Showing posts with label பால்யம். Show all posts
Showing posts with label பால்யம். Show all posts

Thursday, September 15, 2011

பால்யம் - எருக்கம்பூ

எங்க ஸ்கூலுக்கும் வீட்டுக்கும் ஒரு கிலோ மீட்டருக்கு அதிக தூரமிருக்கும். நேர்வழியில் போனால் லேட்டாகும். அதனால் குறுக்குவழி.(என்னைக்கு நேர்வழியில் போயிருக்கேன்னு சொல்லுவது கேட்கிறது) போகும் வழியில் நிறைய அரளிப்பூ, வெள்ளெருக்கு, ஊமந்தம்பூ, இன்ன பிற பேர் தெரியா பூக்கள் இருக்கும். அதைவிட அதிகமாக முள்ளு மரம். சின்னசின்ன சந்துகளின் முடிவில் ஒரு பெரிய வீடு இருக்கும். ரொம்ப அதிசயமாக தினம் பார்த்து செல்வோம். அங்க தான் இருக்கு பெரிய எருக்கம்பூ தோட்டம். பின்ன ஒரே இடத்தில் 20 செடி இருந்தா அது தோட்டம் தானே?  முதலில் அது பக்கம் போகவே மாட்டேன். ரெண்டு  மூணு நாய் அங்கயே படுத்திருக்கும்.  எந்த மனுசபயலுகளை கண்டும் பயப்படாத இந்த சிங்கம் அந்த தம்மாத்துண்டு நாய்க்கு பயப்படும். இப்பவும் தான்.

கொழுக்கட்டைக்காக விநாயகரை தீவிரமா கும்பிடும் சதுர்த்தி காலத்தில் ஈஸ்வரன் கோவிலில் ஒரு இன்ப அதிர்ச்சி. விநாயகர் கழுத்தில் நம்ம எருக்கம்பூ மாலை. அப்பத்தான் தெரிஞ்சுது விநாயகர் எம்புட்டு எளிமையானவர்னு. சரி நாமும் ஒரு மாலை கட்டுவோம்னு நான், சித்ரா, வனிதா, செல்வி எல்லாரும் எருக்கம்பூ வேட்டைக்கு போனோம். எருக்கம்பூல இருந்து பால் வருமாம் அதை கையில் தொட்டா கையில புண்ணு வரும், ஆறவே ஆறாது, மேல பட்டா சொறியும் போன்ற தடாபுடா முஸ்தீபுகளுடன் பூ பறிக்கும் படலம் ஆரம்பமானது. ஒரு கொத்தா பூ, லேசா மொட்டோடு ஒரு மாதிரி வெண்மை கலந்த சாம்பல் ஊதாவில் அவ்வளவு அழகான பூ. லேசா குமிழ் மாதிரி அமைப்பில், கொத்து கொத்தாக இருந்தது. லேசா அழுத்தி பார்த்தேன். பட்... அட பூ விரிஞ்சுடுச்சே...கண்டுபிடிச்சமில்ல. எல்லா பூவையும் அழுத்தி அழுத்தி பட் பட்ன்னு விரிய வச்சோம்....விரிஞ்ச பிறகு அழகு கொஞ்சம் குறைச்சலா போனது போல பட்டது.

அதற்குபிறகு எப்ப எங்க எருக்கம்பூ பார்த்தாலும் ஒரு பட் கண்டிப்பா உண்டு. இப்ப வரைக்கும். இது நான் எடுத்த எருக்கம்பூ படம். என் பால்யத்தை நினைவுபடுத்தும் பூ...

இன்னும் வரும்
டிஸ்கி..இது சின்ன பதிவுதான். பஸ்ல போடலாம்னு எழுதினது.இருந்தாலும் ஒரு கல்வெட்டா கிடக்கட்டும்னு :))))