Monday, November 1, 2010

முஸ்கின், ரித்திக் என்ன பாவம் செய்தார்கள்?

முஸ்கின் ஜெயின், அவள் தம்பி ரித்திக் ஜெயின்  11 மற்றும் 8 வயது சின்ன குழந்தைகள், அவர்களின்  ஒரு நாள் எப்படியெல்லாம் போயிருக்கும், பள்ளி தோழர்கள், அம்மா அப்பா என்று வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்த அந்த அழகான மலர்களை ஒவ்வொரு இதழையும் பிய்த்துப்போட்ட கொடூர மனம் படைத்த மிருகங்கள்.
கோவையில் இரண்டு நாளுக்கு முன் கடத்தி சென்று கொலை செய்யப்பட்ட சின்னக்குழந்தைகளை கடத்திட்டு போனது அவர்களின் பள்ளிக்கு செல்லும் வேன் ட்ரைவர், கோவையில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் குழந்தைகள் கடத்துவது அதிகமாக நடக்க ஆரம்பித்த இந்த வேலையில் பெற்றோருக்கான கடமைகளை நாம் இன்னும் இறுக்கவேண்டியது அவசியம்.



குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் பற்றி அவசியம் சொல்லித்தரவும், அது யாரா இருந்தாலும் வேண்டாம், குடும்பத்தில் ஒருவராக நெருங்கிப் பழகியவர்களே நம்மைப்பற்றி மொட்டை கடுதாசி போடும் காலம் இது, (சொந்த அனுபவம்). என்னதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் சில நேரங்களில் இப்படி மக்களை கணிக்க தவறுவதும் நடக்கத்தானே செய்கிறது.
பொதுவாகவே குழந்தைகளோடு தொடர்புடைய மனிதர்களை நாமும் நல்லா அறிமுகம் செய்து கொள்வது அவசியம், முக்கியமா, வேன் டிரைவர், பள்ளி வாட்ச்மேன், செக்யுரிட்டி, கேம்ஸ் மாஸ்டர், வகுப்பு ஆசிரியர், எதேனும் வகுப்புகளுக்கு அனுப்புகிறோம் என்றால் அங்கு இருப்பவர்கள் எல்லாரின் முகவரியும் போன் நம்பரும் கண்டிப்பாக வைத்திருங்கள், வழக்கமாக வரும் நேரத்தை விட 5 நிமிடம் அதிகம் ஆனாலும் அவர்களை அழையுங்கள், ஒரு வேளை நீங்கள் சென்று அழைத்துவருவதாக இருந்தால் எதாவது காரணமாக தாமதமானால் அதையும் பள்ளிக்கோ அந்த வகுப்புக்கோ உடனே தெரிவியுங்கள்.

குடும்ப விசயம் வெளியில் பேசக்கூடாது என்று குழந்தைகளுக்கு பழக்குங்கள், வெளியூர் போவது வீட்டில் யார் இருக்கிறார்கள் போன்றவைகளை வேனிலோ ஆட்டோவிலோ பொது இடத்திலோ பேசவேண்டாம். நம் தொலைபேசி, மற்றும் சில எமர்ஜென்சி நம்பர் சொல்லிக்கொடுங்கள், குறைந்த பட்சம் 5 ரூபாயாவது எப்போதும் குழந்தைகளீடம் கொடுத்து எமர்ஜென்சி பணம் என்று சொல்லிவைக்கவும்.

நான் என் குழந்தைகளை மாலை 6 மணிக்கு தான் பள்ளியிலிருந்து அழைத்து வரப்போவேன், அப்போது வாரத்தில் 3 நாட்களாவது சில குழந்தைகள் ஒன் ருப்பி தாங்க ஆண்ட்டி இன்னும் அப்பா வரலை, ஆட்டோ மேன் வரலை என்று கேட்பார்கள், பெற்றோர் ஆசிரியர் கமிட்டி உறுப்பினராக இருப்பதால் பள்ளியில் இதை பற்றி கூறி ஒரு பொதுதொலைபேசி வைக்கும் படி கூறினேன், ஆயிரக்கணக்கில் கட்டணம் கட்டும் பள்ளியில் இது போன்ற ஒரு ரூபாய் செலவு பெரிதா குழந்தைகள் பாதுகாப்பு முக்கியமா என்று நீண்ட விவாதத்திற்குப்பின் இப்போது வைத்திருக்கிறார்கள். நான் தினம் போவதால் கிட்டத்தட்ட எல்லா குறைகளையும் பள்ளியின் கவனித்திற்கு கொண்டு போய்விடுவேன். இது எல்லாருக்கும் முடியாது, ஆனாலும் குறைந்த பட்சம் அம்மாவோ அப்பாவோ ஒரு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது போங்கள்.
வீட்டிலேயே கூட தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் யாரையும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அனுமதிக்க வேண்டாம், பக்கத்து வீட்டில் போய் படிப்பது, விளையாடுவது எதும் வேண்டாம், எதுவானாலும் நம் கண் முன் நடக்கட்டும்.

