்ஙே!!!! என்னது டயட்டா?

பப்பு: ஆமாம்மா டயட்டுன்னா உங்களை மாதிரி இல்ல, நிஜ டயட்டு.. மீதி ஆனதை சாப்பிட மாட்டேம்மா.

-------
1.பப்புவும் வர்ஷாவும் சாப்பிட்டு இருந்தாங்க, ஒரு மாசமா டிவிக்கு தடா, வாரம் 3 மணி நேரம் டிவியில் ப்ரோக்ராமும், ஒரு படம் டவுன்லோடியும் பார்க்கலாம், சாய்ஸ் இருக்கு டிவி வேண்டாதவங்க கம்ப்யுட்டர் கேம்ஸ் ஆடலாம், யாரு குறைவா டிவி, கம்புட்டர் முன்னாடி இருக்காங்களோ அவங்களுக்கு வாரம் 50 பாயிண்ட், 500 பாயிண்ட் யாரு முதலில் ரீச் பண்றாங்களோ அவங்க இஷ்டப்படி 150 ரூபாய்க்கு ட்ரீட், ஒன்லி சாப்பாடு, ட்ரீட் வேண்டாதவங்க அந்த காசை உண்டியில் சேர்த்துடலாம். வர்ஷா 800, பப்பு 600 ரூபாய் வச்சிருக்காங்க, அதுல நான் 300ரூபாய் கடன் வாங்கினேன், மேட்டர் அது இல்ல வர்ஷாக்கு மேத்ஸ்ல இண்ட்ரஸ்ட்னு ஒன்னு சொல்லிதந்திருக்காங்க, அவ அதை பப்பு கிட்ட சொல்ல, பப்பு 12% வட்டி கணக்கு போட்டு அதை அவங்க பாட்டிகிட்ட செக் பண்ணி வந்து என்கிட்ட கேக்குது...அந்த 300 ரூபாய்க்கு இது இண்ட்ரஸ்ட்ம்மா, அதையும் சேர்த்துடுன்னு :((

2. எதோ சினிமா பாட்டு பாடிட்டு இருந்தா நான் முறைச்சேன், அதுக்கு ரொம்ப கூலா சொல்லுது எதை கேக்கறதா இருந்தாலும் என்கிட்ட கேக்காதீங்க, என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேளுங்க, அவங்கதான் சொல்லித்தந்தாங்க, நான் சும்மா பாடிப்பார்த்தேன்னு.

--------
பப்பு :அம்மாஆஆ, நீங்க என்ன சொன்னாலும் கலைஞருக்கு ஓட்டு போட மாட்டேன்

நான் : சுட்டி டிவி அவங்களுதுதான், ஓட்டு போடலைன்னா எப்படி தெரியும்?

பப்பு : ஓ அப்படியா? சரி போடறேன் :))

வருங்கால அரசியல்வாதி ரெடி


------
நான் : பப்பு போயி குளிடி..

பப்பு : ஒரு லுக்கோடு - ம்ம் எனக்கு ஆர்டர் போட அந்த ஆண்டவனே யோசிப்பான்

நான் : என்னடி சொல்றே?

பப்பு : பஞ்ச் டயலாக்கும்மா :))))

------
ஒவ்வொரு வருசமும் சித்ராபவுர்னமி மிக சிறப்பா சத்யநாராயண பூஜை ராமின் சித்தி வீட்டில் செய்வது வழக்கம், நேத்து நைட் பப்புவிடமும் வர்ஷாவிடமும் நாளைக்கு சாயங்காலம் இந்த பூஜைக்கு போறோம்னு சொன்னேன்..

இதற்கு முன் ஒரு சின்ன ப்ளாஷ்பேக் : பப்பு,வர்ஷா ரெண்டு பேருக்கும் பிடிச்ச கதை அவங்க பிறந்த கதைதான். வயிற்றில் இருக்கும் போது என்ன நடந்தது, எப்படி பிறந்தார்கள்ன்னு கேள்வியில் துளைச்சுடுவாங்க, டைரி எழுதும் பழக்கம் இருந்தது , (இப்ப இல்லை) அதை கொடுத்து படிச்சுக்க சொல்லிடுவேன். அப்படி ஒரு சித்ரா பவுர்னமி விரதத்திற்கு பிறகு பிறந்தவள் பப்பு, இதை சொல்லியிருந்தேன்.

மறுபடியும் நேத்து நைட் ஸ்டோரி..

