Monday, March 26, 2012

நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை போட்டி முடிவுகள்


நேசம் கதை கட்டுரை குறும்பட போட்டிகள் அறிவித்து சரியாக மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் எந்த வித வரவேற்பும் இல்லாமல் இருந்தது. பதிவர்களுக்கு என்று இருந்ததை பொதுவாக என்று மாற்றும் எண்ணம் கூட தோன்றியது.  முடிவு தேதி நெருங்க கதைகள் வந்த வண்ணம் இருந்தது. வந்திருந்த மொத்த கதைகளில் சுமார் 25 கதைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடுவர் குழுவினரின் இறுதி பட்டியலில் வந்தது. அதிலிருந்து சிறந்த முதல் மூன்று கதைகளூம் ஆறுதல் பரிசாக நான்கு கதைகளும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இறுதி சுற்றில் தேர்வான கதைகள் நேசம் வலைப்பூவில் வெளியிடப்பட்டு சான்றிதழ் அனுப்பப்படும். ஒரு நல்ல காரியத்திற்காக தோள்கொடுத்த அனைவருக்கும் நன்றி.


நான்கு ஆறுதல் பரிசுகளாக

1. பதிவர் ஆசியா உமர் -  கதை  - வலி 

நடுவர்கள் கருத்து : 

ஓரளவுக்கு வட்டார வழக்கு இயல்பான கதை ஓட்டம் கொடுக்கிறது.  ஏதோ இரண்டொரு நாட்களில் வாய் புற்றுநோய் பெருமளவு பரவிவிடுவது போல் காண்பிப்பது சற்று இடறுகிறது.  பெத்தாவை மொத்தமாக கைவிட்டுவிடாமல் காப்பாற்றி இருக்கலாம்.  இயல்பான வசனங்கள் பெரும் பலம்.  எதுவும் புதியதாக நிகழாமல் எதிர்பார்த்தபடியே முடிந்து போவது கதையின் பலவீனம்.

2. பதிவர் தினேஷ் ராம் -   கதை   - ஜொள்ளன் 

நடுவர்கள் கருத்து : 


சிறு குழந்தையின் வரவால் நோயாளி நமசிவாயம் குணம் பெறுவதை அழகாக சொல்லியிருக்கிறார்.  கதையின் விவரணைகள் அருமை.  கதையில் சில பாத்திரங்களுக்கு (நமசிவாயம், பங்காளி ஆறுமுகம், கதிரேசன்) பெயர் இருக்கிறது.  சில பாத்திரங்களுக்கு பெயரில்லை (நமசிவாயத்தின் மகன், மனைவி போன்றோர்).  கதையின் வடிவமைப்பு நன்றாக இருக்கிறது.  நல்ல முயற்சி.


3. பதிவர் விச்சு - கதை உதிர்ந்த சிறகுகள் 

நடுவர்கள் கருத்து :


’நாந்தானே அண்ணியைக் கொன்னுட்டேன். இந்தப்பாவியை மன்னிச்சிரு’ என்று சங்கையாவின் தங்கை கதறுவதோடு கதை ஆரம்பித்திருந்தால இன்னும் விறுவிறுப்பாக தொடங்கியிருக்கும். முதலில் வரும் இழவு வீட்டு வர்ணனை அழுத்தமாக இல்லாமல் இழுவையாக தோன்றினாலும், நல்ல கதைக் களன்தான். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவோம் என்று சங்கையா நினைத்துக் கொள்வது பொருத்தமான முடிவு. கதை என்னமோ முழுமையாக வெளிப்படாதது போல ஒரு உணர்வு.


4. 
பதிவர் தேவராஜ் விட்டலன் -   கதை   - முகங்கள்


கர்ப்ப புற்றுநோய் பற்றி நிறைய தகவல்களும், சிகிச்சை முறைகளும் சாதகமான முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.  கதை நடக்கும் சூழலைப் பற்றிய வர்ணனைகள் நன்றாக இருக்கின்றன.  இன்னும் சிறிது மெருகேற்றியிருக்கலாம்.