வெளியிடங்களூக்கு குழந்தைகளை கூட்டிக்கொண்டு போகும் போதும் விலையுயர்ந்த ஆடைகள் ஆபரண்ங்கள் வேண்டாம், பெண்குழந்தைகள் மட்டும் அல்ல ஆண் குழந்தைகளுக்கும் இந்த பிரச்சனை உண்டு. நூறு மடங்கு கவனம் நாம் வைக்காவிட்டால் இழப்பு நமக்குதான்

11 வயது குழந்தையிடம் பாலியல் கொடுமை பண்ணினவனை இனி விசாரித்து என்ன ஆகும்? விசாரனையே இல்லாமல் கொடுமையாக மிகக்கொடுமையா தண்டிக்கனும். இனிமேல் எவனும் இது மாதிரி ஒரு நினைப்பே வராதபடி தண்டிக்கனும், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு மிகக்கடுமையான கண்டனங்களை போலிசுக்கும் அரசுக்கும் தெரிவிப்பது நம்கடமை.

 

நம் எதிர்காலமே இன்னொருவரால் சிதைக்கப்படுவதை அனுமதிக்க முடியுமா?முடிந்தால் உங்கள் கண்டனங்களை உங்கள் பதிவுகளில் பதிவுசெய்யுங்கள்.

12 comments:

Anonymous said...

என்னை விட்டால் அவனை கொன்றுவிட்டு வாழ்க்கையை தொலைக்க தயார்.வார்த்தைக்காக கோவத்திலோ இல்லை தாயின் வலி பெண்ணின் வேதனை இது

தாரணி பிரியா said...

ரெண்டு குழந்தைங்களை போட்டாவை பாக்க பாக்க பேப்பர்ல படிக்க படிக்க கண்ணுல தண்ணி வருது. அந்த நாய்களை அடிச்சே சாகடிக்கணும் அப்படின்னு தோணுது. இதுக்கு மேல நம்மளால எதுவுமே செய்ய முடியாதா. 10 வயசு குழந்தையை தப்பா பார்க்கிறவன் எல்லாம் மனுச ஜென்மமா :(. மனித உரிமை வெங்காயம் அப்படின்னு சொல்லிட்டு யாராவது வந்தா அவங்களையும் சேர்த்து போட்டு உதைக்கணும்.

கோபிநாத் said...

;(

Thamiz Priyan said...

இந்த கொலைகாரனை எல்லாம் உடனே தூக்கில் போட இயலாத சட்டத்தை உடைப்பில் போடனும்.. :(

சுசி said...

பெத்த வயிறு எரியுது.. கொல்லக் கூடாது.. ஆடையே இல்லாம அலைய விடணும் வாழ்நாள் பூரா..

Radhakrishnan said...

கொடுமையான நிகழ்வுகள் உலகில் எல்லா மூலைகளிலும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இவையெல்லாம் செய்திகளாகி போகின்றன. இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் எப்படி தடுப்பது என்று எவருக்குமே தெரியவில்லை என்பதுதான் கொடுமையான விசயம்.

பாவம் பெற்றோர்கள். பாவம் அந்த பச்சிளம் குழந்தைகள். கோபம் மட்டுமே கொள்ளும் சமுதாயம்.

மற்றொரு கொடுமையான நிகழ்வு நடக்காத வண்ணம் உலகை காத்தருளுங்கள் மனிதர்களே.

பழமைபேசி said...

சகோதரிக்கு வணக்கம்! இன்றைய இந்தியா, 1950-60களின் அமெரிக்கா.