நான்: பப்பு சீகிரம் கிளம்பனும், பாட்டிகூடவே போயிட்டு வந்திடலாம்

பப்பு : நான் வரலம்மா

நான் : ஏண்டா

பப்பு: இந்த பூஜைக்கு போயித்தானே நான் பிறந்தேன் , நாளைக்கு போயிட்டு வந்தா இன்னொரு பாப்பா வரும், எனக்கு பிடிக்கலை, நான் வரலை, எப்பவும் நாந்தான் பாப்பா........(பாரேன் இந்த புள்ளக்குள்ள இம்புட்டு இருக்கு)

நான் ----- பல்ப்பா எறியுது என்னை சுத்தி :(((((((

#புள்ளயா பெத்து வெச்சிருக்கேன்

Monday, December 12, 2011

அக்கம் பக்கம்

பக்க்த்து மாநிலமான கேரளாக்கும் நமக்கும் பங்காளி தகராறு முட்டிகொண்டு நிற்கும் இந்த நேரத்தில் தண்ணி தராத கேரளாவை கடுமையா கண்டிச்சுட்டு, முடிஞ்சா ப்ரித்வியை நாடுகடத்தி கோவைக்கு அனுப்புமாறு பணிவுடன் உம்மன்சாண்டி அங்கிளை கேட்டுக்கிறேன். வாளையாறு டேம்க்கு யாராவது போயிருக்கீங்களா? அதுவும் இருப்பது தமிழ்நாட்டில் தான் ஆனால் பயன் கேரளாவிற்கு..இதுக்கு ஒரு நாளைக்கு தனியா பொங்கலாம். கோவையில் பாதிக்கும் மேல் கேரள மக்கள் தான் இருக்கிறார்கள், தனியே கோவில், க்ளப், சங்கம், பள்ளிக்கூடம் என்று மினி கேரளாவே இருக்கிறது. ம்ம்ம் பெருந்தன்மையின் பரிசுதான் இது.

-------
கிட்டத்தட்ட ஆண்டு முடிவை நெருங்கும் நேரம் இந்த வருடம் முழுதும் அசைபோட்டுப்பார்த்தால் கற்றதும் பெற்றதும் ரொம்ப அதிகம். தனி செண்டி பதிவா தேத்திடலாம் விஜி ..டோண்ட்வொர்ரி

------
தங்கம்னு பேப்பரில் எழுதி லாக்கரில் வைக்கும் நிலைமைக்கு வந்துடுவோம் போல. எங்களை மாதிரி குடும்ப இஸ்திரிகளுக்கு விலையை கேட்டாலே திக்குன்னு இருக்கு. சேமிப்பின் பழக்கத்தை வலியுறுத்தும் தங்க விலையேற்றத்திற்கு ஒரு ஜே !!

------
 எங்கள் தெருவில் ஒரு பெண், கார்ப்பரேசனில் பணி புரிகிறார். 42 வயதானவர். அசாதாரணமான உடல் பருமன். அதைக்குறைக்க அவர் விஎல்சிசி சென்று ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டாராம். அதில் அவரின் இரு தொடைகளும் உணர்ச்சி இழந்து போனது. உடல் முழுதும் கொழுப்பு கட்டிகளும் படர்ந்துவிட்டது. ஏஞ்ஜெல் என்று இன்னொரு உடல்பருமன் குறைக்கும் நிலையம் சென்று சிகிச்சை எடுத்ததில் அவருடைய தோல் தொடையிலிருந்து கால் பாதம் வரை கருகினது போல ஆனது.

யாருக்கு உடல் எடை குறைக்கனுமோ தயவுசெய்து சாதாரண உடற்பயிற்சி, சரியான உணவு முறைமூலம் மட்டுமே குறைக்க முயற்சி செய்யுங்கள்,. நான் அந்த பெண்னை பற்றி சொன்னது 10 சதவீதம் தான். உக்கார்ந்தால் எழ முடியவில்லை. திரும்பி படுக்க முடியவில்லை. :(


இந்த மாதிரி நிலையங்களை போகும் முன் தெரிந்தவர்களிடம் கேட்டு போங்கள், யாரோ ஒரு சிலருக்குதான் சரிப்படும். எனக்கு தெரிந்து இந்த சிகிச்சை முறை ஒத்துக்கொள்ளாதவர்கள் தான் அதிகம்
--------
நேத்து பாரதியார் பிறந்த நாள், இன்னைக்கு சூப்பர் ஸ்டார் பிறந்தநாள். சமூகவலைத்தளங்களில் திடீர் பாரதி பாசத்தை தாங்க முடியலை. பாவம் பாரதி. இருந்திருந்தா ரொம்ப ஃபீல் பண்ணிருப்பார்,. இம்புட்டு பாசக்காரங்களா இருக்காங்களேன்னு.. சூப்பர் ஸ்டார் வீட்டு சமையல் காரருக்கும் ஒரு வாழ்த்து சொல்லிடுங்க. வரலாறு முக்கியம்.-------
கூகுள் பஸ்ஸில் இருந்த வரைக்கும் பொழுது போனதே தெரியாது. ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் விருந்தினர் வீடு மாதிரி இருக்கு, போகலாம்னும் தோனுது போனதும் எப்ப கெளம்புவோம்னும் இருக்கு :)) செட் ஆக இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் போல.
---