மூன்றாவது இடம் - பதிவர் கார்த்திக் பாலா- கதை - அப்பா


நடுவர்கள் கருத்து : 


தலைப்புக்கு பொருத்தமான கல்யாண்ஜியின் கவிதையோடு துவங்குகிறது.  ஆனால் இது கதையா, அல்லது கட்டுரையா என்று ஒரு சந்தேகம் நிழலாடுகிறது. புற்றுநோய் என்றாலே ப்ளட் கேன்சர், லங்க் கேன்சர் என்று யோசிக்காமல் soft tissue sarcoma மாதிரியான நோய்களை யோசித்ததற்கு பாராட்டுகள்.  நோய் முற்றுமுன்னரே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளை சரியாக செருகியிருக்கிறார் கதாசிரியர். கதை முடியும்போது ஒரு நிமிடம் நாமும் கதைசொல்லியின் அப்பாவிற்காக பிரார்த்திக்கிறோம்.  ஆனால் கதை மட்டும் முடிவடையாத உணர்வு எஞ்சி நிற்கிறது.



இரண்டாவது இடம் - பதிவர் ஸ்டார்ஜன் - கதை - பொழுதுவிடியட்டும்

நடுவர்கள் கருத்து :


தன்மையில் கதை சொல்லும்பாணியில் ஒரு 'திடுக்' முடிவு கொடுத்திருக்கிறார் கதாசிரியர்.  கிராமிய வழக்கினை நன்றாகவே பயன்படுதியிருக்கிறார்.  அந்த பிச்சை பாத்திரம் ஏதோ பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.  இறுதியில் செல்விக்கு நிரந்தர தீர்வு எதுவும் ஏற்படாமல் போனதுதான் சோகம். இன்னும் கொஞ்சம் அடர்த்தியாக இருந்திருந்தால் நல்ல   கதையாக பரிமளித்திருக்கும்.


முதலிடம் - பதிவர் அப்பாவி தங்கமணி - கதை - ஆசிர்வாதம்  

நடுவர்கள் கருத்து :


சிறுகதைக்கான எல்லா அம்சஙக்ளும் நிறைந்திருக்கிறது. இயல்பான உரையாடல், கனமான செண்டிமெண்ட், பாந்தமான தலைப்பு, அளவான டெக்னிகல் சமாச்சாரஙக்ள் என்று நிறைவான கலவை. வலிய திணிக்கபப்ட்ட சோகமாக இல்லாமல் பொருத்தமாக இருந்தது முடிவு.  வாழ்த்துகள்.


பரிசுகள் ஏற்கனவே அறிவித்திருந்த படி முதல் பரிசு ரூபாய் 5000, இரண்டாம் பரிசு ரூபாய் 3000, இரண்டாம் பரிசு ரூபாய் 2000. ஆறுதல் பரிசுகளாக நான்கு சிறுகதைகள் ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள புத்தக கூப்பன்கள் பெறுகிறது.


இந்த பரிசுகள் திருப்பூர் பதிவர்களின் அமைப்பான சேர்தளம் ஒருங்கிணைப்பில் வரும் ஏப்ரல் ஒன்று அன்று மாலை 5 மணிக்கு திருப்பூர் டைமண்ட் தியேட்டர் எதிரில் உள்ள அரங்கில் நடைபெறுகிறது. பரிசு பெற்றவர்களின் நேரில் வர இயலும் நண்பர்கள் தயவுசெய்து மின்னஞ்சலில் தெரிவிக்கவும். நிகழ்வுகள் குறித்த பதிவு நாளை வெளியிடப்படும்.

பரிசு பெற்ற அனைவருக்கும் நேசம் சார்பில் வாழ்த்துகளும் நன்றிகளும்.

6 comments:

கோபிநாத் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;-)

geethasmbsvm6 said...

பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

geethasmbsvm6 said...

தொடர

வெங்கட் நாகராஜ் said...

பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்....

Unknown said...

நேசம் அமைப்புக்கும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!

விச்சு said...

நேசம் அமைப்பின் நிர்வாகி தாங்கள்தானா.. தங்களின் கூகுள் +ல் உள்ள கமெண்டுகளை நிறைய தடவை படித்துள்ளேன். போனில் பேசும்போது தாங்கள்தான் என அறியவில்லை. மன்னிக்கவும். போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Post a Comment

வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க