இங்கு அந்த காலகட்டத்தில் என்னவெல்லாம் சமூகப் பிரச்சினைகளாகத் தெரிந்ததோ, அவையாவும் இன்றைய இந்தியாவின் பிரச்சினைகள்.

பின்நவீனத்துவம்! நவீன அமெரிக்கா யுகத்திற்குப் பிறகு, அமெரிக்கச் சமூகத்தில் ஏற்பட்ட வழுக்களைக் களைந்த காலம்.

ஆக, பின்னவீனத்துவ அமெரிக்காவை நேரிடையாக இந்தியா பின்பற்ற வேண்டும். அதைவிடுத்து, அவர்கள் சென்ற பாதையிலேதான் நாங்களும் செல்வோம் எனச் செய்தால்... அத்தனை இடையூறும் வரும். அவர்கள் ஏற்பட்ட வழுக்களைக் களைந்தார்கள். இந்தியாவில் அதுவும் எளிதான காரியம் அல்ல.

ஒன்று, மேற்கத்திய நாகரிகத்தை அறவே புறக்கணிக்க வேண்டும். அல்லது அவர்களது இன்றைய, சமகாலப் பழக்க வழக்கங்களைக் கையாள் வேண்டும். இரண்டும் அற்று இருந்தால், இது போல இன்னும் நிறைய இடர்கள் நிக்ழ்வது காலத்தின் கட்டாயம்.

பள்ளி வாகனம் அல்லது பெற்றோர் வசம், அதுவும் முறையான அடையாள அட்டை இருந்தால் மட்டுமே இங்கு குழந்தைகளை ஒப்படைப்பர்.

நான் கோவையில் கண்டது இதுதான்... எத்தனை சொகுசுந்துகளில் குழந்தைகளின் பெயர்கள்... மேலும் அலைபேசி எண்??

காலை பதினொரு மணிக்கு, அந்த எண்ணுக்கு அழைத்து, காரில் கண்ட குழந்தையின் பெயரைச் சொல்லிச் சிலாகித்ததுமே, அம்மாவானவள் நெகிழ்ந்து, பேசுபவரின் ஏமாற்றுத் திட்ட வலைக்குள் வீழ்ந்தது நான் நேரில் கண்ட காட்சி... இப்படி எத்தனை, எத்தனை, சமூகச் சீர்கேடுகளோ???

சகாதேவன் said...

இன்றைய செய்தி. ரமேஷ் என்பவரின் மகன் கீர்த்திவாசனை கடத்தி 3 கோடி கேட்டார்களாம்.
1 கோடி தந்து அவனை ரமேஷ் மீட்டாராம். என்ன நடக்கிறது நம் நாட்டில்?
சகாதேவன்

மணிஜி said...

சொல்ல ஒன்றும் தோன்றவில்லை..தினமலரில் முழுப்பக்கம் செய்தி போட்டிருந்தார்கள்...படிக்கவே முடியவில்லை. டெக்கான் கிரனிக்கலில் போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர் சொல்கிறார்..என் வாழ்நாளில் இதைப் போன்ற வன்முறையை பார்த்ததில்லை.இனி என்னால் தூங்கமுடியுமா என்று தெரியவில்லை

போளூர் தயாநிதி said...

tanimanitha ozhukkak kedigal ivaigal sattangal mattum ithai tukkathu ulavil koorugalai sezhumaiyakka nalla manithanaga payirchigal thevai
polurdhayanithi

Sriakila said...

பேப்பரில் குழந்தைகளின் செய்தியைப் படித்ததிலிருந்து என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. 4 வயது பெண் குழந்தைக்குத் தாயான எனக்குக் கோபமும், அழுகையும் தான் வருகிறது.

இப்போதே என் குழந்தைக்கு என்னுடைய ஃபோன் நம்பர், அவளுடைய அப்பாவின் ஃபோன் நம்பர், என்னுடைய வீட்டு முகவரி அனைத்தையும் சொல்லிக் கொடுத்து விட்டேன். ஆனாலும் இது போன்ற செய்திகளைப் படிக்கும் போது மனதை மிகவும் அழுத்துகிறது.

இந்தக் கொடூரச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்றக் கொடூரங்கள் நடக்காமல் இருக்கத் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும். சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

அவசியமானப் பதிவு. நன்றி!

butterfly Surya said...

கொடுமை. யாரைத்தான் நம்புவதோ..??

Post a Comment

வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க