தினம் பேப்பர் பார்க்கவே பயமா இருக்கு. இந்த வாரத்தில் 3 பெண் குழந்தைகளுடன் அம்மா தற்கொலை திருப்பூரில், கணவன் மனைவி குடும்பத்துடன் தற்கொலை, பெங்களூரில் 4 டாக்டர்கள் தற்கொலை.. என்ன நடக்குது.. சாவு அம்புட்டு ஈசியா போயிடுச்சா?

------

ஈரோடு பதிவர் சங்கமம் வரும் ஞாயிறு நடக்கிறது. மேலதிக தகவலுக்கு http://www.erodekathir.com/2011/12/2011.html. வாங்க அங்க மீட் பண்ணுவோம் :)

Wednesday, December 7, 2011

கானல் வாழ்க்கை


வீடு வரை உறவு 
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசிவரை யாரோ?
எவ்வளவு உண்மை...


நேற்றிருந்தவர் இன்றில்லை, இன்றிருப்பவர் நாளையில்லை. நிதர்சனம்தான். இன்று இறந்த பிணத்தைப்பார்த்து நாளை இறக்கப்போகும் பிணம் அழுகிறதுன்னு பட்டினத்தாரோ யாரோ சொல்லிருக்காங்க.. ஒரு இழப்பு வாழ்க்கையை அவர்களை சார்ந்தவர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிபோடும்  என்று இதுவரைக்கும் யோசிக்கலை.

சின்னவயதில் சாவு அறிமுகமானது பக்கத்து வீட்டு பாட்டியினால், திடீர்னு இறந்துட்டாங்கன்னுசொன்னாங்க. போயி பார்த்தேன், படுக்க வைத்திருந்தார்கள் அவ்ளோதான் சாவுக்கான அறிமுகம். 7வது படிக்கும் போது என் அப்பிச்சியின் அம்மா (அம்மத்தா) இறந்துவிட்டார்கள்னு பள்ளியில் இருந்து அழைத்து வந்து ஊருக்கு போனோம். அது இழப்பாக தெரிந்ததைவிட உறவு எல்லாம் கூடிய விழாவாகவே இருந்தது. இதற்குப்பிறகு வேறு ஏதும் பெரிதாக பாதிக்கவில்லை.

15வருடங்களுக்கு ஒரு நாள் அலுவலகத்திற்கு வந்த போன் சொல்லிய சேதி, எங்க பக்கத்துவீட்டில் இருந்த நகைக்கடை அதிபர் குடும்பத்துடன் தற்கொலை. திருப்பூரில் 13 பேர் இறந்தது மிகப்பெரிய அதிர்வு. அதும் பிறந்ததிலிருந்து பார்த்தவர்கள் இன்னைக்கு நாயைக்கூட விட்டுவைக்காமல் போய்விட்டார்கள் என்றதும் அதிர்ச்சிக்கு அளவில்லை.

பால்ய சிநேகிதம் என்பது மனதுக்கு மிக நெருக்கமானது, வலியோ சுகமோ பகிரும் உறவு அதுதான். சித்ரா. என் மிக நெருங்கிய தோழியாக இருந்தவள், கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள், படிப்பு சரியாக வராததால் திருமணத்திற்கு அவசரப்படுத்தப்பட்டவள், 13 வருடத்திற்கு முன் ஒரு ஜூலை 8-ல் தீக்குளித்தாள், உயிர் போகாமல் ஒரு நாள் முழுதும் இருந்தாள், என்னைப்பார்க்கனும்னு என் அப்பாவிடம் சொல்லி அனுப்பினார்கள் எனக்கு அவளைப்பார்க்கும் தைரியம் அப்போது இல்லை. இப்போதும் வரவில்லை.. மன்னிச்சுடு சித்ரா. பெரிய கண்களூடன் உன் சாயலில் பாதி கொண்டிருக்கும், நீ தற்கொலை செய்து கொள்ளும் போது 7 மாதக்குழந்தையாக இருந்த உன்  மகனை இப்போது பார்த்தாலும் மனசுக்குள் ஒரு கலவரம் வருகிறது.

ரொம்ப வருடம் கழித்து 4 வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பாவும் அவரைத்தொடர்ந்து 45 நாளில் என் அப்பாவின் அம்மாவும் (தாத்தா- பாட்டி) போய்ச்சேர்ந்தார்கள். இதைவிட என் அப்பா இறந்தது கூட ஒரு அதிர்ச்சிதான். ஆனால் என் கண் முன் நடந்த மரணம், இப்பவும் ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் நினைவில் வருவது. நாலே நாட்கள் கோமாவில் இருந்து வீட்டுக்கு போனதும் ஒரு வினாடி கண்ணைத்திறந்து பார்த்துவுடன் ஒரு சின்ன விக்கலில் உயிரை விட்ட அம்மா.

அம்மா இறந்துட்டாங்கன்னு சுதாரிக்கவே சில நிமிடம் ஆனது,. சரியாயிடுச்சு போலன்னு நினைச்சு அம்மா பாரும்மான்னு உலுக்கி எடுத்தேன். நானும் என் சித்தியும் மட்டுமே அருகில். ஆனால் திறந்து கண்கள் மூடவே இல்லை. முதலும் கடைசியுமாக நினைவு தெரிந்து அம்மாவை கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்தேன். கொடுத்துட்டே இருந்தேன். அழவே தோனலை. கூட இருந்தவர்களின் அழுகுரல் தான் மறுபடியும் இந்த உலகில் கொண்டுவந்தது. அவங்க கண்ணை தானம் தரும்போது என் மாமா உட்பட யாரும் ஒத்துக்கலை. டாக்டர் கடைசியாக மறுபடியும் அந்தக்கண்களை திறக்கும் போது எனக்கு பார்க்கும் அளவு தைரியம் வரவில்லை.

அம்மா இறந்ததுமே உண்மையிலேயே இவ்வளவு நாள் நினைத்தது வாழ்க்கை இல்லை. அர்த்தமில்லாத கோபம், வருத்தம், எல்லாம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. அடுத்த நான்கு நாட்களில் அப்பாவின் ஒரே தங்கையின் கணவர் - என் மாமா ஹார்ட் அட்டாக்கில் இறந்ததும் அடச்சேன்னு ஆயிடுச்சு.

அதெல்லாம் விட இன்னும் வாழ்க்கையின் மேல் பயமும், காதலும், விருப்பமும் வரக்காரணம், என் மாமியாரின் மரணம். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக புற்றுநோயில் போராடி, இவ்வளவுதான் என்று அளவிட முடியாத கஷ்டப்பட்டு, உடலின் ஒவ்வொரு பகுதியும் வலியில் துடித்து, தோல் கருகி, சுருங்கி, உடல் முழுதும் ரணமாகி, கடைசி இருபது நாட்கள் நரகத்தில் இருந்து ஒவ்வொரு அணுவும் வலியை அனுபவித்து ஒரு வழியாக மரணித்தார். அது என்னைப்பொறுத்தவரை அவருக்கு விடுதலைதான்.கடைசிநாட்களில் அவர் கண்ணாடியே பார்க்கவில்லை, ஒரு நாள் விளையாட்டாக போனில் போட்டா எடுத்த வர்ஷாவிடம் அவர் இன்னும் கொஞ்சம் சிரிக்கறேன் இப்ப எடுன்னு. அந்த சிரிப்பு என்பது உதடுகளின் விரிசல் தான்.

ஒரு மரணம் ஒரு தனிமனித மரணம் அல்ல, அது ஒரு தலைமுறையின் முடிவு. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே முடிந்துவிடுகிறது. அவருக்கு பிடித்தது, பிடிக்காததது, விருப்பு, வெறுப்பு, வலி,கோபதாபங்கள். மரணமில்லா பெருவாழ்வு சாத்தியமில்லாதது போல் மறதியும் உடனே வந்தால் பரவாயில்லை. எந்தப்பொருளை பார்த்தாலும் அதோடு சம்பந்தப்பட்ட அவர்களின் நினைவு வந்து இருக்கிறவர்களை கொல்கிறது. மனதை அதிலிருந்து வெளியெடுப்பது அவ்வளவு சிரமம்.

ம்ம் போகிறவர்கள் போகட்டும் மிச்சமிருப்பவர்களுடன் தொடரும் பயணம்..



Wednesday, November 30, 2011

காந்தலும் ருசி

காந்தல் ஒரு ருசி, காந்தல்ன்னா சமைக்கும்போது அதிக வெப்பத்தினால் தீய்ந்து போகும் பகுதி. அதற்கென ஒரு ருசியும் வாசனையும் உண்டு. காந்தலே ஒரு ருசின்னு ஒத்துக்கொள்ளூம் போது ஏன் இன்னும் சில மனிதர்கள் கருப்பை ஒரு கலராக ஒத்துக்கொள்ள தயங்குகிறார்கள்?

ஷாப்பிங் போன ஒரு சின்ன குழந்தை 5 வயதிருக்கும் கொஞ்சம் ஒல்லியா கருப்பா லட்சணமா விளையாடிட்டு இருந்தது. அதோட கண்கள் அவ்வளவு அழகு, எனக்கு பக்கத்தில் அந்த குழந்தையின் அம்மாவும் பாட்டியும் அவளுக்கு பிறந்த நாள் துணி எடுக்கிறார்கள் போல், எந்த உடை எடுத்தாலும் கருப்பா இருக்கிறா அவளுக்கு செட் ஆகாதுன்னு சொல்லி ஒதுக்கி முடிவில் ஒரு மஞ்சள் கலர் துணி எடுத்து போனார்கள்..




வர்ஷா படிக்கும் நடனப்பள்ளியில் கிட்டத்தட்ட 15 வயதில் ஒரு பெண் இருக்கிறாள், அத்தனை நளினமாக அழகா அபிநயம் பிடித்து ஆடுவாள், ஆனால் அவள் கருப்பாக இருக்கும் ஒரே காரணத்தினால் எப்போதும் பின்வரிசை தோழியாக..

இது சும்மா உதாரணம் தான், ஆனால் இந்த ஒரு வாரத்தில் கருப்பாக இருக்கிறாய் என்று யாரையாவது யாராவது குறை கூறிக்கொண்டே இருப்பதை கேட்டுக்கொண்டே இருக்கிறேன். எதேச்சையாக பார்த்த விளம்பரத்திலும் கருப்பான பெண் அவமானமாக உணர்கிறாளாம்....என்ன நினைப்பு இது?கருப்பு என்பது உடலின் மெலனின் மட்டுமே அதுவா ஒரு மனித உயிர்? அதுவா உணர்வு? அதுவா அளவுகோல்?

கருப்பு என்பது மிக கவர்ந்திருக்கும் நிறம். எப்போதாவது நீங்கள் கருப்பு உடை அணிந்து பாருங்கள் உங்களுக்கே உங்களை பிடிக்கும். சின்னக்குழந்தைகளை கருப்புன்னு சொல்லுவது எவ்வளவு அவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை தரும் என்பதை ஏன் பெற்றோர் உணருவது இல்லை?
அவர்களை நான்கு பேர் முன்னிலையில் சொல்வதை எப்போது நிறுத்துவார்கள்? அப்படி சொல்லும் போது அந்த குழந்தையின் முகம் போகும் போக்கை பாருங்கள். கோவில் சிலையில் கூட கருப்புதான் அழகான சிலையாக இருக்கிறது.

நான் சின்னப்புள்ளையா இருக்கும் போது இப்படி தினம் தினம் கேட்டிருக்கேன். அப்பல்லாம் எல்லாரும் ஒரே கலரில் இருப்போம் வெள்ளையானவர்கள் ரொம்ப குறைவு.. நானும் கல்லூரி காலங்களில் நினைத்தது உண்டு..ச்சே இன்னும் ஒரு ஷேடு டல்லாயிருக்கலாம்னு ( தொழில் புத்தி) ஆனால் கலரில் ஒரு மண்ணும் இல்லைன்னு புரிய ரொம்ப நாள் ஆயிடுச்சு.  

சோப்பு, க்ரீம் போட்டு கலர் வருதோ இல்லையோ சில பாட்டி வைத்தியங்கள் மூலம் நம் தோலை மிருதுவாக வாசனையாக சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்.

அதில் ஒன்று இது

பாசிப்பயிறு - 1கிலோ
கடலைப்பருப்பு -அரைக்கிலோ
கஸ்தூரி மஞ்சள் - 150 கிராம்
பூலாங்கிழங்கு - 150 கிராம்
கோரைக்கிழங்கு - 150 கிராம்
வெட்டிவேர் - 150 கிராம்
ஆவாரம்பூ - 150 கிராம்
இதை மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். சோப்பு தேய்த்த பிறகு இதை தினம் தேய்த்து குளித்தால் உடம்பில் இருக்கும் சொறசொறப்பு, வறட்டுத்தன்மை நீங்கும். வெட்டிவேர் நல்ல வாசனையை தரும். முக்கியமா வேர்வை வாசனையை போக்கும். இதை ஆண்களும் உபயோகிக்கலாம். கஸ்தூரி மஞ்சள் தவிர்த்து மற்றவைகளை பொடிசெய்து கொள்ளலாம். இது அனைத்துமே நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். இதோடு குப்பைமேனி தழை ரோஜா இதழ்களும் சேர்த்து அரைத்தால் பெண் குழந்தைகளின் உடம்பில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்கும்.

(ரொம்ப நாளா பதிவு எழுதாமல் டச் விட்டு போயிடுச்சு. இனி எழுத ட்ரை பண்ணுவோம்..#தப்பிக்க முடியாதுல்ல)


Wednesday, June 1, 2011

நாலுகட்டு - எம்.டி.வாசுதேவன் நாயர் - தமிழில் சி.ஏ.பாலன்

பல்வேறு சமுதாயத்தின் வாழ்க்கை முறைகள், அந்தந்த கால கட்டத்தின் சமூக கட்டமைப்புகள், அந்த காலகட்டத்தின் மனித மனங்களின் போக்கும் அங்கீகாரங்களும் ஒரு நல்ல எழுத்தாளரின் பார்வையில் சுவாரஸ்யமாக இருக்கும். அந்த வரிசையில் பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயரின் “நாலுகட்டு”. 1958-59 வருட கேரள சாகித்ய அகாடமி விருது வாங்கிய இந்த நாவலை தமிழில் சி.ஏ .பாலன் மொழிபெயர்த்துள்ளார்.

சில இடங்களில் மூலக்கதையை அப்படியே தரவேண்டிய நிர்பந்தம். கேரள வாழ்க்கை முறை ஓரளவிற்கு தெரிந்தவர்களுக்கு சுலபத்தில் புரியும். இல்லாவிட்டால் சில பகுதிகளை மீண்டும் வாசிக்க நேரிடும். சில புழக்கத்தில் உள்ள சொற்களும் தமிழ் படுத்தும் போது அதன் உச்சரிப்பை சரியாக தரமுடியாததும் ஒரு சிறு இடறல். உ.தா. முத்தஷி - முத்தாட்சி, இடஞ்ஞாழி ( உழக்கு) - இடங்கழி போன்றவைகள்.

நாவல் ஒரு சிறுவனின் வாழ்க்கையும் அவமானமும் அதிலிருந்து அவன் எடுக்கும் தீர்மானமும் பற்றியது. எந்த சமுதாயம் அல்லது மக்கள் என்றாலும் அவர்களின் பாரம்பரியம் என்பது மிக மதிக்கப்படவேண்டிய ஒன்று. இதில் கேரள நாயர் குடும்பமும் அவர்களின் பாரம்பரிய வீடும் கதைக்களன்.

கேரள குடும்பங்கள் அவர்களின் வீட்டைக்கொண்டே விளிப்பது வழக்கம். அதை சுருங்க தரவாடு என்பர். வீடு என்பது பல ஆத்மாக்களின் சங்கமம், பெரிய வீடுகள் நாலு கட்டு கொண்டிருக்கும், வீட்டிலேயே குலதெய்வமோ, பகவதியோ, நாகமோ, குட்டிச்சாத்தானோ வைத்திருப்பார்கள்.

இதில் வடக்கே வீடு   என்னும் பெரிய நாலு கட்டு வீட்டில் வசிக்கும் பெரிய மாமா என்னும் குடும்பத்தலைவனும் அவரின் பெரிய குடும்பத்தையும் குறித்த கதை. நாயர் குடும்பங்களில் மணமகன் திருமணம் முடித்து மணமகள் வீட்டிற்கு சென்று வாழ்வதே அன்றைய வழக்கம். சொத்துக்களில் முன்னுரிமை பெண்களூக்கே. அப்படி ஒரு குடும்பத்தில் பிறக்கும் ஒரு பெண் தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவரை மணந்து வீட்டை விட்டு சென்று விடுகிறாள். அவர்களுக்கு பிறக்கும் மகனை பற்றியும் அந்த குறிப்பிட்ட வீட்டையும் பற்றியது நாலுகட்டு நாவல்.


பாருகுட்டி வடக்கே நாலுகட்டு வீட்டில் பிறந்த பெண், கோந்துண்ணி என்னும் சூதாட்ட வீரனை (சூதாட்டம் கௌரவமாக கருதப்பட்ட காலகட்டம்) மணந்து வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசிக்கிறார்கள். அவர்களூக்கு ஒரு மகன் பிறக்கிறான். அப்புண்ணி என்னும் அந்த சிறுவன் 3 வயது இருக்கும் போது செய்தாலி குட்டி என்னும் நண்பன் வைக்கும் விருந்தில் மாமிசம் அருந்தி இறந்து போகிறார் கோந்துண்ணி, செய்தாலி அதில் விசம் வைத்திருந்தார் என்று பேச்சு.

அப்புண்ணி அவன் தாயுடன் வசித்து வருகிறான், பாருக்குட்டி ஒரு நம்பூதிரி வீட்டில் வேலை செய்து அவனை காப்பாற்றுகிறாள். அவர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு முத்தஷி ( பாட்டி) அப்புண்ணியிடம் அவன் தாயின் பிறந்த வீட்டு பெருமைகளையும் அங்கு நடக்கும் விசேசங்களையும் கூறி கொண்டே இருந்ததால் அவனுக்கு அங்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. முத்தாட்சியுடன் அங்கு நடக்கும் ஒரு சர்ப்பவிழாவுக்கு செல்கிறான், அவன் சொந்த பாட்டி அவனை ஆதரிக்கிறாள் ஆனால் குடும்பத்தலைவனான பெரியமாமா அவனை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளுகிறார், சிறுவனின் மனதில் இது ஆறாத ரணமாகிறது.

இதற்கிடையில் அப்புண்ணி 8 வகுப்பு செல்கிறான். சங்கரன் நாயர் என்பவர் அப்புண்ணிக்கும் அவன் அம்மாவிற்கும் உதவி செய்கிறார். ஊரார் தவறாக பேசுகின்றனர். அப்புண்ணி அதை உண்மை என்று நினைத்து வீட்டை விட்டு வெளியேறி தனக்கும் வடக்கே வீட்டில் உரிமை உண்டு என்று கூறி நாலுகட்டு வீட்டுக்கு செல்கிறான். பல்வேறு தடைகளுக்கு இடையில் நன்கு படித்து ஆசிரியரின் உதவியுடன் வேலைக்கும் செல்கிறான்.

இப்போது அப்புண்ணி இளைஞன், வேலையில் இருந்து வெகு நாட்களூக்கு பின் அவன் சொந்த ஊருக்கு வருகிறான், பெரிய மாமாவின் குடும்பமும் சொத்தும் பிரிக்கப்பட்டு சிதறிக்கிடக்கின்றது. பெரிய மாமா அவனிடம் நாலுகட்டு வீட்டை அடகில் இருந்து மீட்க பணம் கேட்கிறார், தனக்கே விற்க சொல்லி அதை பட்டா பண்ணிக்கொல்கிறான் அப்புண்ணி. இறுதியில் பிரிந்து போன தாயையும் சங்கரன் நாயரையும் அந்த வீட்டுக்கு அழைத்து வருகிறான், வீட்டில் புழுக்கம் தாங்காமல் திணறும் தாயிடம் இடித்து கட்டுவதாக சொல்லுவதை வீட்டை மட்டும் அல்ல அவன் தாயும் சங்கரன் நாயருக்குமான உறவையும் அவன் ஏற்றுகொள்கிறான் என்பதாக முடிகிறது.

அப்புண்ணி சிறுவனாக அறிமுகம் ஆகும் போது ஆரம்பிக்கும் கதை அவனில் ஒரு நாளில் பெரும் பகுதியை நாமும் கழிக்கிறோம். பயந்த சிறுவன், சொந்தங்களை விரும்பும் சிறுவன், தாயின் புது மனித அறிமுகத்தை எதிர்க்கும் சிறுவன், படித்து பெரியவனாகி மனதில் சினத்தோடு இருக்கும் அப்புண்ணி, அவன் விரும்பிய அம்மினியின் மரணம் அவனை மாற்றும் சிந்தனை வரை நல்ல பாத்திரப்படைப்பு. அவன் தந்தையை கொன்றாதாக கூறும் செய்தாலிக்குட்டி சில இடங்களிலும் இறுதியில் பெரியவனான அப்புண்ணிக்கு வேலை வாங்கித்தந்து உதவுவதும், சங்கரன் நாயர் அப்புண்ணியின் குடும்பத்திற்கு உதவுவதை வெறுப்பதும், பெரிய வீட்டின் குடும்ப உறுப்பினரான பெரியமாமா, கிருஷ்னண் குட்டி, பாஸ்கரன், அப்பத்தா, குட்டன், மாளு, அம்மினி, மீனாஷி, போன்ற எல்லா கதை மாந்தர்களூம மறக்கமுடியாத நபர்கள்.

மொழிபெயர்ப்பு நூல்களில் என்னை கவர்வது அவர்களின் வாழ்க்கை முறை, இதில் அதற்கு குறையேதும் இல்லை, ஒரு பெரிய தரவாட்டு வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் விரிவாக இருப்பது அந்த நிகழ்வுகளில் படங்களாக விரிகிறது. படிக்க (பொறுமையுடன்) நல்ல நாவல்.

டிஸ்கி : வேறு ஏதேனும் நல்ல நாவல்கள் இருந்தால் சொல்லுங்க

Tuesday, May 31, 2011

நளபாகம் - தி.ஜா

நூல் விமர்சனம் எழுதும் அளவிற்கு படிப்பாளி இல்லை, இருந்தாலும் படிப்பதில் பிடிச்சதை பகிர்ந்து கொள்ளத்தான். நம்ம ரேஞ்ச் ஏனோ தி.ஜா, கி.ரா, சு.ரா, ஆதவன, ஜெயகாந்தன்,பாலகுமாரன், சுஜாதாவோட தேங்கிடறேன். என்னை பொறுத்தவரை எழுத்தாளர்கள் அவர்களை சுற்றி நிகழும் சம்பவங்களுடன், பலதரப்பட்ட மனித வாழ்வியல் முறைகளுடன் அவங்களையும் இணைத்து வெளிகொண்டுவரவேண்டும். அவர்களை மட்டுமே முதன்மை படுத்தி படிப்பவர்களை படுத்துவதை தவிர்க்கலாம்.

ஒரு வர்ணனை என்பது அதனுள் இழுத்து அதன் போக்கில் நாமும் பயணப்பட வைக்கவேண்டும், தாகூரின் கோராவில் வரும் மழைக்காட்சிகளில் கல்கத்தாவிலும், சு.ராவின் பெண்கள் குழந்தைகளில் கேரளாவிலும் நாமும் நனைவோம். கி.ராவின் கதை மாந்தர் பேசும் பேச்சுகளின் ஊமைபார்வையாளராக இருப்போம். பெண் எழுத்தாளர்களில் லஷ்மியின் வருணனைகள் என்னை கவர்ந்தவை. ஒவ்வொரு எழுத்தாளரும் அவர் நடையில் ஒரு வாசகனை கவரும் போதும் மீண்டும் படிக்க தூண்டுகையிலும் ஆதர்ச எழுத்தர் ஆகிறார். எனக்கு குறிப்பிட்ட யாரும் இல்லை எனினும் தி.ஜாவின் சில நூல்கள் மறுபடி படிக்க வைக்கும், அந்த வரிசையில் நளபாகம்.

நர்மதை ஆற்றின் மேல் ரயில்யாத்திரையில் ஆரம்பமாகும் கதை. கதைன்னு எடுத்துக்கிட்டால் ரொம்ப எளியது, ஆனால் அதில் வரும் மனிதர்களும் அவர்களின் ஆசாபாசங்களும் ஒரு தேர்ந்த சமையலின் எல்லா மண குணங்களையும் கொண்டது. ரங்கமணி என்னும் நடுத்தரவயது மாது, ஜோதிடர் முத்துசாமி, அவர் மனைவி இன்னும் பலருடன் ரயில் யாத்திரையில் வட இந்தியா பயணமாகிறார், கணவனும் குழதைகளும் அற்ற அவருக்கு ஒரு சுவீகார புத்திரனும் மருமகளும் இருக்கிறார்கள். ரயிலுல் தலைமை சமையல்காரனாக அறிமுகமாகும் காமேஸ்வரந்தான் இந்த நளபாகன். காமேச்வரனிடம் மகனை போல் பாசம் கொள்ளும் ரங்கமணி தன்னுடன் வந்து தங்குமாறு அழைக்கிறார். அதே நேரத்தில் அவரின் தத்துபிள்ளை, மருமகளின் ஜாதகத்தை பார்க்கும் முத்துசாமி ஜோதிடர், அவர் மகனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை, ஆனால் மருமகளுக்கு உண்டு என்றும் உறுதியாக கூறுகிறார்.

யாத்திரை முடிந்து ஊர் திரும்பியதும் காமேச்வரன் ரங்கமணி வீட்டிற்கு சென்று சமையல்காரனாக சேர்கிறார், அப்போது தான் ரங்கமணி காமேச்வரன் மூலம் தன் குடும்பத்துக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று விரும்பியது புரிகிறது. ரங்கமணி நினைத்தது நடந்ததா, காமேச்வரனின் வாழ்க்கையின் அடுத்து என்ன என்பது தான் கதை.

காமேச்வரின் பாத்திரம் ஒரு அம்பாள் உபாசகனாக, ஒரு தேர்ந்த சமையல்காரனாக அறிமுகப்படுத்தப்படுகிறது. முத்துசாமி ஜோதிடர் எல்லா ஜோதிடர்களின் நிழல் உருவமாகவும், ரங்கமணியின் குணாதிசியம் ஊரைப்பற்றி நினைக்காமல் தன் வம்ச விருத்தியை மட்டும் குறிக்கோளாக்கும் பெண்ணாகவும், பங்கஜத்தையும் துரையையும் நெடுநாள் பழகிய தம்பதியினரைப்போன்றும், காமேச்வரனின் குருவான வத்ஸனை இறந்தகால பாத்திரமாக்கி எப்பேர்பட்ட சன்யாசிக்கும் ஒரு இரவு உண்டு என்றும், வீட்டுக்கார பாட்டி, ஜகது, தேவாரம் ஐய்யங்கார் எல்லாருமே ஒரு கதாருசிதான்.